Show all

எப்படி இருக்கு பூமி!

இயற்கை வேளாண் இயல்அறிவர் நம்மாழ்வார், ஊர் ஊராகச் சென்று உழவர்களுக்கு சொன்ன செய்திதான் இந்தப்படம். முழுமையான தீர்வுக்கு, இந்தச் செய்திகளுக்கு ஆதரவான ஆட்சி ஒன்றியத்தில் வரவேண்டும். அதுவரை இந்தச் செய்திகளைத் திரையில் மட்டுமல்ல, நிறைய தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. 

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஜெயம் ரவி நடிப்பில் இந்த உழவர் திருநாளில் எண்ணிமத் திரையில் வெளியாகியிருக்கும் பூமி, எடுத்துக்கொண்ட மையக் கருத்திலிருந்து கொஞ்சம்கூட விலகாமல், கடைசி வரையிலும் வேளாண்மை பேசியிருக்கிறது. அந்த வகைக்கு இந்தப்படத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கவர்ச்சி அறிவிப்புகள் என அனைத்தையும் சேர்த்துக் கொண்டு, ஒட்டுமொத்த தேசத்தையே சூறையாட நினைக்கின்ற கார்ப்பரேட்களுக்கு எதிராக மட்டுமே மொத்தப் படமும் நிற்கிறது.

விடுமுறையில், தமிழகத்தில் இருக்கும் சொந்தக் கிராமத்துக்கு வரும் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவின் இயல்;;அறிவர் பூமிநாதன், இங்கே வேளாண்மைக்கும், உழவர்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு கொந்தளிக்கிறார். உழவர்கள், கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள். அதிகாரிகளோ, அரசுப்பிரதிநிதிகளோ அவர்களை துச்சமாகத் துரத்தும் சூழலில், ஒரு உழவர் தற்கொலை செய்துகொள்கிறார். இதைக் கண்டு குமுறும் பூமிநாதன், செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் வாய்ப்பைத் தூக்கி வீசிவிட்டு, வேளாண்மையில் கால் பதிக்கிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகள், வீரிய விதைகள், உரம், பூச்சிக்கொல்லி போன்றவைதான் உழவர்களின் சிக்கல்களுக்குக் காரணம் என்பதை உணர்ந்து, அவை அனைத்துக்கும் விடைகொடுத்துவிட்டு, தற்சார்பு வேளாண்மையான, இயற்கை வேளாண் இயல்அறிவர் நம்மாழ்வார், ஊர் ஊராகச் சென்று உழவர்களுக்கு சொன்ன இயற்கை வேளாண்மையைக் கையில் எடுக்கிறார்.

கார்ப்பரேட்கள் தூக்கி வீசும் எலும்புத்துண்டுக்காக வேலை பார்க்கும் அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கூட்டணி அதிர்ந்துபோகிறது. பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளியின் கட்டளைகளை அடுத்தடுத்து நிறைவேற்றுகிறார்கள். 

பூமிநாதன் நடத்தும் இயற்கை வேளாண் திருவிழாவின்போது உழவர்கள் சிலருக்கு நுண்நச்சைப் பரப்பி சிக்கலைக் கிளப்புகிறார்கள். இயற்கை வேளாண்மைக்காக பூமிநாதன் தயாரித்த இடுபொருள்களிலிருந்துதான் நுண்நச்சு உருவாகி, 26 உழவர்களின் பார்வையைப் பறித்துவிட்டது என்று சொல்லி, இயற்கை வேளாண் பண்ணையையே அழிக்கிறார்கள். பூமிநாதனைக் கைது செய்து, கார்ப்பரேட் முதலாளி முன் நிறுத்துகிறார்கள்.

உங்க நாடே எனக்கு அடிமை. நீங்களெல்லாம் எனக்கு அடிமை. இந்த உலகமே 13 கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் சொந்தம். காலையில எழுந்ததிலிருந்து, தூங்கற வரைக்கும் நீங்க என்னென்ன செய்யணும், எது எதைப் பார்க்கணும், எது எதை சாப்பிடணும்னு எல்லாத்தையுமே நாங்கதான் தீர்மானிக்கிறோம். உங்களால எதையுமே மாத்த முடியாது. செவ்வாய் கிரகத்துக்குப் போயிருந்தா, உலகமே உன்ன கொண்டாடியிருக்கும். ஆனா, இப்ப சிறைக்குப் போகப்போறே. இன்னும் 50 ஆண்டுகளுக்கு உள்ளயே இருந்து, நாங்க நடத்தற எல்லாத்தையும் உள்ள இருக்கிற திரைக்காட்சியில் பார்த்துப் பார்த்து செத்துப்போ. அதுக்காவே இப்ப நான் உன்ன கொல்லாம விடறேன் என்று வசனம் பேசுகிறார்.

என்ன இப்பவே கொன்னுடு. இல்லாட்டி, இந்த நாட்டை விட்டே உன்னை நான் துரத்திடுவேன் என்று பூமிநாதன் பேசும் வசனத்தை அசட்டை செய்தபடி சிரித்துக்கொண்டே அடுத்த நாட்டுக்குப் பறக்கிறார் கார்ப்பரேட் முதலாளி.

இதைத் தொடர்ந்து, பூமிநாதன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதும், ஒவ்வொன்றாக கார்ப்பரேட் முதலாளி தகர்த்துக்கொண்டே வருவதும் நேற்றைய, இன்றைய, நாளைய உண்மைகளே. ஆம், நேற்றைய பசுமைப் புரட்சி, இன்றைய மரபணு மாற்று விதைகள், நாளைய கார்ப்பரேட் சந்தை அனைத்தும் நாம் அனுபவித்து வரும் உண்மைகள்தானே!

மலைக்கிராமங்களில் இயற்கையாக சேகரிக்கப்பட்டு பயன்பாட்டிலிருக்கும் இயற்கை விதைகளைக் கொண்டுவந்து உழவர்களுக்குக் கொடுப்பது, ஒற்றை நாற்று, பஞ்சகவ்யா, நாட்டுக்கோழி, நாட்டுமாடு, நாட்டு ஆடு, என்று கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக இயற்கை வேளாண் இயல்அறிவர் நம்மாழ்வார், ஊர் ஊராகச் சென்று உழவர்களுக்கு சொன்ன முயற்சியால், மீண்டும் கையிலெடுக்கப்பட்டுவரும் மரபு வேளாண் நுணுக்கங்கள் அனைத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்.

கடைசி கட்டத்தில் இயற்கை வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழிப்பதற்காக- சிறுகடைகள் தொடங்கி, அனைத்து வணிகச் சந்தைகளிலும் கார்ப்பரேட் தயாரிப்புப் பொருள்களையெல்லாம் சிறப்புவாய்ப்பு என்கிற பெயரில் அள்ளிவிடுகிறார் கார்ப்பரேட் முதலாளி. மக்கள் கூட்டம் நொடிகளில் அந்தக் கடைகளை ஆக்கிரமித்து பூரித்தபடி அள்ளிக் கொண்டு போகின்றன. 

இதைப் பார்த்து பூமிநாதனும் அவருடன் தோளுக்குத் தோளாக நின்று இயற்கை விவசாயத்தைத் தூக்கிப் பிடித்தவர்களும் துவண்டு போகிறார்கள்.

கார்ப்பரேட்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்; எந்த எல்லைக்கும் செல்லமுடியும்; அரசாங்கத்தையே விலைக்கு வாங்கமுடியும் என்பதெல்லாம் உண்மையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு அல்லவா? 

கோயில் கோபுர, விமானக் கலசங்களில் வைக்கப்பட்டிருப்பது நாட்டுவிதைகள்தான். விதைச் சேமிப்புக்காக பாரம்பர்யமாக நாம் கடைபிடித்துவரும் வழக்கங்களில் ஒன்றுதான் இதுவும் என்பதை வலியுறுத்துகிறார் பூமிநாதன். 

அந்த விதைகளை எடுத்துப் பயன்படுத்தலாம் என்று கிளம்பும்போது, மதவாத அரசியல்கட்சிகள் போர்க்கொடி தூக்கி இடைஞ்சல் கொடுக்கின்றன. அரசியல் மற்றும் மதம் என்கிற பெயரில் கார்ப்பரேட்களுக்கு துணை நிற்பதையும் இதன்மூலமாக பட்டவர்த்தனமாக உரித்துக்காட்டியுள்ளனர் படக்குழுவினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.