Show all

இந்தியக் கூட்டு கலாசார நாட்டில், தமிழ் மொழி, இனத்தின் அதிகாரம்! என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும்: வைரமுத்து

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றினார். விழாவிற்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்ற ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர் நாகமுத்து தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் முன்னிலை வகித்தார்.

வைரமுத்து அவர்கள் ஆற்றிய உரை:

மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு கொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம் தான் இந்த தமிழாற்றுப்படை. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் 4 நூல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் என்று பொருள்.

பக்தர்களை முருகனை நோக்கி ஆற்றுப்படுத்தும் இலக்கியத்திற்கு திருமுருகாற்றுப்படை என்று பெயர். அந்த அடிப்படையில் புதிய தலைமுறையை தமிழை நோக்கி ஆற்றுப்படுத்தும் ஆய்வு கட்டுரைகள் என்பதனால் இதற்குத் ‘தமிழாற்றுப்படை என்று தலைப்பிட்டேன்.

திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில், 13-ம் கட்டுரையாக தமிழை ஆண்டாள் என்று ஆண்டாளை எழுதினேன். 14-ம் ஆளுமையாக மறைமலையடிகளை ஆய்வு செய்து இப்போது அரங்கேற்றுகிறேன். தமிழை முன்னிறுத்துவதும் தமிழ் மொழியை புதுப்பிப்பதுமான தேவை இந்த தொழில்நுட்ப யுகத்தில் மிகுந்திருக்கிறது. மொழியை வெறும் ஒலிக்கூட்டமென்றோ, கருத்து விளக்கக் கருவியென்றோ கருதிவிட முடியாது. இந்தியா போன்ற கூட்டு கலாசாரம் உள்ள ஒரு நாட்டில் மொழி என்பது ஓர் இனத்தின் அதிகாரம் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

உறங்கிக்கிடந்த தமிழுணர்வும் இன உணர்வும் அண்மையில் உயிர்த்துடிப்போடு எழுந்து நிற்பது கண்டு தமிழ் சமூகம் சிலிர்த்து நிற்கிறது. ஒரு மொழி பெருமையும் உரிமையும் பெறவேண்டும் என்றால் அதிகார மையங்களில் அது நின்று நிலவ வேண்டும். மாநில அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டுக்குள் இயங்கும் நடுவண் அரசு அலுவலகங்கள், அறங்கூற்றுமன்றங்கள், கல்விக்கூடங்கள், ஊடகங்களில் ஓர் இனத்தின் அன்றாட பேச்சு வழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும்.

அறங்கூற்றுமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் திகழ வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு. குடிஅரசுத் தலைவருக்கு, 13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (30.10.2017) ஒரு கடிதம் எழுதியிருந்தேன். ‘கொச்சியில் நடந்த ஒரு விழாவில் அறங்கூற்று மன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். அதனை வரவேற்கிறேன். அதை இந்தியாவின் குரலாக பார்க்கிறேன் என்று வாழ்த்தி எழுதியிருந்தேன். ஆனால், குடிஅரசுத் தலைவர் இப்படி குரல்கொடுத்த பின்னும் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க நடுவண் அரசு அண்மையில் மறுத்திருக்கிறது.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள அறங்கூற்றுமன்றங்களில் ஹிந்தியில் தீர்ப்பு அளிப்பது நடைமுறையில் இருக்கும்போது தமிழில் தீர்ப்பு அளிப்பது மட்டும் சாத்தியம் ஆகாதா? இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததா? சிவபெருமான் தன் உடுக்கை எடுத்தான். ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது. மறுபக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று நம்புகிறவர்களின் நம்பிக்கை பொய்யா? வெகுவிரைவில் தமிழ் வழக்காடு மொழியாகித் தீர வேண்டும்.

ஆதி வரலாற்றில் இருந்து தொடங்கினால் தமிழர்களின் மொழிபேசும் எல்லை சுருங்கியே வந்திருக்கிறது. தமிழர்களின் ஆதிநிலமான லெமூரியா (குமரிக்;) கண்டம் மடகாஸ்கர் வரை நீண்டு கிடந்தது. அது கடற்கோளில் மூழ்கிப்போன பிறகு சிந்து சமவெளி வரைக்கும் தமிழ் கலாசாரம் பரவி இருந்ததாக கருதப்படுகிறது. திராவிட மொழி குடும்பம் தோன்றுவதற்கு முன் தென்னிந்தியா முழுக்க தமிழ் பரவி இருந்தது. இன்று தென்னிந்தியாவில் ஒரு பகுதியாக வெறும் 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டராக சுருங்கியிருக்கிறது. இது மேலும் சுருங்குவதற்கு தமிழ் சம்மதிக்காது. தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள்.

அதனால் தமிழ் உணர்வு மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இனி எந்த கட்சியும் தமிழ்மொழி குறித்த கொள்கை வரைவை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும். தமிழ் பண்பாடு அன்பையும் சகிப்புத் தன்மையையும் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. அதை முடிந்தவரை பின்பற்றுவோம். சுத்தம் என்பது கண்காணாத இடத்தை தூய்மையாக வைத்திருப்பது. பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு. ஒழுக்கம் என்பது சாட்சி இல்லாத இடத்தில் நேர்மையாக இருப்பது. அதைப்போல தாக்குவதல்ல வீரம், தாங்குவதே வீரம். பொறுமை காப்போம், ஒற்றுமையால் தமிழ் இனத்தை கட்டி காப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், இயக்குநர் பாரதிராஜா, முன்னாள் அறங்கூற்றுவர் பாஷா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நடிகை கஸ்தூரி மற்றும் மறைமலை அடிகளாரின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் அலைமோதியது! ஆகா எழுந்து பார் யுகப்புரட்சி! என்கிற பாரதியின் வரிகள். சிறுத்தையே வெளியில் வா! என்கிற பாரதிதாசன் வரிகள். கெஞ்சுவதில்லை பிறர்பால், அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை என்;கிற பாவலேறேறு பொருஞ்சத்திரனார் உணர்ச்சி வரிகள் ஆகியவற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து நெஞ்சை நிமிரச் செய்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,697

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.