Show all

கலைத்துறை போராட்டம்! காவிரி விவகாரத்தில், தேசத் துரோக அரசியல் நடத்தி வரும் பாஜகஅரசைக் கண்டித்து

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் ஆளும் பொறுப்பில் உள்ள பாஜக சட்டப் படியான தீர்ப்பு கிடைத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தேசத் துரோக அரசியல் நடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சியினரும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் சாலை மறியல், தொடர்வண்டி மறியல்களில் அணி, அணியாக பங்கேற்று கைதாகி வருகிறார்கள். வணிகர்கள் கடைகளை மூடி முழு அடைப்பிலும் ஈடுபட்டனர். 

நடிகர்-நடிகைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

உண்ணாவிரத போராட்டம் நடத்த நடிகர்-நடிகைகள் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கண்டன மவுன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.

போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரம் பேருக்கும் அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டு உள்ளது என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார். போராட்டத்தில் தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தினர் மற்றும் இயக்குநர்களும் கலந்துகொள்கிறார்கள். போராட்டத்தின் முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

நடிகர்-நடிகைகள் போராட்டத்துக்காக வள்ளுவர் கோட்டம் அருகே பந்தல் மற்றும் மேடை அமைக்கப்படுகிறது. பலத்த காவல்துறை பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.