Show all

செயலலிதா சமாதியில் நீட் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய மாணவர்கள் குண்டுகட்டாக அகற்றி கைது

நீட் போராளி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரியும் சென்னை மெரினாவில் உள்ள செயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா கடந்த 1அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு, அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்து விட்டது.

இந்நிலையில் சல்லிக்கட்டு போராட்டம் போல் மெரினாவில் மாணவர்கள் திரண்டு விடக் கூடாது என்பதற்காக காவல்துறையினரின்; பாதுகாப்பை பலப்படுத்தினர். வாகனப் போக்குவரத்துக்கும் தடை செய்திருந்தனர்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள செயலலிதா நினைவிடத்துக்கு மாணவர்கள் நுழைந்தனர். அங்கு தடுப்புகளைத் தாண்டி செயலலிதா சமாதியிலேயே அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் வெளியேற காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றி கைது செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.