தெய்வம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். தொய்ந்திருப்பது தெய்வம் என்கிற அடிப்படையில் இந்தச் சொல் கட்டமைந்துள்ளது. தமிழர் ஆற்றல் மூலங்களாகப் பட்டியல் இட்டுள்ள கடவுளோ இறையோ தொய்ந்திருப்பது தெய்வம் ஆகும். தெய்வம் தமிழ்முன்னோர் முன்னெடுத்த வழிபாட்டு மூலமாகும்.

20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர் முன்னெடுத்திருந்த  ஆற்றல் மூலங்கள் கடவுள், இறை. தெய்வம் என்பன. அதில் தெய்வம் என்பது வழிபாட்டு மூலமாகும். 

நிலம் நீர் தீ காற்று நான்கு திரங்களை தமிழ்முன்னோர் இறை என்கிற ஆற்றல் மூலமாக பட்டியல் இட்டனர். ஐந்தாவது ஆன விசும்பு திரத்தை கடவுள் என்கிற ஆற்றல் மூலமாக பட்டியல் இட்டனர் தமிழ் முன்னோர்.

வழிபாட்டு மூலமான தெய்வம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். தொய்ந்திருப்பது தெய்வம் என்கிற அடிப்படையில் இந்தச் சொல் கட்டமைந்துள்ளது. 

தமிழர் கொண்டாடும் கடவுளோ, இறையோ, தெய்வங்களோ மனிதனைப் படைத்தது, உலகத்தைப் படைத்தது என்பதான படைப்பாளிகள் அல்ல. அவைகள் தான்தோன்றி மூலங்களே. அவைகளிலிருந்து கிளைத்த நாமும் தான்தோன்றிகளே.

தெய்வங்களின் அடையாளமாக நடுகல் நாட்டி வழிபட்டனர் தமிழ்முன்னோர். தமிழர் மொழிக்கு மட்டும் அல்லாது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்திருந்த செம்மாந்த மக்கள் ஆவர். அந்த இலக்கணத்தில் தெய்வம் கருப்பொருளில் ஒன்றாக ஐந்து நிலங்களுக்கும், அதாவது ஐந்து ஆற்றல்களும் ஐம்பெரும் தெய்வங்களாக அமைக்கப்பட்டனர்.

குறிஞ்சி திணைக்கான விசும்பு திரத்திற்கான தெய்வம் சேயோன்.
முல்லைத் திணைக்கான நிலம் திரத்திற்hகான தெய்வம் மாயோன்.
மருத திணைக்கான நீர் திரத்திற்கான தெய்வம் வேந்தன்.
நெய்தல் திணைக்கான காற்றுத் திரத்திற்கான தெய்வம் வருணன்.
பாலைத் திணைக்கான தீ திரத்திற்கான தெய்வம் கொற்றவை ஆகும். 

வீட்டுத்தெய்வம், குலதெய்வம், நிலதெய்வம், பெற்றோர்கள், முன்னோர்கள், அரசர்கள், போர்வீரர்கள், ஞாயிறு, கால்நடைகள், கருவிகள், தொழிலாளர்கள் என்றவாறு நமக்கு ஒத்துழைத்தவைகளில்- தமிழர் ஆற்றல் மூலங்களாகப் பட்டியல் இட்டுள்ள கடவுளோ இறையோ, தொய்ந்தவர்களும் தெய்வங்கள் ஆகும்.

பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை.

இந்தச் சிறப்பு வாய்ந்த இலக்கணம், சங்கம் கண்ட தமிழ்முன்னோருக்கு கூட்டுச்சிந்தனையில் கிடைத்த கருவூலம் ஆகும். இதனால் சமூகம் திருத்தும் நோக்கத்திற்காக, உலகினர் போல, தனி மனித அறிவாளர்கள் முன்னெடுத்த மதம் தமிழர்களுக்கு தேவைப்படாமல் போனது.

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை:-
1. குறிஞ்சித் திணை
2. முல்லைத் திணை
3. மருதத் திணை
4. நெய்தல் திணை
5. பாலைத் திணை

இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை:-
1. முதற்பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
ஆகியன ஆகும்.

முதற்பொருள்:-
நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் அடிப்படையான இவற்றை முதற்பொருள் என்பர்.

நிலம்:-
ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்
தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொழுது:-
பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிறு பொழுது:-
சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.
வைகறை - விடியற்காலம்
காலை - காலை நேரம்
நண்பகல் - உச்சி வெயில் நேரம்
எற்பாடு - சூரியன் மறையும் நேரம்
மாலை - முன்னிரவு நேரம்
யாமம் - நள்ளிரவு நேரம்
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.

பெரும்பொழுது:-
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சித்திரை, வைகாசி - இளவேனில் காலம்
ஆனி, ஆடி - முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி - கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை - குளிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக் காலம்
மாசி, பங்குனி - பின்பனிக் காலம்
சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.

திணை பெரும்பொழுது சிறுபொழுது:-
குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறு காலமும் வைகறை
நெய்தல் ஆறு காலமும் எற்பாடு
பாலை முதுவேனில், பின்பனி நண்பகல்

ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.

கருப்பொருள்:-
நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது. எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்:-
1 தெய்வம் - சேயோன்
2 தலைமக்கள் - வெற்பன், கொடிச்சி
3 மக்கள் - குறவர், குறத்தியர்
4 பறவை - கிளி, மயில்
5 விலங்கு - புலி, யானை
6 ஊர் - சிறுகுடி
7 நீர்நிலை - அருவி, சுனை
8 பூ - வேங்கை, குறிஞ்சி
9 மரம் - தேக்கு, அகில்
10 உணவு - மலைநெல், தினை
11 பறை - தொண்டகம்
12 யாழ் - குறிஞ்சி யாழ்
13 பண் - குறிஞ்சிப் பண்
14 தொழில் - தேன் எடுத்தல், வெறியாடல்
இவ்வாறே ஏனைய திணைகளுக்கும் கருப்பொருள்கள் சொல்லப் பட்டுள்ளன.

உரிப்பொருள்:-
ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள் என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முதன்மை உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு:
குறிஞ்சி - புணர்தல் - தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.
முல்லை - இருத்தல் - தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்.
மருதம் - ஊடல் - தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்.
நெய்தல் - இரங்கல் - தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.
பாலை - பிரிவு - தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன. திணை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. 
மற்றபடி உள்ள காலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச் சிறப்பாக அமையக் கூடியவை ஆகும். எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே. ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும். 

பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும். எனினும் அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன.

அகப்பொருள் இலக்கணம் களவு, கற்பு என்று இரண்டு கூறாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிறர் காணாதவாறு சந்தித்துக் காதல் கொள்ளுவது களவு எனப்படும். திருமணத்திற்குப் பின் உள்ள காதல் வாழ்க்கை, கற்பு எனப்படும். களவிலும் கற்பிலும் தலைவன் தலைவி இவர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று விரிவாக இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறன தமிழர்தம் பொருள் இலக்கணத்தில் கருப்பொருளில் முதலாவதாக சுட்டப்படுகிற கருப்பொருள்தான் தெய்வம். 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், ஆகிய  நான்கு திணைகளின் தெய்வங்கள் பற்றி தொல்காப்பியம்,
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே 
என்கிறது.

ஐந்து வகை தமிழர் திணைகளுள் முதன்மையான, மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் சேயோன்.  

சேயோன் என்பது கடந்தும் உள்ளும் அமைந்த மகவைக் குறிக்கும். குறிஞ்சித்திணை விசும்பின் இயல்பு பொருந்தியது. குறிஞ்சி தெய்வம் உருத்து வந்து ஊட்டும் உருத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. பிள்ளையார் என்பதும் மகவைக் குறிக்கும். பிள்ளையார் சுழி 'உ' என்று எழுதுவது பிள்ளையாரின் உருத்திர ஆற்றல் போற்றுவது குறித்ததாகும்.

சேயோன் என்றும் பிள்ளையார் என்றும் உருத்திரம் என்றும் தமிழர் குறித்தது கடவுள் அற்றல் தொய்ந்த தெய்வமாக மகவை சேயோன் என்று நிறுத்தியது ஆகும். 
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
என்ற திருக்குறளையும் இந்த இடத்தில் பொருத்தி மகவின் மாண்பை உணரலாம்.

பிற்காலத்தில் பார்ப்பனியர் சேயோன், பிள்ளையார், உருத்திரம் என்பனவற்றை சுப்ரமணி, விநாயகர், சிவா என்று தனித்தனி தெய்வமாக அடையாளம் கண்டது அவர்தம் அறியாமை. அதை அப்படியே கொண்டாடுவது நம்முடைய வரலாற்றுப்பிழை.

காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலத் தெய்வம் மாயோன் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். முல்லை நிலந்தான் இயற்கையான நிலத்தின் இயல்பு பொருந்தியது. மயோன் என்பது முல்லை நிலத் தலைவன் ஆவான்.

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருத நிலம் நீரின் இயல்பால் செழிப்பது எனவே மருத்திற்கு நீர் திரம் அடிப்படை ஆகும். உலகின் முதல் அணை கண்டவன் மாமன்னன் கரிகாலன். ஏரி குளங்களை வெட்டி வளம் பெருக்குவதே தமிழ் மன்னர்களின் பணியாக இருந்த நிலையில் மன்னனே மருத  நில மக்களின் தெய்வமாக அமைந்தவன் ஆவான். 

கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல். கடலில் கப்பல் படகு, நாவாய் என்று காற்றுக் கருவிகளை உருவாக்கி கடல் வென்றதே தமிழர் சாதனை. சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் நெய்தல் நிலத்து மக்கள் ஆவர். நெய்தல் நில மக்களின் தெய்வம் வருணன். கடல் வெல்ல காற்றே அடிப்படை என்பதால் கடல் கற்றுத் திரத்தின் அடிப்படை ஆனது.

முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. விடலை, காளை, மறவர், மறத்தியர் பாலை நிலத்து மக்கள். பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை.

தெய்வங்களின் வழிபாட்டு அடையாளமாக தமிழர் முன்னெடுத்தது நடுகல் ஆகும். தெய்வங்களுக்கு உருவங்கள் அமைக்கப்பட்டது பார்ப்பனியச் சார்பில் அமைந்த வழக்கமாகும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,237.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.