Show all

பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- முத்தமிழ்!

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை மீட்பதற்கானது இந்தக் கட்டுரை

23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம்.

அவ்வகையாக நாம் தொலைத்துள்ள பல நூறு சொற்களின் பொருள் பொதிந்த வரையறைகளை தெரிவிக்க 'பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்' என்கிற தலைப்பில், தொடர்ந்து கட்டுரைகள் படைக்கவிருக்கிறேன். 'முத்தமிழ்' என்ற சொல்லின் வரையறையை இந்தக் கட்டுரையில் முன்னெடுத்துள்ளேன். 

முத்தமிழ்: தமிழில் 'முத்தமிழ்' என்று வழங்கப்படுகிற சொல் நாடகத்தமிழ், இசைத்தமிழ், என்கிற இரண்டு கலைகள் பற்றியும், இயற்றமிழ் என்பது 'சயின்ஸ் இன் தமிழ்' என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான இயற்கையின் கோட்பாடு நடைமுறை குறித்த அறிவு பற்றியுமான மூன்று துறைகளின் தமிழ் ஆகும். அவற்றில் இயற்றமிழ் குறித்து கீழ்கண்ட இணைப்பு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
http://www.news.mowval.in/Editorial/katturai/Iyal-235.html

இந்தக் கட்டுரையில் முத்தமிழின் இரண்டு தமிழ்க் கலைகளான நாடகத்தமிழ் குறித்தும், இசைத்தமிழ் குறித்தும் காண்போம். பொதுவாக முத்தமிழை இயல், இசை, நாடகம் என்று அண்மையிலிருந்து தொன்மை வரை வரிசைப்படுத்துவது வழக்கம். ஆக தொன்மை அடிப்படையில் முதன்மையான தமிழ் நாடகத்தமிழே ஆகும்.

நாடகத்தமிழின் காலம் ஏறத்தாழ ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று அண்மைக்கால, பல்வேறுபட்ட மொழியியல் ஆய்வுகளைப் பொருத்தி, நிறுவ முயலலாம். அந்த நாடகத்தமிழ் என்பது ஆடல், விளையாடல், போராடல் என்கிற கலைகள் ஆகும். இந்தக் கலைகளே குடும்ப சமூக ஒருங்கிணைப்பிற்கான மற்றும் எண்ணப் பரிமாற்றத்திற்கான கருவிகளாகும். இதை உடலசைவு மொழி, நடிப்பு மொழி, சைகை மொழி என்றெல்லாம் இக்காலத்தில் உலகினர் பட்டியல் இடுகின்றனர். ஆனால் நமக்கு தமிழின் தொன்மையாக ஆடல், விளையாடல், போராடல் என்கிற நாடகத்தமிழ்தான்.

ஆடற்கலையை, தாம், பிறந்த சில மணி நேரங்களில் துள்ளிக் குதித்து விளையாடும், தாயின் மடியை முட்டிப் பால் அருந்தும் பாலூட்டி விலங்கினங்களோடு பொருத்திப் பார்த்தே உணர முடியும். 

தமிழர்தம் ஆடற்கலை மிகப்பழமையானது. இன்று வரை தொடரும் தமிழர் ஆடற்கலைகளை பட்டியல் இட்டால் அது மிக மிக நீளும்.

அம்மன் கோயில் ஆட்டம், அம்மன் கூத்து, அன்னக்கொடி விழாக்கூத்து, இடையன் இடைச்சி கதை, இருளர் இனமக்களின் ஆட்டம், எக்காளக்கூத்து, உறுமி ஆட்டம், உறியடி ஆட்டம், ஒட்ட நாடகம், ஒயில் கும்மி, ஒயிலாட்டம், கட்டைக் காலாட்டம், கணியான் ஆட்டம், கரகாட்டம், கரடியாட்டம், கருப்பாயி ஆட்டம், கருப்பாயி கூத்து, கழைக்கூத்து, காவடி ஆட்டம், காளை ஆட்டம், கும்மி ஆட்டம், குறத்திக்களி, குறவன் குறத்தி ஆட்டம் குரவைக் கூத்து, கைச்சிலம்பாட்டம், கையுறை பாலைக்கூத்து, கொக்கலிக்கட்டை ஆட்டம், கோணாங்கி ஆட்டம், கோலாட்டம், கோமாளி ஆட்டம், சக்கையாட்டம், சக்கை குச்சியாட்டம், சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், சேர்வையாட்டம், சேலையாட்டம், சேவையாட்டம், சோழவர் ஆட்டம், தப்பாட்டம், தகதாட்டம், தாதராட்டம், தெருக்கூத்து, தோல்பாவை கூத்து, பறை ஆட்டம், பகல்வேடம், பாதவர் கழியல், பாம்பாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயானக்கொள்ளை, மயிலாட்டம், மரக்காலாட்டம், மாடு ஆட்டம், வண்ணான் வண்ணாத்தி கூத்து, வழியாட்டம், வழிகாப்பு நாடகம் என்பனவெல்லாம் ஆடற்கலையில் வருவனவாகும்.

தமிழர் தம் விளையாட்டும் மிகப் பழமையானது. இன்று வரை தொடரும் மற்றும் தொடராத விளையாட்டுக்களைப் பட்டியல் இட்டால் அதுவும் நீளும். 
புனல் விளையாட்டு, பொழில் விளையாட்டு, பந்தாட்டம், ஓணப்பந்து விளையாட்டு, கிட்டிப் புள்ளு, கிளித்தட்டு, தாச்சி, சடுகுடு அல்லது கபடி, எட்டுக்கோடு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் மற்றம் உறியடி, பாரிவேட்டை, கிளி கோடு பாய்தல்,
போர்த்தேங்காய், பல்லாங்குழி, ஒப்பு, இரட்டை மாட்டுப் பந்தயம், மோடி விளையாட்டு, கண்ணாமூச்சி, குழை எடு, பேணி அடித்தல், பேணிப்பந்து, தகரப்பந்து, அம்பெறிதல், கோழிச்சண்டை, வண்டிச்சவாரி, சில்லிக்கோடு, இளவட்டக் கல், கீச்சு மச்சுத் தம்பலம், போளையடி, வெள்ளமடித்தல், சிற்றில், வீடு கட்டி விளையாடுதல், கயிறடித்தல், கப்பல் விடுதல், தோணி விடுதல், குலை குலையாய் முந்திரிக்காய், தேர்கட்டி விளையாட்டு, உப்பு மூட்டை, எறி பந்து, தும்பி விளையாட்டு, தொப்ப விளையாட்டு, எல்லே எல்லே, ஆடு வீடு, ஊஞ்சல், தணையடி அடி, புளியடி புளியடி, ஒப்பு விளையாட்டு, மரமேறல், நீந்தல், ஆறுதல் ஈருருளி, ஓட்டம், புளிச்சல், தலையணைச் சண்டை, கள்ளன் காவலன், பச்சைக் குதிரை, காற்றாடி, எலியும் பூனையும், தட்டா மாலை, சில்லுக் கோடு, கொழுக்கட்டை, பட்டம், பூசணிக்காய் விளையாட்டு, ஓடிப் பிடித்தல் மற்றும் அடிச்சுப் பிடித்தல், ஒளித்துப் பிடித்தல், கண்கட்டிப் பிடித்தல் மற்றும் கண் பொத்தி விளையாட்டு, கண்கட்டி ஓட்டம், கயிறு பாய்தல், சமநிலை பேணுதல், கிடுகு பின்னுதல், ஊசி நூல் கோர்த்தல், தேங்காய் துருவுதல், தட்டாங்கல், பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, வளையல் விளையாட்டு, சோளக்கதிர், குத்து விளையாட்டு, குண்டு விளையாட்டு, வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி விளையாட்டு, தாயக் கட்டை, சொக்கட்டான், கொக்கான், ஆடும் புலியும், பாம்பும் ஏணியும், பாண்டி, பம்பரம், மூன்றுகல் ஆட்டம், செப்புசாமான், உப்புத் தூக்கல், கூட்டாஞ்சோறாக்கல், தத்தைக்கா, சங்கு சக்கரம், பருப்புக்கட, ஒத்தையா ரெட்டையா, கரகர வண்டி, ஒருகுடம் தண்ணி ஊத்தி, கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, நொண்டி, சல்லிக்கட்டு, நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் நீச்சல் முழுமையாகக் கற்காதவரை கற்றவர் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.

பந்து விளையாட்டை, பழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார், பஞ்சு, சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம் செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.

அம்மானை விளையாட்டு, பெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும். என்பனவெல்லாம் தமிழர் முன்னெடுத்திருந்த விளையாட்டுக்கள் ஆகும். 

அடுத்த போராடல் குறித்து பெரியதாக இங்கு விளக்க வேண்டியதில்லை. தமிழின் புறத்திணை இலக்கியங்கள் அனைதத்தும் அதை தெளிவாகப்பட்டியல் இட்டுள்ளன. போரினைக் கூட தமிழ் மன்னர்கள், சங்கத்தில் அமைந்த  தமிழ்ச்சான்றோர் கூட்டுச்சிந்தனையில் உருவாக்கிக் கொடுத்த இலக்கணப்படி முன்னெடுத்தனர்.

இன்றைக்கு நாடகத்தமிழ் நடிப்புக் கலையாக மட்டும் கருதப்படுகிறது. அது திரைப்படம், சின்னத்திரை, வலையொளி, குறும்படம், இணையத் தொடர் என்றெல்லாம் வளர்க்கப்பட்டு வருகிறது. 

விளையாட்டில் அரசியல் புகுத்தப்பட்டு, மேல்தட்டு மக்களின் துடுப்பாட்ட விளையாட்டு முதன்மையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

போராட்டம் என்பது மக்களிடம் பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டம், மனிதச் சங்கலி, கதவடைப்பு, ஊர்வலம், முழக்கம் என்று பல்வேறு போராட்டங்களை அரசை இடித்துரைக்க முன்னெடுக்கின்றனர். 

அரசு அடுத்த நாடுகளோடு நட்புறவு பேணவும், பகைமை பேணவும் நிலம், நீர், வான் என முவகை படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன.

இன்றைய நிலையில் தமிழர்- போராட்டம் பேணும் மக்கள் தளத்திலும், நிருவாகம் பேணும் மாநில ஆட்சித்தளத்தில் மட்டும் அமைந்திருக்கின்றனர். அதிகாரம் பேணும், தமிழ் வரையறைகளை அதிகாரமாக நிறுவும் ஆட்சித்தளத்தில் உலகில் எந்த மண்ணிலும் இல்லை. 

அடுத்து இசைத்தமிழ் என்பது, நாடகத்தமிழ் காலத்தின்; தொடர்ச்சியில் இசைப்புத் தமிழாக முன்னெடுக்கப்பட்ட உயிர் பனிரெண்டு மெய் பதினெட்டு என்கிற முப்பது ஒலிகள் ஆகும். அந்த முப்பது ஒலிகளில் தொடக்க ஒலிகள் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்கிற உயிர் நெட்டொலிகளே. அவைகள் அழைப்பிற்கும் ஆர்ப்பரிப்புக்கும் பயன்பட்டவைகள். அதற்குப் பின்னர் அதன் இனமான அ இ உ எ ஒ என்கிற குட்டொலிகள் உருவாகின. அவை ஒத்துழைப்பை தெரிவிக்க எழுந்தவைகள். மூன்றாவதாக உருவாகின க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் மெய்யொலிப்புகள் இருப்பை தெரிவிக்க. 

இந்த ஒலிப்புகளை வைத்து எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற வகையில், தமிழில் இயற்கையாக பலவாயிரம் சொற்கள் தோற்றம் பெறுகின்றன. பாடல்கள் யாப்புகள், செய்யுட்கள், சிந்துகள், கலிப்பாக்கள், வெண்பாக்கள், வஞ்சிப்பாக்கள் என பலவாயிரம் இலக்கியங்கள் தனிமனிதர்களால் இசைக்கப்படுகின்றன. நாடகத்தமிழில் முன்னெடுக்கப்பட்ட எண்ணப்பரிமாற்றம், இசைத்தமிழில் கருத்துப்பரிமாற்றமாக மாற்றம் அடைகிறது. 

அந்தக் காலத்தில் அகநானூறு புறநானூறு என்று எட்டுத் தொகை நூல்கள், பெரும்பாணாற்றுப்படை  மதுரைக்காஞ்சி என்று பத்துப்பாட்டு நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் என்று யாப்புகளாலேயே இத்தனை இலக்கியம் படைத்திருக்கிற போது, தற்காலத்தில் நம்மால் ஒரு வெண்பா எழுதுவது பெரும் இயலாமையாக இருப்பது ஏன் என்று பல நண்பர்கள் என்னிடம் கேள்வி எழுப்பி இருந்திருக்கின்றனர். நானும் அவ்வகையாக சிந்தித்தது உண்டு. 

அக்காலத்தில், சொல்ல வந்த செய்தியை நினைவில் நிறுத்தி மீண்டும் சொல்லும் வகைக்கு அவரவர்களுக்கு வாய்ப்பான ஒரு யாப்பொழுங்கில் கருத்திசைத்தனர். என்பதுதாம் உண்மை. அதற்கு பிற்காலத்தில் யாப்பிலக்கணம் வகுக்கப்பட்டது. அந்த யாப்பிலக்கணத்தில் நாம் பா இயற்ற முனைவது சிரமந்தானே? அதனால்தான் நமக்கு தெரிந்த உரைநடை ஒழுங்கில் தற்போது நாம் கட்டுரைகள் எழுதிக கொண்டிருக்கிறோம், பாக்களின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் உரைநடை. அந்தக் காலத்தில் எழுதி வைப்பதை விட மனப்பாடமாக வைத்துக் கொள்வது எளிது என்கிற நிலையில் யாப்பு ஒழுங்குகள் தேவைப்பட்டன. தற்காலத்தில் எழுதி பாதுகாக்க எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. இன்றைக்கு அனைத்து இலக்கியங்களும் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்படுகின்றன. 

சிறந்த கட்டுரையாக வருவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எழுத்துப் பாணியைப் பின்பற்றத்தானே செய்கிறோம். அந்தப் பாணிகளுக்கு எதிர்காலத்தில் இலக்கணங்கள் எழுதப்படும். அண்ணா பாணியில் கட்டுரை எழுதுவது, இறைஅன்பு பாணியில் கட்டுரை எழுதுவது என்று முயன்றால் அப்போது நமது மரபுரிமையர்களுக்கு சிரமமாகவே இருக்கும்.

தற்போது நாம் இசைத்தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியான இயற்றமிழில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய இயற்றமிழ் அயல் இயல் சார்புகளும் மலைப்புகளும் நிறைந்தாக இருப்பதே நமது கவலை. மீண்டெழுவோம்!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,031.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.