Show all

மரபுரிமைக்கே வெற்றி! வேதா நிலையத்தின் சாவியை தீபா தீபக்கிடம் ஒப்படைக்க உத்தரவு

வேதா நிலையத்தின் சாவியை 3 கிழமைகளில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் போயஸ் தோட்ட  இல்லம் (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக செயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மற்றும் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேதா நிலையம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மறைந்த முதல்வர் செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் களையப்படுவதாக உயர் அறங்கூற்றுமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், வேதா நிலையத்தின் சாவியை 3 கிழமைகளில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. வேதா நிலையத்துக்கு இழப்பீடாக செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

செயலலிதாவுக்கு வேதா நிலையம், பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடம் எதற்கு? என அறங்கூற்றுவர் கேள்வி எழுப்பினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.