இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தீபாவளி நேற்று உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்து இருந்தனர். எனினும் நள்ளிரவு வரை பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதே போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள ஆலந்தூர், பொழிச்சலூர், பல்லாவரம், பம்பல், மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் சென்னை விமான நிலையத்தை சுற்றி கடும் புகை மூட்டம் உருவானது. விமானங்களின் ஓடுபாதையிலும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து இரவு 10.30 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தை தரை இறக்க முடியாத சூழ்நிலை உருவானது. நீண்ட நேரத்துக்கு பின்னர் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து புகை மூட்டமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், ஹாங்காங், தோகா, கத்தார், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புறப்படும் விமானங்களும் மற்றும் டெல்லி, மும்பை, கல்கத்தாவுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணி வரை புகைமூட்டம் இருந்தது. பின்னர் நிலைமை சீரானது. இதை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு பின்னர் ஒவ்வொரு விமானமாக புறப்பட்டு சென்றன. புகைமூட்டத்தால் 23 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. -தீபாவளி கொண்டாட்டம் தந்த திண்டாட்டம் இது. பேருந்து, தொடர்வண்டி நெரிசலில் மக்கள் பட்ட அவதிக்கு இது பெரிதொன்றும் இல்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



