Show all

பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழு! அரசுப்பள்ளிகள் மென்மேலும் தரம் உயர்ந்து, வளர்ச்சி அடையும் வகைக்கு

அரசுப்பள்ளிகள் மென்மேலும் தரம் உயர்ந்து, வளர்ச்சி அடையும் வகைக்கு, பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்களை தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

08,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்களை தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், மாணவர்கள் இடை நின்றல் போன்றவற்றை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் செயல் முறைகள் குறித்து பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள 1712 அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தொடர்பான பெற்றோர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். நகர மன்ற தலைவி பரிதா நவாப், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் விரைவில் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட உள்ளது 20 பேர் கொண்ட இந்தக் குழுவில் இரண்டு உள்ளாட்சி பேராளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த குழு மாதம்தோறும் அரசு பள்ளிக்கூடத்தில் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தி, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளான கூடுதல் கட்டிடங்கள், வகுப்பறைகள், கழிப்பிடங்கள், சமையல் கூடம், மற்றும் குடிநீர், போன்ற தேவைகளை குறித்தும் விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி வைத்து வசதிகளை பெறலாம்.

மேலும், பள்ளி மாணவ மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள், வகுப்பில் நடத்தக்கூடிய பாடங்கள் குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்யலாம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, அரசு பள்ளியில் தேவையான அடிப்படை மற்றும் முழு கற்றல் கல்வியும் கிடைக்கிறதா என கண்டறிய முடியும் என தெரிவித்தார்.

இந்தக் குழுக்கள் மூலமாக குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறையை தடுக்கமுடியும். மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தடுக்க ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு பெண்கல்வி விழுக்காடு மற்றும் பெற்றோர் போதிய விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றைக் காட்டுகிறது என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள், தமிழ்நாடு அரசின் இந்த வகை பள்ளி மேலாண்மை குழுக்கள் கூட்டம் உருவாக்கப்படுவது, மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பையும் அளிப்பதாக கூறினர். இந்த குழுக்கள் மூலம் அரசுப்பள்ளிகள் மென்மேலும் தரம் உயர்ந்து, வளர்ச்சி அடையும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை குழுக்கள் மூலமாக பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையை மௌவல் செய்திகள் மனமுவந்து பாராட்டுகிறது. தமிழ்மக்களிடம் இருந்து தன்னூக்கமாக இந்த வகை முன்னெடுப்பு நிகழ வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாம் கருத்து பதிவிட்டு வந்து கொண்டிருக்கிறோம். இதை அரசே முன்னெடுத்திருப்பது மிகச்சிறப்பு என்கிற வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி மகிழ்கிறோம். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,195.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.