Show all

மந்திரம். தொடர்கட்டுரை: 1.நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!

அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: 1.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த நாள்மீனில் பிறந்து விட்டீர்கள். 2.நீங்கள் இந்த திசையில் பிறந்துள்ளீர்கள் 3.நீங்கள் பிறந்த போது கோள்கள் இந்த இந்த ஓரைகளில் இருந்துள்ளது என்று மூன்று வகையான கணிப்புகளை வைத்து உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று பலன் சொல்லுவது. உங்களுக்கு அமையப் போகிற வாழ்க்கையை மேலே குறிப்பிட்ட மூன்று கணிப்புகள் மூலம், அன்றாடம் பலன் தெரிவித்து, அதை உங்களை ஏற்றுக்கொண்டு அந்தக் கணிப்புகளின் போக்கில் உங்களை முன்னெடுக்கிற கலை நிமித்தகமாகும். 

இந்தக் கலையில் இறந்த காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிற பலன்கள் அனைத்தும் மிகச்சரியாக இருப்பதை உணர முடியும். ஆனால் எதிர்காலத்தில் நடக்கப் போவதாகச் சொல்லப்படுகிற பலன்கள் சில நேரங்களில் நடக்காமல் போவதுண்டு. இதில் ஒரு செய்தியைப் புரிந்து கொண்ட தமிழ்முன்னோர் இதற்கு நாற்பது மதிப்பெண் அளித்து இதற்கு மேம்பட்ட கலையொன்றை கண்டறிந்தனர். அது கணியக்கலை.

கணியக்கலை, நிமித்தகத்தின் மேம்படுத்தப் பட்ட கலை. கணியக்கலை என்பது: உங்கள் பெற்றோர் உங்களுக்கு இட்ட பெயரால்- உங்களுக்கு வாய்க்கப் பெற்ற இயல்பை புரிந்து கொண்டு, அல்லது உங்களுக்கு பிடித்த இயல்புக்காய் உங்கள் பெயரை அமைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த இயல்புக்கான கல்வி, தொழில், என அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான கலை ஆகும். இது நிமித்தகத்தைத் தோற்கடிக்கிற கலை ஆகும். 

உங்கள் பெற்றோர் தீர்மானித்த இயல்பு உங்களுக்கு விருப்பமில்லை யெனில் அதுகுறித்தும் கவலைப்பட வேண்டாம். எது உங்களுக்கு விருப்பமான இயல்பு, எது உங்களுக்கு விருப்பமான கல்வி, எது உங்களுக்கு விருப்பமான தொழில் அவற்றை முன்னெடுப்பதற்கானதுதான் கணியக்கலை. இந்தக் கலையிலும் சில தொய்வுகளைக் கண்டறிந்த தமிழ் முன்னோர் இந்தக் கலைக்கு அறுபது மதிப்பெண் அளித்து இதற்கு மேம்பட்ட கலையொன்றை கண்டறிந்தனர். அது மந்திரக்கலை.

அடுத்து மந்திரம் என்பது கணியத்தின் மேம்படுத்தப்பட்ட கலை. இந்தக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். 

உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம்.

இரண்டு அகவைக்குள் ஒவ்வொரு குழந்தையும் தான்- தந்தையை, தாயை, மற்றவர்களைப் போல நடக்க வேண்டும் என்று விசும்பில் பதிவிட்டு இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் எழுந்து நடக்கக் கற்றுவிடுகிறது. இவ்வாறாக குழந்தை எழுந்து நடக்கும் வரையிலான முயற்சிகளின் ஒவ்வொரு நிலையை வைத்தே உடற்பயிற்சிக் கலையான ஓகக் கலையைக் கட்டமைத்தனர் தமிழ் முன்னோர்.

ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் தன் ஐந்து அகவைக்குள் தன் தாய்மொழியை, தன் எண்ணமொழியாக, முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தன் தாய்மொழியை தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதான மென்பொருளை வடிவமைத்து அதை தனக்கான தலையெழுத்தாக விசும்பில் எழுதிவிட்டு சாதிக்கிறது. 

ஆனால் ஐந்து அகவைக்கு முன்பாகவே, குழந்தைகளின் விருப்பம் இல்லாமலேயே, பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை அந்தக் குழந்தையின் மீதாக திணிக்கும் முகமாக மழலையர்ப் பள்ளிகளில் அந்தக் குழந்தைகளைக் கையளிக்கின்றார்கள். நீங்கள் உங்கள் தலையெழுத்தை யாரோ எழுதுவதாக நம்புவதைப் போல அந்தக்குழந்தையும் தன்னுடைய தலையெழுத்தை பெற்றோர், ஆசிரியர், சுற்றம், நட்பு, உங்களால் அடையாளம் காட்டப்படுகிற தெய்வம் என்று யார்யாரோ தம்முடைய தலையெழுத்தை எழுதுகின்றனர் என்ற முடிவுக்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து, எதிர்பார்ப்புகளை நிறைத்துக் கொண்டு, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு பிழைப்பு நடத்தத் தொடங்கி விடுகிறது. 

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிற தமிழர் மந்திரச் செய்தியை மறந்து விட்டு, தனக்கான நன்மையைப்  பிறர் தரவில்லையே என்றும், மற்றவர்கள் தீமையையே தருகிறார்கள் என்றும் புலம்பி அந்தப் புலம்பலையே தன்னுடைய தலையெழுத்தாக வடிவமைக்கத் தொடங்கி அதையே திரும்பப் பெறுகின்றன. 

இதை மாற்றியமைத்து நமது குழந்தைகளின் தலையெழுத்தை அவர்களே தொடர்ந்து எழுதிக் கொள்ளும் முகமாகவே அவர்களை முன்னெடுக்கவும், நாம் நமது புலம்பல்களை விட்டொழித்து நமக்கு என்ன தேவை என்பதை நேரடியாக விசும்பில் பதிவிட்டு நமது வாழ்க்கைளை எளிமையாக்கிக் கொள்ளவும் இந்த மந்திரம் உங்களுக்கு உதவிட வேண்டும் என்பதற்கானது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.