Show all

கோயில்களில் வழிபாட்டு அடையாளமாக இருப்பது நடுகல்! நடுகல் வழிபாடே நமது தமிழர் வழிபாடு.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: போரில் உயிர்நீத்த வீரனுக்கு, அவனுடைய பெயரையும் வீரப்புகழையும் கல்லில் பொறித்து அவன் நினைவாகப் பலரும் வழிபடுமாறு கல் நடுவதை நடுகல் என்பது நமது தமிழ் மரபு. 

இவ்வழக்கம் பற்றிய செய்திகள் ஆரியர் வருகைக்கு முந்தைய நமது தமிழ் இலக்கியங்களில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. 

கண்ணகிக்குக் கல் எடுத்த நிகழ்வு சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது. உயரிய செயல் செய்வார்க்கும் கல் நடப்பட்டதை இது உணர்த்துகிறது. 

தொல் காப்பியர் நடுகல் எடுத்தலின் நிலைகளை வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ளார்.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், 

சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று 

தமிழகத்தில் இத்தகைய நடுகற்கள் நிறையக் கிடைக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலை நடுகல் அமைத்தலைத் துறைகளாகப் பொதுவியல் திணையில் கூறுகிறது. 

1.கல்காண்டல், 2.கல்கோள் நிலை, 3.கல் நீர்ப்படுத்தல், 4.கல் நடுதல், 5.கல் முறைப்பழிச்சல், 6.இற்கொண்டு புகுதல் என்பன நடுகல் பற்றிய துறைகள்.

1.கல்காண்டல் என்பது: கல்லைக் காணல் என்பதைக் குறிக்கிறது. வீரனது உருவம் பொறித்து நடுவதற்கேற்ற கல்லைத் தேர்வது என்பது இதன் பொருள். பெரிய வெற்றியைப் பெற்ற போரில் இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் செய்யக் காட்டில் கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்பது பொருள். 

2.கல்கோள் நிலை என்பது: கல்லைக் கொள்ளுதல் என்பதை இது குறிக்கிறது. தேர்ந்தெடுத்த நடுகல்லை எடுத்துக் கொணர்தல் என்பது பொருள். 

நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து, பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் ஆதற்குரிய கல்லைக் கைக்கொண்டார் என்று புறப்பொருள்வெண்பா விளக்கமளிக்கிறது.

3.கல் நீர்ப்படுத்தல் என்பது: நடுதற்குரிய கல்லை நீரில் இடுதல் என்பதைக் குறிக்கிறது.

நீரில் இடப்பட்ட முறையினை புறப்பொருள்வெண்பா விளக்குகிறது. காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால், அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் மஞ்சனமாட்டி வாவியில் கல்லை இட்டனர் என்பது வெண்பாவின் கருத்து.

4.கல் நடுதல் என்பது: உருவாக்கப்பட்ட நடுகல்லை நடுதல் என்பதைக் குறிக்கிறது. வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி அக்கல்லை நடுதல் என்பது பொருள். புறப்பொருள்வெண்பா கல் நடும் முறை பற்றியும் அதற்குச் செய்யப்படும் சிறப்பினையும் புலப்படுத்துகிறது.

5.கல் முறைப் பழிச்சல்

நடுகல்லைப் புகழ்தல் என்பதைக் குறிக்கிறது. 

ஒளி வீசும் அழகிய மணிஅணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்பது பொருள். பாணனை விளித்துக் கல்லை வணங்குமாறு கூறுவதாக புறப்பொருள்வெண்பா அமைந்துள்ளது. பாணனே! வீரன், பகைவரைக் கொன்ற வீரத்தினைச் சொல்லிச் சொல்லி, பொறுக்க முடியாத துன்பத்தோடு இருக்கும் சுற்றத்தாரோடு, கொடைத் தன்மை மிக்க இவ்வள்ளலுக்கு எடுக்கப்பட்ட கல்லினை வணங்கிச் செல்வாயாக என்கிறது வெண்பா.

6.இற்கொண்டு புகுதல் என்பது: கல்லுக்குக் கோயில் எழுப்புதல் என்று பொருள். இதனை,

வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்றுகூடிக் கோயில் எடுத்தல் என்பது இதன் விளக்கம். நடுகல்லைச் சுற்றிக் அழகான மதில்கள், மதிலில் பல்வேறு வரலாற்றுச் சிற்பங்கள் கோபுரங்கள், கோபுரக் கலசம் அமைத்துக் கோயில் எடுத்துச் சிறப்பித்தமையை புறப்பொருள்வெண்பா காட்டுகிறது.

நடு ஆசியாவிலிருந்து நடோடி இனமாக கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்த ஆரியர்களுக்கு தொடக்க காலத்தில் இது வேடிக்கையாக இருந்தது. நாடோடிகளாக வாழ்க்கை நடத்திய ஆரியர்கள் இறந்தவர்களைத் தண்ணீரில் வீசிச்செல்லும் பழக்கம் உள்ளவர்கள். இறந்த வீரர்களை இந்தளவு போற்றிக் கொள்வதை அவர்களால், செரிமானம் செய்து கொள்ள முடிய வில்லை. அதுமட்டுமல்லாமல், பல்வேறு சிற்பங்களை யெல்லாம் செதுக்கி, அழகான மதில்களையும், கோபுரங்களையும் கோபுரக் கலசங்களையும் அமைத்து கோயிலை வடிவமைக்கும் தமிழர்கள், வழிபாட்டு அடையாளத்தை மட்டும் லிங்கம் மாதிரி ஒருகல்லைக் கோவிலுக்குள் வைத்து வழிபடுகிறார்கள் என்று கிண்டலடித்தார்கள். தொடக்கத்தில் கிண்டலடித்தவர்கள் லிங்கம் என்பதே உயரிய வடிவம் என்று கற்பித்து நமது நடுகல்லை லிங்கமாகவே வழிபடத் தொடங்கினார்கள். 

நம்மவர்களும் அவர்களை வழிபாட்டுக் கடமைகளைச் செய்வதற்குரிய ஆட்களாக பணித்தார்கள். குறிப்பாக நமது மன்னர்கள் மூலமாகவே பணிக்கப் பட்டார்கள்.

பிறகு லிங்கத்திற்கு அவர்கள் பல்வேறு புனைகதைகளை யெல்லாம் கட்டினார்கள். சிவலிங்கம், இராமலிங்கம், பூதலிங்கம், புஷ்பலிங்கம், விசுவலிங்கம், என்று பெயர் வைத்து தமிழர் நடுகல் வழிபாட்டை லிங்க வழிபாடாகவே மாற்றி விட்டார்கள். 

நமது தமிழர்களும் லிங்கம் என்பது பிறமொழிச் சொல்லாக இருந்த நிலையில், அதன் பொருள் புரியாமலே தங்களுக்கு அந்தப் பெயர்களையும் கூட பெருமையாகச் சூட்டிக் கொண்டார்கள். ஆனால் ஆரியர்கள் யாரும் லிங்கம் என்ற பெயரைத் தங்களுக்கு ஏன் சூட்டிக் கொள்வதில்லை என்பது ஒரு நெருடல்தான். ஆரியர்கள் சொல்லும் சம்சுகிருத மந்திரங்களை யெல்லாம் ஏதோ நமது முன்னேற்றத்திற்கான செய்தியை நமக்காக தெய்வத்திடம் முறையிடுகிறார் போல என்றே கண்டுகொள்ளாமலே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆரியர்களுக்கு கோயிலில் இடம் கொடுக்கப் போய் அவர்கள் விருப்பத்திற்கு, நம்முடைய வழிபாட்டு வடிவத்தை முற்றிலுமாக புறந்தள்ளி பூஜை புனஸ்காரங்களையெல்லாம் கட்டமைத்துக் கொண்டார்கள். 

பெரியாருக்கு பிறகுதான் நமக்கு ஆரியர்களின் புரட்டுகள் எல்லாம் புரியத் தொடங்கியது. ஆனாலும் எல்லா தமிழர்களும், ஆரியர்களின் சூழ்ச்சிகளை எல்லாமும் புரிந்து கொள்ள முயலாமலே அவர்களை நமது கோயில்களில் இன்னும்; முன்னிறுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். 

பெரியாரும் ஆரியர்களின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வழிபாட்டையே மறுத்தாரேயன்றி நமது 'தமிழ்வழிபாட்டு' நெறியை மீட்டெடுக்க முயலவில்லை. அதனால் ஒட்டு மொத்த தமிழரும் பெரியாரைப் பின்பற்றாமல் ஆரியர்களைப் பின்பற்றுவதையே தொடர்ந்து கொண்டிருக்கிறோம். பெரியாருக்குப் பின்னாலும் கூட நமது நடுகல் வழிபாட்டை மீட்கும் முயற்சியில் ஒருவரும் ஈடுபடவில்லை. 

கடைசி வரை லிங்கம் என்ற வடமொழி சொல்லுக்கு என்ன பொருள் என்று சொல்லவே யில்லையல்லவா! சொல்லக் கூடாது. தமிழர் அடிப்படைகளை மீட்கும் ஆர்வமிருந்தால், நீங்களாக, திராவிடர்கழக நண்பர்கள் மூலமாகவோ, இணையத்தில் தேடியோ தெரிந்து கொண்டு, கோயில்களில் உள்ள வழிபாட்டு அடையாளங்களை- நாம் போற்றிக் கொள்ள வேண்டிய நமது முன்னேரின் நடுகல்- என்று நினைந்து வழிபடுங்கள்;.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.