Show all

தோழமை கட்சிகளின் எதிர்ப்பு நல்லது! இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தமிழ்விரோத சக்திகள் நுழைந்து விடாமல் தற்காத்துக்கொள்ள

தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி- இத்திட்டம் குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும், சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியும், ஒன்றிய பாஜக அரசின் கல்வித் திட்டத்தை அங்கீகரிக்கும் வகைக்கானதாகவும் அமையக்கூடும் என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ளும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் இயங்கலையில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் வகைக்கு இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பட்டப்படிப்பு நிறைவு செய்த தன்னார்வலர்கள் இயங்கலை மூலமாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்கள், அன்றாடம் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என்னும் முறையில் பாடங்களை சொல்லிக் கொடுக்க உள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 

பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இந்த வகுப்புகள் செயல்பட உள்ளன. பனிரெண்டாம் வகுப்பு வரையில் படித்த மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க உள்ளனர். 

இதன்படி, மொத்தமாக 17 லட்சம் தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்துக்காக தேவைப்படுகிறார்கள். தொடர்ந்து ஆறு மாதத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு முதலாவதாக பாஜக வரவேற்பு தெரிவித்திருப்பது, சமூக ஆர்வலர்கள் நடுவே இத்திட்டத்தின் மீது ஐயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி- இத்திட்டம் குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும், சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியும், ஒன்றிய பாஜக அரசின் கல்வித் திட்டத்தை அங்கீகரிக்கும் வகைக்கானதாகவும் அமையக்கூடும் என்று விளக்கம் அளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பும் இந்ததிட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

இதனிடையே அமைச்சர் அன்பில் மகேசு, தன்னார்வலர்களை தேர்வு செய்வதில் எச்சரிக்கையாக இருப்போம். அவர்களின் பின்புலத்தை விசாரிப்போம். தோழமை கட்சிகளின் எதிர்ப்பை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வோம் என்று கூறினார். 

இந்நிலையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக சில மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்திற்குத் தெரிய வந்துள்ளது. அவற்றை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிக்கையும் வெளியிட்டார். 

அந்த அறிக்கையில், மானுடம் இதுவரை சந்தித்திராத ஒரு பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அதிக இழப்பைச் சந்தித்தவர்கள் பள்ளிக் குழந்தைகளே. பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக, முழுவதும் மாநில அரசின் நிதியில் செயல்படுத்த இருக்கும் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரிசெய்யவும், வேறு எந்த மாநிலமும், எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத நிலையில், ஒரு முன்னோடித் திட்டமாக மாணவச் செல்வங்களும், அவர் தம் பெற்றோர்களும் எளிதில் அணுகிப் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களைத் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும். 

இதுவரை 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கையரும் என மொத்தம் 86 ஆயிரத்து 550 நபர்கள் இத்திட்டத்தில் சேவையாற்றப் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்தவர்களின் கல்வித் தகுதி, இருப்பிடம், முன்னனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவர். 

இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளாட்சி அமைப்புகளின் பேராளர்கள் இடம் பெறுவர். தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கொரோனா பெருந்தொற்றால், கடந்த 19 மாத காலத்தில், கற்றலில் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்யும் பெரும்பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக விளங்கும் வகையிலேயே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக சில மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்திற்குத் தெரிய வந்துள்ளது. அவற்றை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. 

தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர். 

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் நேரடியாகச் சென்று பள்ளி செல்லும் அகவையுள்ள குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்படும். மேலும், வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். 

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் உறுதியாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 

மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும். மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக, ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்திற்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுவர். எனவே, அனைத்துத் தரப்பு மக்களும், இத்திட்டத்தினை ஆதரித்து, நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திடக் கைகோத்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தோழமை கட்சிகளின் எதிர்ப்பு நல்லது! இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தமிழ்விரோத சக்திகள் நுழைந்து விடாமல் தற்காத்துக்கொள்ள, தமிழ்நாடு அரசுக்கு விழிப்புணர்வு ஊட்டி எச்சரித்து நெறிப்படுத்தியுள்ள வகைக்கு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,051.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.