Show all

உலகுக்கு தமிழ்முன்னோர் அளித்த கொடையான திருமணம்! அயலவர் வருகைக்கு முந்தைய தமிழர்தம் இயல்நிலையில் கொண்டுள்ளது அகநானூறு

அயலவர் வருகைக்கு முந்தைய, தமிழர்தம் இயல்நிலையில் கொண்டுள்ளது, அகநானூற்றின் இரண்டு பாடலகளில். உலகுக்கு தமிழ்முன்னோர் அளித்த கொடையான திருமணம். அதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை. 

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் திருமணங்கள் அயலவர்கள் தமிழரோடு வந்து கலப்பதற்கு முன், எந்தவொரு சிறு அயலவர் நடைமுறையும் கொண்டிராமல் எப்படி முன்னெடுக்கப்பட்டு இருந்தது என்பதற்கு சான்றாக இரண்டு சங்க இலக்கியப் பாடல்களை நாம் பார்க்கலாம், ஒன்று அகநானூறு 86வது பாடல் மற்றொன்று 136 வது பாடல்.

அகநானூறு எண்பத்து ஆறாவது பாடல் நல்லாவூர் கிழார் எனும் புலவரால் எழுதப்பட்டது. தலைவியின் தோழிக்கு, தங்கள் திருமணம் குறித்து தலைமகன் சொல்லியதாக இந்தப்பாடல் அமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பாடல் சங்ககாலத்தில் தமிழர் முன்னெடுத்திருந்த திருமணத்தை விளக்குகிறது.

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.

இந்தப்பாடல் சொல்லுகிற செய்தி:
1. உழுந்து வடையுடன் விருந்துணவு படைக்கப்பட்டது. 
2. பந்தற்கால் நட்டுப் பந்தல் போடப்பட்டது. 
3. அந்தப் பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டது. 
4. மனையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. 
5. மாலைகள் தொங்கவிடப்பட்டன. 
6. இருள் நீக்கப்பட்டிருந்தது. 
7. அது வைகறைப் பொழுது. 
வைகறை அல்லது விடியற் காலை ஞாயிறு உதயத்திற்கு முன் ஏற்படும் மெல்லொளிக்கு முன்னான நேரமாகும். இவ்வேளையில் ஞாயிறு அடிவானத்தின் கீழ் இருக்கும்.
8. வட்டத்தைக் கொல்லும் பிறை இல்லாமல் முழு வளைவுடன் காணப்பட்ட வெள்ளை-நிலா தோன்றிய காலம் அது. அதாவது முழுநிலா நாள்.
9. அது கெடுதி இல்லாத விழுமிய புகழைக் கொண்ட தலைமையான நாள். முழுநிலா நாளானது, திருமணம் முன்னெடுப்பதற்கு உகந்த நாளாக தமிழர் கொண்டிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது. 

10. தலை உச்சியில், நீர் நிறைகுடத்துடன் மணமான பெண்டிர் சிலர், மணப்பெண்ணை வாழ்த்தும் முழக்கத்தோடு மணப்பெண்ணுக்கு முன்னேயும் பின்னேயும் வரிசை கட்டினர். 
11. தாய்மைபேறு அடைந்த மகளிர் நான்கு பேர் கூடிநின்று மணமக்களை வாழ்த்தி திருமணத்தை நடத்திவைத்தனர். 
12. ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்தி திருமணத்தை நடத்திவைத்தனர். 
13. அந்த வாழ்த்து: 'கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க' என்பதாகும். 
14. தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் கிடந்தன. 

15. 'கல்' என்ற சிரிப்பொலியுடன் மகளிர் சிலர் புகுந்து, 'மக்களுடன் பெரிய இல்லக் கிழத்தி ஆவாயாக! என்று பெற்றவர்கள் கூறினார்கள்' என்று சொல்லிக்கொண்டு திடீர் என்று ஒரே இல்லத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு புகுத்தப்பட்ட அவளுடன் நான் சேர்ந்திருக்கும் வேளையில்,

16. புத்தாடையை வளைத்துத் தன் உடம்பை மூடிக்கொண்டு அவள் ஒடுங்கிக்கொண்டிருந்தாள். அவளை ஒரு பக்கம் அணைத்தேன். பின் தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தைத் திறந்தேன். அவள் அஞ்சினாள். பெருமூச்சு விட்டாள்.
17. 'யாழ! உன் நெஞ்சில் இருப்பதை ஒளிக்காமல் சொல்' என்றேன். 
18. அவள் அமர்ந்துகொண்டே இனிமையாகப் புன்னகை பூத்தாள். 
19. நான் பின்னும் அதே வினாவை எழுப்பினேன் 
20. அவள் காதுகளில் இருந்த செவ்விய குழையணி ஆடிற்று. (ஒப்புதல் தரும் தலையசைவு அது) 
21. அவளுக்கு நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி. 
22. முகம் கொடுத்து என்னைப் பார்த்தாள். 
23. திடீரென அவள் முகத்தை என் நெஞ்சத்தில் புதைத்துக் கொண்டாள்.
தங்களுக்கு திருமணம் நடந்த நிகழ்வை தெரிவிக்கிறான் தலைவன்.

இந்தப் பாடலில் முழுதும் ஆரிய சடங்குகள் இல்லை, ஐயர் எனும் நபர் இல்லை, தாலி இல்லை. ஆனால் நாள் பார்த்து சுற்றத்தார் சூழ திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது.

அதே போன்று வீட்டு முற்றத்தில் போடப்படும் திருமணப் பந்தலில் வெண்மணல் பரப்புவது, பூச்சரம் கட்டுவது இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வருவது எண்ணி வியக்கத்தக்கது.

அதே போன்று தமிழர் திருமணத்தை விளக்கும் அகநானூறு 136வது பாடல். இதை எழுதியவர் விற்றூற்று மூதெயினனார், இப்பாடல், தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதாகப் பாடப்பட்டுள்ளது.

மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு,
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து, இனிய ஆகத் தௌ; ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்,
கடி நகர் புனைந்து, கடவுள் பேணிப்,
படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு, மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூ உடைப் பொலிந்து, மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணன் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்,
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,
'பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என,
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

இந்தப் பாடலின் பொருள்:
குற்றம் உண்டாகாதபடிச் சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோற்றை எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன் சுற்றத்தார்க்கும் சான்றோர்களுக்கும் உண்ணக் கொடுத்து அவர்களைக் கவனித்து, 

முழுநிலா நாளில், பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட வைகறைப் பொழுதில் மணமேடையை அழகுப்படுத்தி, கடவுளை வழிபட்டு, ஒலிக்கும் மண முரசுடன், பணை முரசும் ஒலிக்க (பல விதமான முழவு போன்ற முரசுகள் சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது, அந்த வகையில் பணை முரசு ஒருவகை பெரிய முரசு)

தலைவியை நீராட்டிய பெண்கள், தங்களின் மலர் போன்றக் கண்களால் இமைக்காமல் அவளை நோக்கி, பின் விரைந்து மறைய, 

ஒலிக்கும் வானின் முதல் மழைக்குத் துளிர்த்த கழுவிய நீலமணியை ஒத்தக்கரிய இதழ்களையும் கிழங்கையும் உள்ள அறுகம்புல்லின் குளிர்ந்த நறுமணமான அரும்புடன் தொடுத்த வெள்ளை நூலை அவளுக்குச் சூட்டி, 

மேகம் ஒலித்தாற்போல் ஒலியுடைய திருமணப் பந்தலில், அணிகளைச் சிறப்புடன் அணிந்த அவளின் வியர்வையைத் துடைத்து, அவள் குடும்பத்தார் அவளை எனக்குத் தர, 

முதல் நாள் இரவில், வெறுப்பு இல்லாத கற்புடைய அவள், என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் அவள், கசங்காத புத்தாடையால் தான் உடலை முழுக்கப் போர்த்தியிருக்க, 'உன் பிறை நெற்றியில் அதிகப் புழுக்கத்தினால் அரும்பியுள்ள வியர்வையைப் போக்க, உன் ஆடையைக் கொஞ்சம் திற' என்று கூறி ஆர்வ நெஞ்சத்துடன் மூடிய அவளுடைய ஆடையை நான் கவர, உறையினின்று எடுத்த வாள் போல அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி, விரைவாக நாணம் அடைந்து, வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் அழகிய நிறம் பொருந்தியப் பருமனான ஆம்பல் மலர்ச் சரம் அணிந்த தன்னுடைய கருமையான அடர்ந்தக் கூந்தலால், தன் உடலை மறைத்து என் முன் தலைக் குனிந்தாள் என்று தலைவன் தன் நெஞ்சத்திடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இந்த இரு திருமண பாடல்களிலும் குறிப்பிடத்தக்கது என்ன என்றால்?

பொருள் புரியாத வட மொழி யாப்புகள் இல்லை, புரோகிதர் இல்லை, எரி ஓம்பல் இல்லை, தீவலம் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி காட்டல் இல்லை, கோத்திரம் கூறல் உள்ளிட்ட எந்த மூடப் பழக்கத்திற்கும் தமிழர் திருமணம் ஆட்பட்டு இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு, நமது திருமணங்களில், நமது தமிழ்முன்னோர் முன்னெடுத்த நடைமுறையை செயல்படுத்திட எழுவோமாக.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,393.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.