Show all

அன்றாடம் நாம் ஓதவேண்டிய நான்கு மந்திரங்கள்! தமிழர்தம் மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரம் அடிப்படையில்

மந்திரம் என்பது மனதில் குவிந்திருக்கிற ஆற்றல்; திறந்தால் பயன்தரும் என்பதாகும். மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும். அந்த வகைக்கு நான்கு அடிப்படை மந்திரங்கள் குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: மந்திரம் என்பது அழகான தமிழ்ச்சொல். ஒரு சொல்லைத் தமிழ்ச்சொல் என்று முடிவு செய்துவிட்டாலே அந்தச் சொல்லில் ஆழமான பொருள் பொதிந்திருக்கும் என்பதும், அது நமக்கு ஆழத்தேடும் வகைக்கு அருமையான பொருளை தரக் காத்திருக்கிறது என்பதும் உண்மை.

மந்திரம் எனும் தமிழ்ச்சொல் கொண்டுள்ள விளக்கம் என்ன? மனத் திரம்- மனத்தின் திரம் மந்திரம். மனம் என்கிற சொல் நடப்பு நிலையில் புழக்கத்தில் இருக்கிற சொல் அது குறித்து தெளிவாகவே நாம் அறிவோம். 

ஆனால் திரம் என்றால் என்ன? திரம் என்பது திறன் என்னும் அற்றலின் குவிந்த நிலை ஆகும். ஐந்திரம் என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்து அடிப்படை ஆற்றல்களைக் குறிக்க தமிழ்முன்னோர் அமைத்த சொல்லே ஐந்திரம். ஆக திறன் என்பது திற, திறக்கப்பட்ட என்கிற ஆற்றலைக் குறிப்பது. திறக்கத் தயாராக இருக்கிற, திறந்தால் வெளிப்படக் கூடிய ஆற்றல் திரம். 

முதலாவது மந்திரம்- தமிழ்வாழ்த்து! 
காலை படுக்கையைவிட்டு எழுகிற போதே உங்கள் எண்ணத்தின் பேச்சும், எழுத்தும், இயக்கமும், அடையாளமும் ஆன தமிழை இரண்டுமுறை வாழ்த்தி எழுங்கள்.

இரண்டாவது மந்திரம்- குடும்பத்திற்கான காப்புக்கட்டு! 
விசும்பு தெய்வமே! என்று விளித்து- நீங்கள், உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள் அனைவரின் பெயரை தனித்தனியாக தெரிவித்து உடல்நலம், மனவளம், பொருளாதாரம், பேரறிவு, பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பு வழங்கி அருட்காப்பு அளிக்க இரண்டு முறை வேண்டுங்கள். இதை ஒவ்வொரு நாளும் ஒருமுறையாவது தொடரலாம்.

மூன்றாவது மந்திரம்- பயணத்திற்கான காப்புக்கட்டு! 
உங்கள் ஒவ்வொரு பயணத் தொடக்கத்தின் போதும், விசும்பு தெய்வமே! என்று விளித்து நீங்கள், உங்களுடன் பயணிப்பவர்கள், ஓட்டுநர், பயண உதவி வண்டி ஆகியோருக்கு பயணத்துனையாக அமையவும், பாதுகாப்பு வழங்கவும் அருட்காப்பு அளிக்க இரண்டுமுறை வேண்டுங்கள்.

நான்காவது மந்திரம்- வெற்றியைக் கொண்டாடுதல்!
ஒவ்வொரு நாளும், இரவு படுக்கையில், தூங்குவதற்கு முன்பு,  அன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் இரண்டுமுறை தெரிவியுங்கள். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,373.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.