Show all

மற்றொருவர்! வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் நூறு விழுக்காட்டினரும் ஒரே உயரமாக காட்சியளிப்பார்கள். அறிவாற்றலா? தனித்துவமா? பொருளாதாரமா? அன்பா? நியாயமா? ஆதிகாரமா? கோபமா? பணிவா? எதுவாக இருந்தாலும் சரி. ஒரு தமிழனை இன்னொரு தமிழன் சரிநிகர் என்றால் ஒப்புக் கொள்வான். உயர்ந்தவன் என்றாலோ, தாழ்ந்தவன் என்றாலும் கூட ஒப்புக் கொள்ள மாட்டான். அறைகூவலை எந்தத் தமிழனும் மறுதளிக்க மாட்டான். நியாயத்தை ஒற்றை மனிதனைப் போல ஒட்டு மொத்த தமிழரும் ஒப்புக் கொள்வார்கள். இதுதான் தமிழர் பலம் ; பலவீனம்.

ஆனால் தமிழர் அல்லாதவர்களிடம் ஏதாவது ஒற்றைத் தகுதி தன்னை விடச் சிறப்பாக இருந்தாலே போதும். தமிழன் தான் மட்டுமல்ல, அவன் தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அந்தத் தமிழர் அல்லாதவரை, அங்கிகரிக்கச் செய்வான்.

தமிழன் ஒருவன் உண்மை சொன்னாலே, இன்னொரு தமிழன் ஆய்வுக்கு உட்படுத்தியே ஒப்புக் கொள்வான். தமிழர் அல்லாதவர்கள் பொய் சொன்னால் கூட அவ்வளவாக ஆய்வுக்குட்படுத்த மாட்டான்.

  இதனாலேயே தமிழர் அல்லாதவர்கள், தமிழரை கூட்டம் கூட்டமாக அள்ளிக் கொள்ள முடிகிறது. தமிழர்களிடம், தான் உயர்ந்தவன் என்று, ஒரு தமிழன் நிரூபிக்க அவருடைய காலம் முடிந்து விடும். கரிகாலன், திருவள்ளுவர், தொல்காப்பியர், இப்படிப் பலரும். அண்மை காலத்தில் நிரூபித்த மாமனிதர் காமராசர் ; அவர் காலத்தில் அல்ல, காலம் முடிந்து.

ரஜனிகாந்த், விசால் ஆகியோர் தமிழர் கூட்டத்தை அள்ளிக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். செயலலிதா கொத்தாக அள்ளிக் கொண்டார். சசிகலாவும், எடப்பாடியும், பன்னீரும், அடித்துக் கொள்ளதானே முடிகிறது. 

திருமாவளவன். சீமான், வேல்முருகன், அன்புமணி ஆகியவர்களை தங்களை விட சாதிப்பவர்களாக தமிழர்கள் அங்கிகரிக்க மறுக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் அவர்கள் காலத்திற்குப் பிறகு தமிழர்களால் உறுதியாகப் போற்றிக் கொள்ளப் படுவார்கள். வாழுங்காலத்தில் போற்றிக் கொள்ளப் படவேண்டுமானால் நிறைய உயர வளர வேண்டும்.

தமிழர் வரலாற்றில் வாழுங் காலத்தில், தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட, தமிழர்களில் ஒருவர், மாவீரன் இராசராச சோழன். மற்றொரு தமிழன், மாவீரன் பிரபாகரன். 

தமிழர் அல்லாதவர்கள்- அறிவாற்றல், அதிகாரம், அன்பு, நியாயம், தனித்துவம், பொருளாதாரம் இப்படி ஏதாதொன்றில் திறமையைக் காட்டி தமிழர்களைக் கொத்தாக அள்ளிக் கொள்ள முடியும். 

தமிழனாக இருந்தால்- அறிவாற்றல், அதிகாரம், அன்பு, நியாயம், தனித்துவம், பொருளாதாரம் இப்படி அனைத்தும் நிருவகிக்கக் கூடிய வலிமையாளனாக இருக்க வேண்டும்.

தமிழர் இயல்பை மாற்ற முயன்றால், தமிழர் அல்லாதவர்களைக் கூட தமிழர் அங்கிகரிக்க மாட்டார்கள். இதற்கு எடுத்துக் காட்டு பாஜக. தமிழர்களை குற்றங்கூறி வென்றறெடுக்க முடியவே முடியாது.

தமிழர்களை இலவசங்களுக்கு மயங்குகிறவர்கள், ஆட்டு மந்தைகள், அடிமைச் சிந்தனையாளர்கள், பிற்போக்கு வாதிகள், முட்டாள்கள், கோழைகள், என்றெல்லாம் இழிவுபடுத்துகிற, எந்த இனத்தையும், எந்தக் கோட்பாடுகளையும் தமிழர் புறமுதுகிட்டு ஓடச் செய்வர். தமிழரை அள்ளிக் கொள்ள ஆசைப்படுகிறவர்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.