Show all

சென்னையில் கடும் கட்டுப்பாடுகள்! வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்கும், ஆங்கிலப் புத்தாண்டு, கொண்டாட்டங்களுக்கு

ஆங்கிலப் புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் குறுவி (வைரஸ்) பரவல் தடுப்பு காரணமாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, ஆங்கிலப் புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் குறுவிப் பரவலை தடுக்கவும், தமிழ்நாடு அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேலும், விழாக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமைக்ரான் குறுவித் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் வருகிற வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 2022ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதையொட்டி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னைப் பெருநகரில், பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும், சென்னை பெருநகரில் அனைத்து மக்களும் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் பட்சத்தில், தற்போதைய கொரோனா மற்றும் ஒமைக்ரான் குறுவிப் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கொரோனா நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து, மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் 

ஆங்கிலப் புத்தாண்டு வணிகப்பாடான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது எனவும், உணவகங்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன எனவும், உணவக ஊழியர்கள் அனைவரும் 2 தடவை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என உணவக நிர்வாகம் என கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து உணவகங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை என கூறியுள்ள சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்க் கோயில்கள், கிறுத்துவக் கோயில்கள், முகமதியக் கோயில்கள் உட்பட அனைத்து வழிபாட்டுதலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும் எனவும், அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி, அனைத்து நுழைவு வாயில்களிலும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று இரவு முதன்மை இடங்களில் சென்னை பெருநகர காவல் துறையினர் சார்பில் வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தும், அனைத்து முதன்மை இடங்களில் ரோந்து செல்வார்கள் எனவும், கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களிலும் ஈடுபடுவோர், பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொது மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் குறுவித் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு களியாட்டங்களில் ஈடுபட்டு தேவையற்ற விபத்துக்கள் நிகழாமல் தவிர்த்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,112. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.