Show all

அவரே உறுதிப்படுத்திய தகவல்! துள்ளுப்பந்து (டென்னிஸ்) வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது

தற்போது சிறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. தங்க மங்கை பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையை நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். இதேபோல, மகளிர் மட்டைப்பந்து வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இந்த வரிசையில் துள்ளுப்பந்து வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை கதையும் படமாகிறது.

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரைப் புகழ்உச்சங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை திரைப்படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இயக்குனர்கள். 

அந்த வரிசையில், துள்ளுப்பந்து (டென்னிஸ்) வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது இதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மட்டைப்பந்து வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் திரையில் கொணரப்பட நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது சிறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். தங்கமங்கை பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையை நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். இதேபோல, மகளிர் மட்டைப்பந்து வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் டாப்ஸி நடிக்கிறார்.

இந்த வரிசையில் துள்ளுப்பந்து வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை கதையும் படமாகிறது. இந்தப் படத்தை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். இதை சானியா மிர்சா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, என் கதை படமாக இருப்பது உண்மைதான். படத்துக்காக கதாசிரியர்களுடன் நானும் அமர இருக்கிறேன் என்றார் 
பலருக்கு விளையாட்டு வீரர்களின் வீராங்கனைகளின் நடவடிக்கைகள், அவர்களின் கடின உழைப்பு, பெற்றோர்களின் தியாகம் போன்றவை தெரிவதில்லை. அவர்கள் கவர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் நானும் படத்தின் உருவாக்கத்தில் இணைந்திருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள், யார் இயக்கப் போகிறார் என்கிற எதுவும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சானியா, யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை ஆராய்ந்து படக்குழு முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். ஆனாலும், சானியா மிர்சா வேடத்தில் நடிக்க கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.