Show all

முதல்வர் அஞ்சிடார்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம்

அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ, அனைத்து சாதியினரும் போற்றியர் ஆவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத சிலர் திட்டமிட்டு உருட்டல், மிரட்டல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். என்று தமிழ்நாட்டு மக்களை தான் புரிந்து கொண்டுள்ளதை விளக்கியுள்ளார் முதல்வர்.

01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பேசினார்கள்.

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் இன்று வரவுசெலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும்போது, அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகும் திட்டம் பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதுபற்றி தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பொருட்டு- அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

அனைத்து சாதியினரும் போற்றியர் ஆக வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன்படி தமிழ்நாட்டில் காலியாக இருந்த 58 இடங்களுக்கு போற்றியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத் தளங்களில் அரசியல் நடத்துபவர்கள் நடுவே மக்களை தேடி அரசியல் செய்யும் தலைவராக நமது முதல்வர் உள்ளார்.

திருச்சி நாகநாத சாமி கோவிலில் போற்றியராகப் பணிபுரிந்தவர் வேறு கோவில்களிலும் போற்றியராகப் பணிபுரிகிறார். இதையடுத்து, நாகநாத சாமி கோவிலுக்கு வேல்முருகன் என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் சமூக வலைத் தளங்களில் ஏற்கனவே பணிபுரிந்த போற்றியர்களை நீக்கிவிட்டு புதிதாக போற்றியர்களை நியமித்ததாக தவறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். 70 அகவையைக் கடந்தும் சில கோவில்களில் போற்றியர்கள் பணியில் நீடிக்கிறார்கள்.

அனைத்து சாதியினரும் போற்றியராகும் திட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் அவதூறுகளை பரப்புகிறார்கள். இது போன்ற உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் எங்கள் முதல்வர் பயப்படமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  விளக்கமளித்து பேசியதாவது:-

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன்.

நம்மை ஆளாக்கிய நம்முடைய தந்தை பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக கலைஞர், அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தார்.

அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; அதற்கான பணி ஆணைகளை நாம் வழங்கியிருக்கிறோம்.

ஆனால், சிலர், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இங்கேகூட நம்முடைய அமைச்சர் சொல்கிறபோது, ‘ஊடகத்திலே’ என்று சொன்னார். ஊடகத் துறையினரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சிலர் திட்டமிட்டு, சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு உறுதியாக எடுக்கும். அதிலே எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடம் அளிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.

ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலர் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.