Show all

உலகின் மூன்று கோட்பாடுகள்!

ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள் ஆனாலும் சரி, அவைகளில் அடிப்படையாகப் பொதிந்திருக்கிற கோட்பாடுகளை தமிழ் அறிவுத்தளத்தில் இருந்து பாகுபாட்டியல், முரண்பாட்டியல், வகைபாட்டியல் என்கிற மூன்றும் என்று நிறுவலாம்.

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்த மூன்று தலைப்புகளைப் பார்ப்பனிய அறிவுத் தளத்தில்- அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் அவர்களுடைய கோட்பாடாக அத்வைதத்தை கொண்டாடுகின்றனர். அதை தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்ற திராவிட இயக்கங்கள் சனாதனம், வைதீகமதம், ஹிந்துத்துவா என்று கடிந்து கொண்டு அதற்கு எதிரான முரண்பாட்டியலை முன்னெடுக்கின்றனர். 

மார்க்சியக் கோட்பாடுகள் உலக மதங்களின் பாகுபாட்டியலுக்கு எதிரான முரண்பாட்டியலை முன்னெடுக்க அமைப்பு கட்டி உலகளாவி இயங்கி வருகிறது. உலகத்தில் இரசியா, சீனா, கிழக்கு ஜெர்மனி என்று பல நாடுகள் அந்ததளத்தில் பயணிக்கத் தொடங்கிய போதும் சில நாடுகள் பொருளாதார கேட்பாடுகள் சார்ந்த பாகுபாட்டியலுக்கு திரும்பிவிட்டன.

நாம் முரண்பாட்டியல் என்று பட்டியலிடுகிற விசிஷ்டாத்வைதம் தன்னுடைய நிலைப்பாடு என்று தமிழ்நாட்டில் உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவி பல்லாயிரம் உறுப்பினர்களை இணைத்து செயல்பட்ட வேதாத்திரி என்பவர் தான் கொண்டாடும் விசிஷ்டாத்வைதம் குறித்து அளிக்கும் விளக்கம் இது:

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால், உணவுப் பெட்டியில் உணவை எடுத்துச் செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும், இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம்தானே?

அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய  மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு, அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்த செயல் ஒழுங்குதான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், ‘த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி’ என்றும், ‘அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி’ என்றும், சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களை குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் உண்டு. ‘‘எல்லாம் ஒன்று’’ என்பது அத்வைதம். ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று ‘‘மாறுபடுகிறது’’ என்பது த்வைதம். எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.

திராவிட இயக்கங்கள் சனாதனம், வைதீக மதம், மனுவாதி என்று எதிர்கிற, இன்றைக்கு ஒன்றிய ஆட்சியில் இருக்கிற பாஜக ஹிந்துத்துவா என்று கொண்டாடுகிற நாம் பாகுபாட்டியல் என்று பட்டியல் இடுகிற அந்தக் கோட்பாடு- 
தங்களுக்கு தமிழ்முன்னோர் கொண்டாடிய ‘முதலெனப்படுவது இடமும் பொழுதும்’ என்கிற த்வைதக் கோட்பாட்டில் இருந்து கிடைத்தது என்று நிறுவும் வகையில்- 

தமிழ்முன்னோர் கொண்டாடிய ‘முதலெனப்படுவது இடமும் பொழுதும்’ என்கிற த்வைதம் பிழையானது (தமிழ் நீச பாஷை என்று அவர்கள் தெரிவிக்கிற வகையாகவே) என்று சாடி தங்களுடைய கோட்பாடு அத்வைதம் என்கின்றனர். (அவர்கள் கூற்றுப்படியே த்வைதம் என்பது நேர்மறைச் சொல். அதற்கான எதிர்மறைச் சொல்லான அத்வைதம் பார்ப்பனியர்கள் கோட்பாடு என்ற வகையில் தமிழர்கோட்பாடாக அவர்கள் பெயரிடுகிற த்வைதமே அவர்களின் அத்வைதத்திற்கு அடிப்படை என்பதற்கு கீழ்கண்ட ஆதிசங்கரர் அத்வைதத்தை கொண்டாடும் செய்தி நமக்குப் புலப்படுத்துவதாகிறது.)
 
‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். ‘அத்வைதம்’ என்றால் என்ன? ‘த்வி’ என்றால் இரண்டு. two என்பது அதிலிருந்து வந்ததுதான். ‘த்வி’யிலுள்ள த் (d) என்பதே ‘டூ’ வில் ‘ட்’ (t) ஆகிவிட்டது. உச்சரிப்பில் ‘டூ’ என்று சொன்னாலும், ஸ்பெல்லிங்கில் t-க்கு அப்புறம் w வருகிறது w- வுக்கு ‘வ’ சப்தமே உண்டு. ‘த்வி’யில் உள்ள ‘வ’ தான் இங்கே w – ஆகிவிட்டது. ‘த்வி’தான் two – இரண்டு. ‘த்வைதம்’ என்றால் இரண்டு உண்டு என்று நினைப்பது. ‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம்.

எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது. இதெல்லாம் வெறும் வேஷம்தான். ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் ஸ்வாமி ஒருத்தன்தான். ஜீவாத்மா பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மாதான். ‘நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அநுபவத்தில் அடைந்துவிட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்கமாட்டோம்; ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகிவிடுவோம்’ என்பதுதான் ஆசாரியாள் உபதேசித்த அத்வைத தத்துவம்.

இந்த அநுபவத்தை அடைந்துவிட்டால், அப்புறம் கஷ்டம், பயம், காமம், துவேஷம், எதுவும் நம்மைக் கட்டுப்படுத்தாது. நமக்குப் புறம்பாக எதுவோயிருப்பதாக நினைப்பதால்தானே அதனிடமிருந்து கஷ்டம், பயம், காமம், குரோதம், இத்யாதிகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன! இது தானே சம்ஸார பந்தம்? நம்மைத் தவிர இன்னொன்றே இல்லாதபோது எவன் கட்டப்படுவான், எது கட்டுப்படுத்தும்? கட்டு என்பதுதான் ஏது? இரண்டாவது வஸ்துவேதான் கிடையாதே! கட்டு என்றும் கட்டுகிற வஸ்து என்றும் நமக்கு வெளி வஸ்து எப்படியிருக்க முடியும்? கட்டிலிருந்து விடுபட்ட (முச்-விடுபடுதல்) இந்த நிலைதான் முக்தி அல்லது மோக்ஷம்.

‘இந்த நிலையை எங்கேயோ வைகுண்டத்தில், அல்லது கைலாசத்தில் என்றைக்கோ போய்ப் பெற வேண்டியதில்லை. இதை இங்கேயே இப்போதே அநுபவித்து விடலாம். வாஸ்தவத்தில் இந்த மோக்ஷத்தை நாம் ஒன்றும் புதிதாக அடைவதும் இல்லை. பிரம்மம் என்கிற எல்லையற்ற சத்தியம் எப்போதுமே கட்டுப்படாத மோக்ஷமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது — பிரபஞ்சத்தில் ஆகாயம் (space) எங்கு பார்த்தாலும் கட்டுப்படாமல் இருக்கிற மாதிரி இந்தப் பிரபஞ்சத்திலேயே பல பானைகளை வைத்திருக்கிறோம் என்றால், அவற்றுக்குள் இருக்கிற காலியிடத்திலும் எப்போதும் அந்த ஆகாசம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒன்று எங்கும் பரந்து விரிந்த மஹாகாசம், மற்றது பானைக்குள் (கடத்துக்குள்) உள்ள கடாகாசம் என்று நம் பார்வையில் வேண்டுமானால் பிரித்துச் சொல்லலாமே தவிர, இரண்டு ஆகாசமும் வாஸ்தவத்தில் ஒன்றேதான். பானை என்கிற ரூபத்தை உடைத்துப் போட்டுவிட்டால் நம் பார்வைக்குக்கூட இரண்டும் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. இப்படியே பிரம்மத்தில் தனித்தனி பானைகள் மாதிரி நாம் மாயாசக்தியால் தோன்றியிருக்கிறோம். ஆனாலும் நாம் பிரம்மமேதான். மாயையின் பந்தத்தால் இது நமக்குத் தெரியவில்லை. அதை உடைத்து விட்டால் நாமும் அகண்டமான பிரம்மமே என்ற அநுபவம் வந்துவிடும்.

அந்த அநுபவம் சித்திப்பதற்குப் படிகளாக கர்மம், உபாஸனை இப்படிப் பல இருக்கின்றன. ஆசாரியாள் நாம் எல்லோரும் ஏறிப்போவதற்கு சௌகரியமாகப் படிக்கட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த உபாயங்களை அநுஷ்டிக்கிற போதே, நாம் பார்ப்பவை யாவும் ஒன்றுதான் என்ற நினைப்பும் நமக்கு உள்ளூர இருந்துகொண்டே இருக்க வேண்டும். ‘எல்லாம் ஒன்று’ என்பது பிரத்தியட்ச அநுபவமாக வருகிறபோது வரட்டும். ஆனால், இதுதான் உண்மை என்ற நினைப்பை இப்போதிலிருந்தே அடிக்கடி உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டார். ஆனால் உலகத்தில் வேறு வேறாகத் தெரிகிற எல்லாப் பிராணிகளையும் ‘நாமாக’ எப்படிப் பார்ப்பது என்று குழப்பமாக இருக்கிறது.

ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தை (நிலை)களுண்டு. சாதாரணமாக விழித்துக் கொண்டிருப்பது ஜாக்ரம்; கனாக் காண்பது ஸ்வப்னம்; ஒன்றும் தெரியாமல் தூங்குவது ஸுஷுப்தி. இந்த மூன்று அவஸ்தைகளிலும் ஒருவனேதான் இருக்கிறான். கனாக் கண்டவனும் விழித்துக் கொண்டவனும் ஒருவனே. ஆனால், கனாக் கண்ட பொழுது நடக்கிறவைகளுக்கும், விழித்துக் கொண்டபின் நடக்கிறவைகளுக்கும் முன்னுக்குப் பின் சம்பந்தமே இல்லை. கனவில் வேற விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. விழித்துக்கொண்டபோது வேறே விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. அவஸ்தை வேறுபட்ட போதிலும், மனோபாவம் வேறுபட்ட போதிலும் இரண்டிலும் ஒருவனே இருப்பதுபோல, வேறு வேறு மனோபாவம் கொண்ட பல பிராணிகளிடத்திலும் இருப்பவன் ஒருவனே: அவனே நாம் என்று தெளிய வேண்டும்.

ஒரு காலத்தில் நமக்குச் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு சமயத்தில் கோபம் இருக்கிறது. ஆனாலும் இரண்டு அவஸ்தையிலும் இருப்பவன் ஒருவனே என்பது அநுபவத்தில் தெரிகிறது. அவஸ்தா பேதங்களில் நம் முகம், கைகால் எல்லாவற்றின் போக்கும் மாறுகின்றன. காலபேதத்தால் குழந்தை கிழமாகிறபோது தேகங்கூட வேறாக மாறுகிறது. இது விவகார உலகத்தில், ஸ்வப்பன உலகத்திலே கேட்கவே வேண்டாம். நம் ஒருவருடைய மனஸிலிருந்தே பல பேருடைய ரூபங்கள், பல வேறு இடங்கள் பல வேறு காலங்கள் எல்லாம் கனவில் உண்டாகின்றன. நாம் செய்யக்கூடாதென்று நினைக்கிற காரியங்களையெல்லாம் கனவில் செய்வதாகக் காண்கிறோம். இம்மாதிரி அவஸ்தா பேதங்களில் ஒன்றுக்கொன்று விரோதமான காரியங்களைச் செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும் மனஸும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவனே என்பது தெரிகிறது. நமக்கு ஜன்னி பிறந்தால் அதற்கு முன் நாம் செய்த காரியங்களுக்கு விரோதமாகச் செய்கிறோம். நாம் முன்பு ஒரு புஸ்தகம் எழுதியிருந்தால் இப்போது அதை நாமே கிழித்து விடுகிறோம். எழுதியவனும் கிழித்தவனும் ஒரே பேர்வழி.

இந்த உலகமும் ஒரு கனவுதான். உலக வாழ்வும் மாயா ஜுரத்தில் வந்த ஜன்னி என்று தெரிந்து கொண்டால், உண்மையில் எல்லாம் ஒன்று என்று உணர்வோம். நம் கனவில், நம் ஒருத்தரின் மனமே இத்தனை பேரை சிருஷ்டித்த மாதிரி, மகா பெரிய மனசு ஒன்றின் எண்ணங்கள்தான் இத்தனை ஜீவராசிகளும் என்று தெரியும். மற்றொருவன் நாம் எழுதிய புஸ்தகத்தைக் கிழித்தால் அவனும் நாம்தான் என்று உணர்வோம். விவகார உலகத்தில் எழுதியவனும் கிழிப்பவனும் வெவ்வெறு தேகத்தில் இருப்பதனால் வாஸ்தவத்தில் உள்ளேயிருப்பவன் வேறாகி விடமாட்டான். எல்லாவற்றுக்குள்ளேயும் இருப்பது ஒன்றுதான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தப்பு. நாமே நம்மை அடித்துக்கொள்கிறோம் என்பதுதான் சத்தியம்.

இது சத்தியமில்லை என்றால், ஸ்வாமி அல்லது பிரம்மத்துக்குப் புறம்பாக இன்னொன்று இருக்கவேண்டும். அப்படியானால் அது எங்கிருந்து வந்தது, அது எதைக்கொண்டு பண்ணப்பட்டது, அப்படிப் பண்ணினவன் யார் என்ற கேள்வி வருகிறது.

இப்போது நாம் அறிவுள்ள (சைதன்யமுள்ள) ஜீவர்கள் என்றும், அறிவில்லாத ஜடப்பிரபஞ்சம் என்றும் இருக்கிறோம். ஜடப்பிரபஞ்சத்தை நாம் உண்டு பண்ணவில்லை. அதே மாதிரி ஜடப்பிரபஞ்சமும் நம்மை உண்டு பண்ணவில்லை—அறிவில்லாத அது எப்படி, தானாக ஒரு காரியத்தைப் பண்ண முடியும்? அதிலும் அறிவில்லாத ஜடம் எப்படி அறிவுள்ள ஜீவனை உண்டாக்க முடியும்? அறிவில்லாத ஜடப் பிரபஞ்சம் அநாதி காலமாக ரொம்பவும் கிரமத்தோடு நடந்து வருகிறது என்றால், அதை ஒரு பேரறிவுதான் படைத்து நடத்தி வர வேண்டும். அப்பேரறிவு வேறு ஏதோ வஸ்துவைக் கொண்டு பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால், அந்த வேறொரு வஸ்து எப்படித் தானே வந்தது என்று கேள்வி வருகிறது. எனவே, பேரறிவேதான் இப்படித் தன்னைத் தானே ஜடப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது என்றாகிறது. அப்புறம், இந்த ஜீவர்கள் இருக்கிறோமே! நாம் நாமாகவா உண்டானோம்? ஜீவ ராசிகளில் ஒவ்வொரு இனமும் ஒரேவிதமான சுபாவங்கள், குண விசேஷங்கள், சரீர அமைப்பு ஆகியவற்றோடு இருப்பதைப் பார்த்தால் அது அதுவும் தனித்தனியாக இப்படி உண்டாகியிருக்க முடியாது என்று நிச்சயமாகிறது. ஆனபடியால், இந்த ஜீவ சமூகம் முழுவதையும் ஒரு பேரறிவுதான் படைத்திருக்கிறது என்றாகிறது. ஜீவனுடைய அறிவு வேறெங்கிருந்தோ வரவில்லை; அந்தப் பேரறிவின் வேலைதான் என்று தெரிகிறது.

இந்த ஜீவர்களுக்கு உணவு, உடுப்பு முதலியன ஜடப் பிரபஞ்சத்திலிருந்து கிடைக்க வேண்டியிருக்கிறது. ஜடத்தில் உள்ளவற்றை—வாசனை, சுவை, சீதம் உஷ்ணம் முதலியவற்றை—அநுபவிக்க ஜீவனுக்கு இந்திரியங்கள் இருக்கின்றன. இப்படி ஜடப் பிரபஞ்சமும் ஜீவப்பிரபஞ்சமும் ஒன்றுக்கொன்று நெருங்கிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது ஜீவனாக ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தம் அல்ல, இவன் ஜடப்பிரபஞ்சத்திலிருந்துதான் சாப்பாடு, துணி, வீடு, எல்லாம் பெற வேண்டும் என்று இவனா திட்டம் போட்டான்? இவன் போட்டால்தான் அது கட்டுப்படுமா? எனவே அந்தப் பேரறிவுதான் இப்படி சங்கற்பம் செய்து, இவனை அதோடு சம்பந்தப்படுத்தி வைத்திருக்கிறது என்று தெரிகிறது. ஜடப் பிரபஞ்சத்தை ஏதோ ஒரு சக்தி படைத்தது. ஜீவப் பிரபஞ்சத்தை வேறொரு சக்தி படைத்தது என்றால் இவை இரண்டையும் இப்படிச் சேர்த்துப் பிடித்துச் சம்பந்தப்படுத்தி வைக்க முடியாது. எனவே ஜடம், சைதன்யம், இரண்டுக்குமே மூலம் அந்தப் பேரறிவுதான் என்றாகிறது. அது ‘படைத்தது’ என்று சொன்னாலும் வெளி வஸ்துவைக் கொண்டு படைக்கவில்லை என்று பார்த்தோம். எனவே, அதுவேதான் இத்தனை போலவும் தோன்றுகிறது என்பதே பரம சத்தியம். ஆக, இருப்பது ஒன்றுதான். ஒன்றே பலவிதமாகத் தோன்றுகிறது. இப்படிப் பலவகையாகத் தோன்றுவதற்குரிய சக்தி அதற்கு இருக்கிறது. அதைத்தான் மாயை என்பது. ஒரே பிரம்மம் மாயா சக்தியால் பலவற்றைப்போல் தெரிகிறது என்பதுதான் அத்வைதம்.

ஜகத் முழுவதையும் இந்த மாதிரி ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லாம் ஒன்றானால் தானும் பிறரும் வேறு வேறாக இருக்க முடியாது. இந்நிலையில் ஜகத்தும்கூட அறியப்படுகின்ற வஸ்துவன்று. அறிபவனாகிய தானே அது என்ற அநுபவம் வந்து விடும். இப்பொழுது கை நாமாகத் தோன்றுகிறது. கால் நாமாகத் தோன்றுகிறது. உடம்பு நாமாகத் தோன்றுகிறது. இதுபோல் உலகனைத்தும் நாமாகிவிட வேண்டும். அப்படிப்பட்ட ஞானம் ஒருவனுக்கு அநுபவத்தில் வந்தால், அவன் சண்டாளனாயிருந்தாலும் அவன்தான் பண்டிதன். ஆசார்யாள் இதை “மனீஷா பஞ்சக”த்தில் எடுத்துச் சொல்கிறார். இந்த ஞானம்தான் மாறாத ஆனந்தமான மோக்ஷம்; இந்தச் சரீரத்தில் இருக்கும்போதே அநுபவிக்கக் கூடிய மோக்ஷம்.

இனி அனைத்துக் கோட்பாடுகளுக்கும் அடிப்படையாகவும் இயற்கையின் இயங்கியலாகவும் இருக்கிற வகைபாட்டியல் என்று நாம் பட்டியல் இடுகின்ற தமிழர் கோட்பாட்டிற்கு வருவோம்.

'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே' என்பதுதான் தொல்காப்பிய நூற்பா! அதன் எளிய பொருள்: முதல் எனப்படுவது இடமும் காலமும் என்பதாகும். நாம் செய்யும் செயல் எவ்வித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை, முதன்மைத் தேவை என்பதை நம் பண்டைத் தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். அதனை 'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே' என தொல்காப்பியம் சொல்கின்றது.

உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு. அந்தச் சிறப்பை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல துணையாக இருப்பவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். 

உலகில் உள்ள மனித இனங்களின் படையெடுப்பால் எம் பண்டைய பெருமைகளைக் கூறும் கலைச்செல்வங்கள், கட்டிடங்கள், நூல்கள், நூலகங்கள் களவு எடுக்கப்பட்டு அழித்து எரிக்கப்பட்ட போதும் தமிழரின் பெருமையை எடுத்துக் காட்டுவன தமிழ்ச்சங்க இலக்கிய நூல்களே.

காலம் என்றால் என்ன? நேரத்தின் அளவைக் காலம் என்ற சொல்லால் குறிக்கிறோம். ஒரு செயல் எப்போது நடந்தது? என்பதைக் காட்டுவது வினைச்சொல்லாகும். அந்தச் செயல் நடந்ததா? நடக்கிறதா? நடக்கப்போகிறதா? என்னும் காலத்தைச் சரியாகக் காட்டுவது வினைச் சொல்லே. அதனால் தொல்காப்பியர் வினைச்சொல்லை 'காலக்கிளவி' என்றும் அழைக்கிறார். கிளவி என்றால் சொல். ஒரு செயல் நடைபெற்ற காலத்தை இறந்தகாலமா? நிகழ்காலமா? எதிர்காலமா? என்னும் மூன்று காலத்தையும் சொல்லைக் கொண்டு படித்தான், படிக்கிறான், படிப்பான் என்று அறிகிறோம் அல்லவா? அச்சொல் செயல் நடந்த காலத்தைக் காட்டுவதால் காலக்கிளவி என்றார். 

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே 'காலம்' என்னும் சொல் தமிழில் இருந்ததை 'காலம்தாமே மூன்று என மொழிப' என்று இந்த தொல்காப்பிய நூற்பாவில் சொன்னார்கள் (மொழிப) என்று தொல்காப்பியர் குறித்துள்ளதால் அறியலாம்.

காலத்தை தொல்காப்பியர் 'பொழுது' என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்றார். இன்று வாழும் தமிழர்களாகிய நாமும் 'எப்பொழுது வந்தீர்கள்? எப்பொழுது கொண்டுவர வேண்டும்? எனக் கேட்கும் போதும், பொழுதோடு வந்துவிட்டேன் எனச் சொல்லும் போதும் காலத்தை பொழுது என்ற சொல்லால் தானே குறிப்பிடுகிறோம்!

நாம் செய்யும் செயல் எதுவித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை முதன்மைத் என்பதை நம் பண்டைத் தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். 

ஒன்றைச் செய்வதற்கு தேவையான முதல் பணமோ பொருளோ அல்ல.  எதனைச் செய்யத் தொடங்கும் போதும் அதனைச் செய்வதற்கு ஏற்ற இடம், ஏற்ற காலம் ஆகிய இரண்டும் தேவை ஆதலால் அவற்றை முதல் என்றார். இத்தொல்காப்பிய நூற்பா நிலம் என இடத்தையும் பொழுதெனக் காலத்தையும் சுட்டுகிறது. 

காலத்தை - பொழுதை நம்முன்னோர் பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பிரித்தும் வைத்துள்ளனர். ஒரு ஆண்டை ஆறு பொழுதுகளாக (காலங்களாக) பிரித்து அவற்றை 'பெரும்பொழுது' என்றனர். அதை நம்பியகப்பொருள் 

'காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிளவேனில் வேனிலென்றாங்கு இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுது'                 என்கின்றது. 

அதாவது கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், வேனிற்காலம் என்ற ஆறும் பெரும்பொழுதாகும்.

'மாலை யாமம் வைகுறு என்றா காலை நண்பகல் ஏற்பாடு என்றா அறுவகத்து என்ப சிறுபொழுது அவைதாம் படுசுடர் அமையம் தொடங்கி ஐஇருகடிகை அளவைய காணுங் காலே' என்று இலக்கணவிளக்கம் சொல்கின்றது.                அதாவது 'மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் (ஏற்பாடு) என்ற ஆறும் சிறுபொழுதாகும். ஓவ்வொரு சிறு பொழுதும் பத்து பத்து நாழிகைகள்.

எனவே அறுபது நாழிகை ஒரு நாள் ஆகும். இரண்டரை நாழிகையை ஒரு ஓரை என அழைத்தனர். பண்டைத்தமிழர் கணக்கின்படி 24 ஓரைகள் கொண்டது ஒரு நாளாகும். ஆதலால் பண்டைத் தமிழரின் கணக்குப்படி ஒரு ஓரை என்பது இன்று நாம் சொல்லும் ஒரு மணித்தியாலமேயாகும். அதனாலேயே ஒரு நாளை 24 மணித்தியாலங்கள் கொண்டது என்கின்றோம். 

நம்தமிழ் முன்னோரின் 'ஓரை' என்ற சொல்லையே கிரேக்கமொழியில் ஹோரா என்றனர். அதுவே ஆங்கிலத்தில் ஹவர் என்று மாறிற்று. ஆனால் நாமோ மேற்கு நாட்டினரே ஒரு நாளில் 24 மணி நேரம் இருப்பதைக் கண்டுபிடித்தனர் என்று ஏமாளிகளாக சொல்லியும் எழுதியும் வருகிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

10 நாழிகை - 1 சிறு பொழுது
6 சிறு பொழுது - 1 நாள்
60 நாழிகை - 1 நாள்
2½ நாழிகை - 1 ஓரை
4 ஓரை - 1 சிறு பொழுது
24 ஓரை - 1 நாள் 
1 ஓரை - 1மணி நேரம்

மனித இனத்துக்கு காலத்தை வகுத்துக் கொடுத்தவன் தமிழன் என்பதை 'ஓரை' எனும் சொல் எடுத்துச் சொல்கிறது. ஆதலால் காலக் கணிதமும் பண்டைத் தமிழர் வழங்கிய கொடை எனலாம்.

உலகில் முதன் முதலாக தொடர் ஆண்டுக்கணக்கை உருவாக்கியவன் தமிழன். 
தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.
ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில் தொடங்காது.
ஏனென்றால்- 

ஓர் ஆண்டு என்பதற்கு கால அளவு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை என முழுமையில்லாமல் இருப்பதுதாம்.
இந்தக் கால அளவு தமிழர் தம் விருப்பத்திற்கு கற்பனையாக அமைத்துக் கொண்ட கால அளவு அல்ல! 
நாம் வசிக்கும் இந்தப் புவியானது கதிரவனை ஒரு முழுச்சுற்று சுற்றுவதற்கான காலமாகும்.
நடப்பு தமிழ் தொடர் ஆணடு- 5123
இன்றைய விஞ்ஞானத்தில் கருவிகள் மூலம் வான மண்டலம் குறித்து ஏராளமான செய்திகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்.
வானவியலுக்கு முன்னோடியான தமிழனுக்கு இத்தனைச் செய்திகளும் அன்றைக்கே தெரிந்திருந்தது. என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது.
பூமி ஞாயிறைச் சுற்றுகிறதா? ஞாயிறு பூமியைச் சுற்றுகிறதா என்பதைத் தமிழன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான் என்று அறுதியிட்டுக் கூறவும் முடியாது.
ஆனால் ஞாயிறுக்கும் பூமிக்கும் தொடர்புடைய இரவு பகல் என்கிற நாள் சுழற்சி,
ஆறு பருவ மாற்றங்களை உள்ளடக்கிய ஆண்டுச் சுழற்சியைத் தெளிவாக அறிந்திருந்தான்.
நாள் சுழற்சிக்கு 60நாழிகை யென்றும் ஒரு நாழிகைக்கு 60 விநாழிகையென்றும் ஒரு விநாழிகைக்கு 60 தற்பரையென்றும்

அதே போன்று ஒரு முழுமையான ஆண்டு சுழற்சிக்கு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை யென்று காலத்தைக் கணித்து தலைமுறை தலைமுறையாக 5122ஆண்டுகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறான்.
சித்திரை,வைகாசி-இளவேனில்
ஆனி,ஆடி-முதுவேனில்
ஆவணி,புரட்டாசி-கார்
ஐப்பசி,கார்த்திகை-குளிர்
மார்கழி,தை-முன்பனி
மாசி,பங்குனி-பின்பனி
என்று அவன் கணித்த

பூமிக்கும்-ஞாயிறுக்கும் சம்பந்தப்பட்ட பருவகாலம் 5122 ஆண்டுகளாகவும் அப்படியே அதே மாதங்களில் நடைபெற்று வந்ததிலிருந்து ஓர் ஆண்டு என்பது 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை கொண்டது என்று தமிழன் 5122 ஆண்டுகளுக்கு முன்னமேயே கணித்தபடி
சரி
சரி
என்று இயற்கை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.