Show all

தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி! மகளிர் மட்டைப்பந்தாட்ட 4-வது ஒரு நாள் போட்டியில்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் துடுப்பாட்ட அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் துடுப்பாட்ட அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் துடுப்பாட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒரு நாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடைபெற்றது.

இதில் சுண்டல் (டாஸ்) வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரியா புனியா மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் முறையே 32 மற்றும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பூனம் ராவத், 123 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்தார். அணியின் தலைவி மிதாலி ராஜ், 45 ஒட்டங்களில் பந்துபிடிக்கப்பட்டு வெளியேறினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 35 பந்துகளில் 7 அடித்தளங்கள், 1 ஆறுடன் 54 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி 50 ஆட்டங்கள் முடிவில் 4 மட்டையாளர்களை இழந்து 266 ஓட்டங்கள் குவித்தது. பூனம் ராவத் (104 ஓட்டங்கள்), தீப்தி சர்மா(8 ஓட்டங்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 267 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

தென்னாப்பிரிக்க அணியில் முதல் வரிசையில் களமிறங்கிய 4 வீராங்கனைகளும் ஐம்பதைக் கடந்து அசத்தினர். இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் கவுர், மான்சி ஜோஷி, கேய்க்வாட் ஆகிய மூவரும் தலா ஒரு மட்டையாளரை வீழ்த்தினர். 

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 48.4 ஆட்டங்கள் முடிவில் மூன்று மட்டையாளர் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் குவித்து 7 மட்டையாளர் வேறுபாட்டில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.