Show all

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது?

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும். 

ஆனால் தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரும்மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழ்ந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்-
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள்.

உலக இனங்கள் அனைத்திலுமே தமிழருக்கு மட்டுமே நாடு பிடித்து அடுத்த மண்ணில் தம்மக்களை குடியமர்த்தும்  எண்ணம் இருந்ததான வரலாறு இல்லை. இதனாலும் தமிழுக்கு அடுத்த மொழிக்கான தொடர்பு நீண்ட நெடுங்காலம் கிட்டாமலே போனது.

இதனால் உலகில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளிலும் தமிழ்மொழி ஒன்று மட்டுமே மிக நீண்ட காலம் எந்த அயல்மொழிகளின் தாக்கமும் இல்லாமல் வளர்ந்த மொழியாகும். 

உலகத்தில் இருக்கிற அத்தனை மொழி ஆய்வாளர்களும், தமிழ் குறித்த ஆய்வில், ஆழமாக இறங்கும்போது, தடுமாறிப் போவார்கள். தங்கள் மொழியோடு உலக மொழிகளுக்கெல்லாம் பலவகையான தொடர்புகள் இருக்கும்போது, இந்தத் தமிழ்மொழி மட்டும் தனித்து காணப்படுகிறதே என்று குழம்பிப் போவார்கள். 

உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் உலக மொழிகளில் தமிழ்மொழி குறித்து மட்டும் ஒரே மாதிரியான ஒருமித்த முடிவுக்கு வரமாட்டார்கள்; யானையைத் தடவிப்பார்த்த கண்பார்வை மாற்றுத் திறனாளிகள் போல இதுவரை வெவ்வேறு முடிவுகளையே தந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.   

உலகின் முதல் கடலோடியாக தமிழன்- கடற்கரை அமைந்த நாடுகளுக்கெல்லாம் வணிகனாகச் சென்ற போது, அந்தந்த  மொழித் தொடர்பு தமிழ் வணிகர்களுக்குக் கிடைத்தது. வணிகத்திற்கு வந்த ஆங்கிலேயர் உலகம் முழுவதும் தங்கள் மொழியான ஆங்கிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, தமிழ் வணிகர்களும் பல கடற்கரை நாடுகளின் மொழிகளில் தமிழின் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதை அந்த நாடுகளின் வரலாறுகளில் தகவல்களாகவும் அருங்காட்சியகங்களில் பொருட்களாகவும் காண முடிகின்றது. 

தமிழ் நான்கு வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் பல கூட்டங்களாக, இமயமலைக் கணவாய்கள் வழியாக, நுழைந்திருந்த ஆரியர்கள், தாம் அப்போது பேசிவந்த பல்வேறு மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆனால் ஆரியர்கள் பேசி வந்த ஈரானிய ஆப்கானிய மொழிகளுக்கு எல்லாம் எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வரும் அமைப்புக்கு எழுத்துக்கள் இன்று வரை கிடையாது. 

உலக மொழிகளில், தமிழைத் தவிர எந்த மொழியிலும், அ ம் மா என்று எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வராது. அம்மாவுக்கு எ எம் எம் எ என்பது போல அந்தந்த மொழிகளின் அத்தனைச் சொற்களுக்கும் ஒரேயொருமுறையாவது ஒவ்வொரு சொல்லுக்கும் அமைக்க வேண்டிய எழுத்தைக் (ஸ்பெல்லிங்) கற்றாக வேண்டும்.

இந்தியாவில் ஆரியர்கள் பேசி வந்த மொழிகளின் குடும்ப மொழிகளாக உருவான அத்தனை மொழிகளும், தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆரிய மொழிகளின் தாக்கத்தால் தமிழிலிருந்து பிரிந்த தென்னக மொழிகளும் ஆரிய மொழிகளை ஒட்டியே தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். உலகில் எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் மொழிகளை- முப்புறமும் கடலும் நான்காவது புறம் பெருமலையும் பாதுகாப்பாக அமைந்த நாவல ‘ந்தேய’ ம் என்று தமிழர் அறிமுகப்படுத்த ஐரோப்பியர் ந்தேயா என்று ஒலித்துப் பதிவு செய்து கொண்ட இந்தியாவில் மட்டுமே காண முடியும். 

உலக இனங்கள் அனைத்திற்கும் தனிமனித சான்றோர்கள் முன்னெடுத்த மதங்களே அடிப்படை. ஆனால் உலகில் தமிழர்களுக்கும் மட்டும் தனிமனித சான்றோர் முன்னெடுத்த மதம் கிடையாது. மாறாக சங்கம் கண்ட தமிழ் அறிஞர்களின் கூட்டுச் சிந்தனையில் விளைந்த பொருள் இலக்கணம் உண்டு. இப்படி தமிழ்மொழிக்கு மட்டுமேயான தனித்துவத்தை எழுத முனைந்தால் சிறப்பான ஒரு புத்தகமே வடிக்கிற அளவுக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.