Show all

தமிழக அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! நீட்தேர்வின் இத்தனை அளப்பறைகளுக்குமான தொடக்கத்தை

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வின் மூலம் நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக கல்வி என்பது மாநிலத்தின் உரிமை. அதைக் கட்டிக் காக்க வேண்டியது மாநில அரசன் கடமை. அதற்கான அசைக்க முடியாத சட்டங்களை இயற்றி அறங்கூற்று மன்றங்களை வழிநடத்திட வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. மாநிலக் கல்வி உரிமையைப் பிடுங்குவதற்கு நடுவண் அரசு வலுவான சட்;ட அமைப்பை உருவாக்கி, உச்ச அறங்கூற்று மன்றத்தை தெளிவாக வழிநடத்துகிறது.

காவிரி விவகாரத்தில் என்ன தீர்ப்புகள் சொல்லப் பட்டாலும் கர்நாடக அரசு கலங்கிப் போய் சப்பைக்கட்டு கட்டுகிறதா என்ன? காவிரியில் ஒரு சொட்டு நீரைக் கூட கடைமடைப் பகுதிகளுக்கு கொடுத்து விடக் கூடாது என்பதற்கு துணிச்சலாக மூன்று அணைகளைக் கட்டியதா இல்லையா? 

உண்மையான நடுவண் அரசு உண்மையான உச்ச அறங்கூற்று மன்றம் என்றால் சட்டங்களை மீறி புதிதாக கட்டப் பட்ட அந்த மூன்று அணைகளையும் இடித்து விட்டால், கர்நாடகத்திடம் ஒரு சொட்டு நீர் கொடு இரண்டு சொட்டு நீர் கொடு என்று கெஞ்ச வேண்டிய தேவையும். அந்த ஒரு சொட்டு இரண்டு சொட்டு நீருக்காக, கர்நாடக மாநில நீராதரத்தை தன் கையில் எடுத்துக் கொள்கிற காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்கிற நிலைக்கெல்லாம் தேவையே எழாது. 

காவிரி மேலாண்மை வாரியம் என்பது காவிரியின் கடைமடை பகுதி வரை இருக்கிற நான்கு மாநிலங்களின் நீராதார உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுப்பது தான். அதை கர்நாடகம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறது என்பதையும் அது நியாயம் தான் என்பதை நாம் ஒப்புக் கொண்டால் தான் நாம் உண்மையான நிரந்தரத் தீர்வை நோக்கி பயணிக்க முடியும். 

நாம் நமக்கு இரண்டு சொட்டு நீர் கிடைக்கும் என்பதற்கான தற்காலிக நடைமுறைக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமை என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

காவிரி உரிமை கர்நாடகாவிற்கே இருக்கட்டும். கடைமடைப் பகுதி மாநிலங்களின் காவிரி உரிமையில் தலையிடாமல் இருப்பது கர்நாடகத்தின் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்ற, சட்டத்தை மீறி, காவிரி கடைமடை மாநிலங்களின் காவிரி உரிமையில் தலையிடுவதான புதிய அணைகட்டிய முயற்சி தவறு என்று கட்டிய அணைகளை இடித்து விட வேண்டும் என்பதுதான் கர்நாடகத்தின் காவிரி உரிமையில் நடுவண் அரசும் உச்ச அறங்கூற்று மன்றமும், மாநிலங்களின் காவிரி உரிமையில் தலையிடாமல் எடுக்கக் கூடிய நியாயமாகும். 

உலக நாடுகள் நீர் உரிமையை அப்படித்தான் பயன் படுத்திக் கொள்கின்றன. கடைமடைப் பகுதியில் இருக்கும் நாடு, தனக்கு வரும் நீர் தடுக்கப் படுவதாக கண்டறிந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அந்த அமைப்பை தகர்த்து விட்டுதான் நியாயத்திற்கே வரும். காவிரியிலும் அப்படி ஒன்றல்ல, இரண்டு  நிகழ்வுகள் நடந்தேறியிருக்கிறது.  

900 ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த, அணை என்று சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்தி காவிரியின் திசையை மாற்ற முனைந்தது.

இரண்டாம் இராசராசசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தகர்தெறிந்து காவிரியில் தமிழர்களுக்கான உரிமையை மட்டும் மீட்டார். அவர் நினைத்திருந்தால் காவிரி தொடங்கும் இடத்தை கைப்பற்றியிருக்க முடியும். அப்படி செய்யாமல் விட்டதுதான் தமிழன் நியாயம். அதன் பிறகு 350 ஆண்டுகளுக்கு முன்னம் மைசூர் அரசு மீண்டும் காவிரி சிக்கல் ஏற்படுத்த முயன்ற போது அரசி மங்கம்மாளும், பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அப்போதெல்லாம் தமிழகம் வேறு நாடாக இருந்தது; தனது காவிரி உரிமையைத் தானே மீட்டது. இந்தியா ஒருநாடாக அமைந்து விட்ட போது நடுவண் அரசும், உச்ச அறங்கூற்று மன்றமும் தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்; அந்த வேலைக்கான கோரிக்கையை நிறைவேற்றத்தான், தமிழக அரசும், தமிழக அரசியல்வாதிகளும் இந்த வகையான நியாயத்திற்காகத்தான் போராடியிருக்க வேண்டும். அல்லது தற்போதாவது போராட வேண்டும். பாதிப்பிற்குள்ளான தமிழகம் காவிரி உரிமையை நடுவண் அரசிடம் கொடுத்து விட்டு குரங்கு அப்பம் பிரித்த கதையாக நான்கு மாநிலங்களும் காத்திருப்பதை விட  கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆக்கிரமிப்புகளை அப்புறப் படுத்தினால் மட்டும் போதுமானது. 

பாஜக- ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்துஇராஷ்ட்ரியவாத அமைப்பு என்பது உலகம் அறிந்த உண்மை. அதற்காக அவர்கள் பாபர் மசூதியை கூட இடித்தார்கள்.

ஒவ்வொரு நாளும் தனிமனித ஆக்ரமிப்புகளை அகற்ற, கிராமநிருவாக அலுவலர், வட்டாட்சியர், காவல்துறை சகிதமாக நாடெங்கும் எவிசன்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறங்கூற்று மன்றங்களும் அதற்கான ஆணைகளை வழங்கி கொண்டுதான் இருக்கின்றன. 

எதற்கெடுத்தாலும் நடுவண் அரசின் சிபிஐ விசாரனை கோருவதும், காவிரி உரிமையை நடுவண் அரசு எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு இத்தனை சொட்டு நீர் என்று குரங்கு அப்பம் பிரித்த கதை கோருவதும் தான், காவிரி உரிமையில் நமக்கான நியாயம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. 

உண்மையில், ஒரேநாடு, ஒரேமாநிலம், ஒரேஊர், ஒரேதெரு, பக்கத்து விட்டுக்காரன் நமது இடத்தில் ஒரு அங்குலம் சேர்த்து தன் வீட்டைக் கட்டி விட்டால் அறங்கூற்று மன்றத்தில் நாம் கோருவது ஆக்கிரமிப்பு அகற்றம் தானே? அதுதானே நிரந்தரத் தீர்வாக முடியும், அதை விடுத்து இருவரும் இப்படி இப்படி பயன் படுத்திக் கொள்ள என்று தற்காலிகமான, நமது இருவீட்டார் உரிமையையும் அரசுக்கு விட்டுக் கொடுத்து விட்டு ஒரு மேலாண்மை அமைப்பையா கோருகிறோம்? 

இப்படி ஒவ்வொன்றிலும் நடுவண் அரசை சட்டாம் பிள்ளையாக அழைப்பதால்தான் ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்துஇராஷ்ட்ரியவாத சித்தாந்த பாஜக அதை தோதாக பயன் படுத்திக் கொண்டு, மீத்தேன், நியுட்ரினோ. நீட் என்று மாநில உரிமைகளைத் தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொண்ட, தமிழகத்தின் இத்துனை அளப்பறைகளுக்குமான காரணம். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய கணியன் பூங்குன்றனார்தான் அந்தப் பாடலின் அடுத்த வரியில், 

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோடன்ன 

என்றும் பாடியிருக்கிறார்.  

குறை நம்மிடம்தான் இருக்கிறது. கொஞ்சம் அறிவோடு சிந்திப்போம்;. அதற்காக நமது முன்னோர்களின் எழுத்துக்களைத் துணைக்கழைப்போம்.

இன்றைய தலைமுறைத் தலைவர்களில் யாரும் அறிவாளர்களைக் காணோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,779.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.