Show all

அறிவு மலைப்பதற்கு ஆனதல்ல! அதன் ஆழத்தையும் அதன் அகலத்தையும் புரிந்து கொண்டாடுவதற்கானது.

வடநாட்டில் இருந்து, தமிழ்நாட்டு ஆழஅறிவு வேலைகளுக்குத் திரண்டுவரும் ஆழஅறிவனரைச் சாட்சியாக்கி, இந்தியாவில் அகலஅறிவில் பயணிப்பதில் பேரளவினர் தமிழ்மக்களே என்கிற நிலையில், இந்திய ஒன்றியத்தின் மேலண்மையைத் தமிழ்நாடு விரைவில் கைப்பற்றும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125. 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.  
என்று திருக்குறள், அறிவை எளிய பாடாகவும், படிப்பாகவும் காட்டுவதைப் போலவே, அறிவை, எல்லோராலும் முடியும், மிகமிக எளிமையான பேறாகவே கருதியிருந்தனர் தமிழ்முன்னோர். 

அறிவை- பாடு அடிப்படையில் ஆழஅறிவு என்றும், படிப்பு அடிப்படையில் அகலஅறிவு என்றும் இரண்டாக வகைப்படுத்தலாம். 

பாடுகளால் எல்லோரும் ஆழஅறிவினரே. மற்ற மற்றவரின் ஆழஅறிவை புரிந்து கொள்ளுதலே படிப்புஅறிவு என்கிற அகலஅறிவு ஆகும்.

மணற்கேணி தோண்டுதல் தொடங்கி, சமைத்தல், ஆடுதல், பாடுதல், ஓடுதல், நீந்துதல், வண்டியோட்டுதல், கருவி இயக்குதல் அனைத்தும் ஒருமுறை பழகிவிட்டால் மனதில் ஆழப்பதிந்து தேவையின் போதெல்லாம் வெளிப்படுவதாகிற ஆழஅறிவு ஆகும்.

தன் இனத்தில் அல்லது உலகில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அத்தனைப் பாடுகளையும் கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு என்பதாக ஒவ்வொருவரும் வேறுவேறு அளவில் அடுத்தவர் பாடுகளைப் புரிந்திருப்பது அவரவர் அகலஅறிவு ஆகும்.

ஆழஅறிவைப் பட்டறிவாக- வேலை, தொழில், வணிகம், வேளாண்மை, தனித்திறன் ஆகியன கற்றுத் தருகின்றன. 

இவைகளில் எல்லாம் இயங்கும் ஆழஅறிவினரை மேலாண்மை செய்வதற்கு அந்த மேலாண்மையையே தொழிலாக, வணிகமாக, வேளாண்மையாக அமைத்துக் கொள்வதற்கு படிப்பு என்கிற அகலஅறிவைக் கல்வியாக, தன்பெரிய குடும்பமான இனமும் (நாடும்), உலகமும் நிறுவனங்களைக் கட்டமைத்துள்ளன.

தனிமனிதன் அகலஅறிவை மேலும் மேலும் வளர்த்திட பாடாற்ற வேண்டியது பெரிய குடும்பமான இனக்கட்டமைப்பின் (நாடு) கட்;டமைப்பு அடிப்படைசார்ந்த கடமையாகும்.

அகலஅறிவனரைக் கொண்டாடும் ஆட்சி அதிகாரத்தில், ஆழஅறிவினருக்கு கல்வி மறுக்கப்படுவதும், கல்விக்கு- நுழைவுத் தேர்வைகளைத் தடையாக அமைப்பதும், இந்திய நாட்டில் பேரின ஆதிக்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக. இந்திய விடுதலை பேரினஅதிகாரத்தின் நுகர்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அகலஅறிவில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஆழஅறிவனருக்கு கல்வி என்கிற ஞாயிற்றை அடையாளம் காட்டாமல்- 
பக்தி, பாவம் புண்ணியம், கர்மவினை, ஆண்டான் அடிமை, மதம், பேரினமொழிஹிந்தி என்கிற விட்டில்பூச்சி விளக்குகளை அவர்கள் முதுகில் பொருத்தி ஆழஅறிவிலேயே இயங்கிட வழிகாட்டத் தலைப்படுகின்றனர். 

யாரொருவர், பத்தாம் வகுப்பையோ பனிரெண்டாம் வகுப்பையோ தாண்டாவிட்டால் அவர்கள் ஆழஅறிவில் நிலை நிறுத்தப்பட்டு விடுகின்றனர். 

பத்தாம் வகுப்பையோ பனிரெண்டாம் வகுப்பையோ தாண்டாமல் விட்டவர்களுக்கு, தொழிற்கல்வியில் மின்பணியாளர், பொறிப்பகுதி பொருத்துபவர், கடைசல் பிடிப்பவர், பற்றவைப்பவர், என்று பாட்டாளராக இயங்கவே கல்வி அளிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பையோ பனிரெண்டாம் வகுப்பையோ தாண்டியவர்களே பொறியியல், மருத்துவம் என்று போக முடியும். அதிலும் மருத்துவ கல்வி பெறுவதற்கு நீட் போன்ற தடைகள்.

தனிமனிதன் அகலஅறிவை மேலும் மேலும் வளர்த்திட பாடாற்ற வேண்டிய பெரிய குடும்பமான இந்திய அமைப்பு முறையோ- ஆழஅறிவினர் ஆகல அறிவில் பயணித்துவிடக் கூடாது என்கிற முனைப்பாகவே உள்ளது.

அறிவு என்பது குறிப்பிட்ட இனக்குழுவற்கானது என்பதுபோலவும், அறிவு என்பது பிறப்பிலேயே வருவது என்பது போலவும் அறிவுக்கு உயர்வுநவிற்சி (மகத்துவம்) கற்பிக்கும் வகைக்கே இயங்குகிறது இந்தியாவின் சட்ட சமூகம்.

எல்லோராலும் முடியும் அகலஅறிவிலும் ஆழஅறிவிலும் திளைக்க என்பதைப் புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்களும் தென்னிந்திய மக்களும் ஓரளவிற்கு, தம்பிள்ளைகளைப் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்புகளை தாண்ட வைக்க வேண்டும் என்கிற தன்னார்வத்தில் செயல்படுகின்றனர்.

ஆனாலும் தமிழ்நாட்டு மக்களில் சிலர் தனியார்ப் பள்ளி, ஆங்கில வழிக் கல்வி என்று பெரும் பொருட்செலவை பள்ளிக் கல்விக்கே ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். 

தங்கள் பிள்ளைகளை அகல அறிவில் பேரளவாக கற்க அந்தப்பிள்;ளைகளை தமிழ்வழிக் கல்வியில் ஈடுபடுத்தினாலே போதும் என்கிற புரிதலை நோக்கியும் தமிழ்மக்கள் வளர்ந்தால் இந்தியாவை திருப்பிப் போடுகிற ஆற்றலைத் தமிழ்நாடு பெறமுடியும். 

இதற்கு வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டு ஆழஅறிவு வேலைகளுக்குத் திரண்டுவரும் ஆழஅறிவனரே சாட்சி. இந்தியாவில் அகலஅறிவில் பயணிப்பதில் பேரளவினர் தமிழ்மக்களே என்கிற நிலையில், இந்திய ஒன்றியத்தின் மேலண்மையைத் தமிழ்நாடு கைப்பற்றும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

அகவே, ஒரு குறிப்பிட்ட துறைக்கான போட்டியில் மட்டுமே தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்தாமல், தங்கள் பிள்ளைகளை அகல அறிவில் பேரளவாக கற்க அந்தப்பிள்ளைகளை தமிழ்வழிக் கல்வியில் ஈடுபடுத்துவதே சிறப்பு என்கிற புரிதலை நோக்கியும் தமிழ்மக்கள் வளரவேண்டியது காலத்தின் காட்டாயம் ஆகும். 

ஒன்றிய மேலாண்மை தமிழ்மக்களிடம் கிடைக்கும் போது- அறிவு மலைப்பதற்கு ஆனதல்ல! அதன் ஆழத்தையும் அதன் அகலத்தையும் புரிந்து கொண்டாடுவதற்கானது என்று உறுதியாக நிறுவப்படும். அகலஅறிவுக்கு முன்னெடுக்கப் பட்டுவருகிற அனைத்துத் தடை அமைப்புகளும் சீராக்கப்படும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,643.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.