Show all

முத்தரையர் சதய விழா அனுமதி மறுப்பைத் தாண்டி நடத்தப் பட்டதில் கலவரம்

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் நேற்றுமுன்தினம் காவல்துறைக்கும், கிராமத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் 498 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 94 பேரை கைது செய்தனர்.

சிவகங்கையை அடுத்த மதகுபட்டி கீழத்தெருவில் மன்னர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், விழா நடத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மதகுபட்டி காவல்துறை துணைஆய்வாளர் செந்தூர்பாண்டின், அங்கு சென்று விழாவுக்கு ஏற்பாடு செய்த 5 பேரை மதகுபட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் விடுவிக்கக் கோரி அந்தக் கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, கிராமத்தினருக்கும், காவல்துறையினருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மதகுபட்டி காவல்நிலையம் முன்பு சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அக்கம்பக்கத்து கிராமத்தினரும் அங்கு வரத்தொடங்கினர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்தது.

தகவல் அறிந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர்  அங்கு விரைந்து வந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீசார் மீது கல்வீசினர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், சிவகங்கை நகர் ஆய்வாளர் இளஞ்செழியன், தலைமைக்காவலர் வீரபாண்டி, ஆயுதப்படை காவலர் மலைக்கண்ணன், பாலமுருகன், விஜய், அய்யப்பன், கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு குவிந்திருந்தவர்களைக் கலைக்க தடியடி நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் காவல்நிலையத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். அந்தப் பகுதி வழியாக வந்த ஒரு அரசு பேருந்தையும் மறித்து அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

 

நிலைமையைச் சமாளிக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதன்பின் கூட்டம் கலைந்து ஓடியது.

 

தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி, ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயுதப்படை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

94 பேர் கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முத்துவேலு அளித்த புகாரின் பேரில் மதகுபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜசேகரன் உள்பட 498 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இரவோடு, இரவாக 94 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் மதகுபட்டியில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அ.தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பச்சையப்பன், முத்தரையர் சங்க மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி, திருச்சி அருணாச்சலம் உள்பட அந்த பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேற்று பகலில் மாவட்ட ஆட்சியர் மலர்விழியைச் சந்தித்தனர்.

 

அவர்கள் மதகுபட்டி பகுதியில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் சுமுகமான நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்தப் பிரச்சினை குறித்து சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக ஆட்சியர்   தெரிவித்தார்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.