Show all

அரசியல் ஆதாயம் நோக்கி அரங்கேறும் காட்சிகள்

காட்சி-1

     ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி, கலாநிதி மாறன் தாக்கல் செய்த முன்பிணையல் மனு மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது

     ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் நடுவண் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்பிணையல் மனுக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிப்பதாக ஒத்திவைத்தார் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிஅரசர் ஓபி ஷைனி.

     நடுவண் அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

     மேலும் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்பிணையல் மனுக்கள் இந்த வழக்குகளில் தங்களுக்கு முன்பிணையல் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு முன்பிணையல் வழங்க சிபிஐ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

     இந்த முன்பிணையல்; மனு மீதான விசாரணை முடிவடைந்த போதும் தீர்ப்பு ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார்.

     மாறன் சகோதரர்களின் முன்பிணையல் மனு மற்றும் குற்றச்சாட்டுகள் பதிவு தொடர்பாக இன்று காலை 10,30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய விசாரணையின் போது மாலை 4 மணிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.

காட்சி-2

     அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது நடுவண் அரசு.

     நடுவண் அரசிடம் நெருங்குவதற்கு மன்னார்குடி தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

     அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி, இந்த வழக்கில் இருந்து சசிகலாவையும் தினகரனையும் விடுவித்தது நீதிமன்றம்.

     இதனை எதிர்த்து, நடுவண் அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

     அதேபோல், தினகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.     இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதியரசர் சொக்கலிங்கம்,

பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிறுவனங்களின் அன்றாட நிர்வாகத்தில் சசிகலா உள்ளிட்டோர் பங்கெடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் சசிகலா, தினகரன் ஆகியோர் அந்நிய செலாவணி வழக்கை எதிர்கொள்ள வேண்டும். சசிகலா தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சசிகலா, தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது

என உத்தரவிட்டார்.

     நடராசன் மீதான லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கும் வேகம் பிடித்துள்ளது.

     நடுவண் அரசு வலுவாக இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலாவின் கணவர் நடராசன்.

காட்சிகள் தொடரும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.