Show all

ஆடிப் பெருக்கு விழா

இன்று நாள் 18, ஆடிமாதம், தமிழ்த் தொடர் ஆண்டு 5119.

இன்று ஆடிப் பெருக்கு விழா.

பொன்படு நெடுவரையில் தோன்றி பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர்.

பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்னும் பெயரும் உண்டு.

(ஆவூர் மூலங்கிழார் - புறநானூறு 166)

குடகு நாட்டு மலை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழகத்தில் பொன்படு நெடுவரை என்று பெயரிடப்பட்டிருந்தது. அது தமிழர் நிலமாகவும் இருந்தது.

குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4,186 அடி உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர்.

காவிரி பிறந்த இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையுள்ள கழிமுகப் பகுதி தமிழ் மக்களால் பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகக் மழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி நீர்ப் பெருக்கு விழா கொண்டாடப் பட்டு வருகிறது.

இன்றும் மகிழ்வோடு கொண்டாடப் பட்டது ஆனால்

  • பெருக்கு இல்லாமல்.

கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் தமிழ் ஆண்டு 3090ல் கல்லணையைக் கட்டிணான்.

கல்லணையின் அகவை: 5119-3090 =2029ஆண்டுகள்.

மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள முதலாவது பழைய அணை.

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது செல்லக்கூடிய குறைந்த அளவு தண்ணீரிலும் ஏராளமான பொதுமக்கள் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடினர்.

காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் ஓடாத காரணத்தால் கழிமுக மாவட்டங்களில் களையிழந்து உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா கட்ட காவிரியில் குறைந்த அளவே கூட்டம் காணப்படுகிறது. ஐவகை சோறு சமைத்து சீர் வைத்து காவிரியை வணங்கினர்.

திருவையாறில் மணலில் படையலிட்டு வணங்கினர். பம்ப் செட் தண்ணீரில் புனித நீராடினர். திருவாரூரில் கமலாலய குளத்தில் பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

திருச்சி மாவட்டம் அம்மா மண்டபத்தில் காவிரி ஆறு ஓடவில்லை. மணல் மட்டுமே காணப்படுகிறது. எனினும் ஆடிப்பெருக்கான இன்று ஏராளமானோர் ஆற்று மணலில் படையலிட்டு காவிரி தாயை வணங்கினர்.

அடுத்த ஆண்டாவது காவிரியில் நீர்ப் பெருக்கெடுக்க வேண்டும் என்று வணங்கினர்

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.