Show all

'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்! உணர்ந்தோமா இற்றைத் தமிழர்

'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே' என்பதுதான் தொல்காப்பிய நூற்பா! அதன் எளிய பொருள்: முதல் எனப்படுவது இடமும் காலமும் என்பதாகும். நாம் செய்யும் செயல் எவ்வித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை, முதன்மைத் தேவை என்பதை நம் பண்டைத் தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். அதனை 'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே' என தொல்காப்பியம் சொல்கின்றது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு. அந்தச் சிறப்பை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல துணையாக இருப்பவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். 

உலகில் உள்ள மனித இனங்களின் படையெடுப்பால் எம் பண்டைய பெருமைகளைக் கூறும் கலைச்செல்வங்கள், கட்டிடங்கள், நூல்கள், நூலகங்கள் களவு எடுக்கப்பட்டு அழித்து எரிக்கப்பட்ட போதும் தமிழரின் பெருமையை எடுத்துக் காட்டுவன தமிழ்அவை இலக்கிய நூல்களே.

காலம் என்றால் என்ன? நேரத்தின் அளவைக் காலம் என்ற சொல்லால் குறிக்கிறோம். ஒரு செயல் எப்போது நடந்தது? என்பதைக் காட்டுவது வினைச்சொல்லாகும். அந்தச் செயல் நடந்ததா? நடக்கிறதா? நடக்கப்போகிறதா? என்னும் காலத்தைச் சரியாகக் காட்டுவது வினைச் சொல்லே. அதனால் தொல்காப்பியர் வினைச்சொல்லை 'காலக்கிளவி' என்றும் அழைக்கிறார். கிளவி என்றால் சொல். ஒரு செயல் நடைபெற்ற காலத்தை இறந்தகாலமா? நிகழ்காலமா? எதிர்காலமா? என்னும் மூன்று காலத்தையும் சொல்லைக் கொண்டு படித்தான், படிக்கிறான், படிப்பான் என்று அறிகிறோம் அல்லவா? அச்சொல் செயல் நடந்த காலத்தைக் காட்டுவதால் காலக்கிளவி என்றார். 

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே 'காலம்' என்னும் சொல் தமிழில் இருந்ததை 'காலம்தாமே மூன்று என மொழிப' என்று இந்த தொல்காப்பிய நூற்பாவில் சொன்னார்கள் (மொழிப) என்று தொல்காப்பியர் குறித்துள்ளதால் அறியலாம்.

காலத்தை தொல்காப்பியர் 'பொழுது' என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்றார். இன்று வாழும் தமிழர்களாகிய நாமும் 'எப்பொழுது வந்தீர்கள்? எப்பொழுது கொண்டுவர வேண்டும்? எனக் கேட்கும் போதும், பொழுதோடு வந்துவிட்டேன் எனச் சொல்லும் போதும் காலத்தை பொழுது என்ற சொல்லால் தானே குறிப்பிடுகிறோம்!

நாம் செய்யும் செயல் எதுவித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை முதன்மைத் என்பதை நம் பண்டைத் தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். 

ஒன்றைச் செய்வதற்கு தேவையான முதல் பணமோ பொருளோ அல்ல.  எதனைச் செய்யத் தொடங்கும் போதும் அதனைச் செய்வதற்கு ஏற்ற இடம், ஏற்ற காலம் ஆகிய இரண்டும் தேவை ஆதலால் அவற்றை முதல் என்றார். இத்தொல்காப்பிய நூற்பா நிலம் என இடத்தையும் பொழுதெனக் காலத்தையும் சுட்டுகிறது. 

காலத்தை - பொழுதை நம்முன்னோர் பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பிரித்தும் வைத்துள்ளனர். ஒரு ஆண்;டை ஆறு பொழுதுகளாக (காலங்களாக) பிரித்து அவற்றை 'பெரும்பொழுது' என்றனர். அதை நம்பியகப்பொருள் 

'காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிளவேனில் வேனிலென்றாங்கு இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுது'                 என்கின்றது. 

அதாவது கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், வேனிற்காலம் என்ற ஆறும் பெரும்பொழுதாகும்.

'மாலை யாமம் வைகுறு என்றா காலை நண்பகல் ஏற்பாடு என்றா அறுவகத்து என்ப சிறுபொழுது அவைதாம் படுசுடர் அமையம் தொடங்கி ஐஇருகடிகை அளவைய காணுங் காலே' என்று இலக்கணவிளக்கம் சொல்கின்றது.                அதாவது 'மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் (ஏற்பாடு) என்ற ஆறும் சிறுபொழுதாகும். ஓவ்வொரு சிறு பொழுதும் பத்து பத்து நாழிகைகள்.

எனவே அறுபது நாழிகை ஒரு நாள் ஆகும். இரண்டரை நாழிகையை ஒரு ஓரை என அழைத்தனர். பண்டைத்தமிழர் கணக்கின்படி 24 ஓரைகள் கொண்டது ஒரு நாளாகும். ஆதலால் பண்டைத் தமிழரின் கணக்குப்படி ஒரு ஓரை என்பது இன்று நாம் சொல்லும் ஒரு மணித்தியாலமேயாகும். அதனாலேயே ஒரு நாளை 24 மணித்தியாலங்கள் கொண்டது என்கின்றோம். 

நம்தமிழ் முன்னோரின் 'ஓரை' என்ற சொல்லையே கிரேக்கமொழியில் ஹோரா என்றனர். அதுவே ஆங்கிலத்தில் ஹவர் என்று மாறிற்று. ஆனால் நாமோ மேற்கு நாட்டினரே ஒரு நாளில் 24 மணி நேரம் இருப்பதைக் கண்டுபிடித்தனர் என்று ஏமாளிகளாக சொல்லியும் எழுதியும் வருகிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

10 நாழிகை - 1 சிறு பொழுது

6 சிறு பொழுது - 1 நாள்

60 நாழிகை - 1 நாள்

2½ நாழிகை - 1 ஓரை

4 ஓரை - 1 சிறு பொழுது

24 ஓரை - 1 நாள் 

1 ஓரை - 1மணி நேரம்

மனித இனத்துக்கு காலத்தை வகுத்துக் கொடுத்தவன் தமிழன் என்பதை 'ஓரை' எனும் சொல் எடுத்துச் சொல்கிறது. ஆதலால் காலக் கணிதமும் பண்டைத் தமிழர் வழங்கிய கொடை எனலாம்.

உலகில் முதன் முதலாக தொடர் ஆண்டுக்கணக்கை உருவாக்கியவன் தமிழன். 

தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.

ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில் தொடங்காது.

ஏனென்றால்- 

ஓர் ஆண்டு என்பதற்கு கால அளவு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை என முழுமையில்லாமல் இருப்பதுதாம்.

இந்தக் கால அளவு தமிழர் தம் விருப்பத்திற்கு கற்பனையாக அமைத்துக் கொண்ட கால அளவு அல்ல! 

நாம் வசிக்கும் இந்தப் புவியானது கதிரவனை ஒரு முழுச்சுற்று சுற்றுவதற்கான காலமாகும்.

நடப்பு தமிழ் தொடர் ஆணடு- 5120

இன்றைய விஞ்ஞானத்தில் கருவிகள் மூலம் வான மண்டலம் குறித்து ஏராளமான செய்திகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்.

வானவியலுக்கு முன்னோடியான தமிழனுக்கு இத்தனைச் செய்திகளும் அன்றைக்கே தெரிந்திருந்தது. என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது.

பூமி ஞாயிறைச் சுற்றுகிறதா? ஞாயிறு பூமியைச் சுற்றுகிறதா என்பதைத் தமிழன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான் என்று அறுதியிட்டுக் கூறவும் முடியாது.

ஆனால் ஞாயிறுக்கும் பூமிக்கும் தொடர்புடைய இரவு பகல் என்கிற நாள் சுழற்சி,

ஆறு பருவ மாற்றங்களை உள்ளடக்கிய ஆண்டுச் சுழற்சியைத் தெளிவாக அறிந்திருந்தான்.

நாள் சுழற்சிக்கு 60நாழிகை யென்றும் ஒரு நாழிகைக்கு 60 விநாழிகையென்றும் ஒரு விநாழிகைக்கு 60 தற்பரையென்றும்

அதே போன்று ஒரு முழுமையான ஆண்டு சுழற்சிக்கு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை யென்று காலத்தைக் கணித்து தலைமுறை தலைமுறையாக 5119 ஆண்டுகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறான்.

சித்திரை,வைகாசி-இளவேனில்

ஆனி,ஆடி-முதுவேனில்

ஆவணி,புரட்டாசி-கார்

ஐப்பசி,கார்த்திகை-குளிர்

மார்கழி,தை-முன்பனி

மாசி,பங்குனி-பின்பனி

என்று அவன் கணித்த

பூமிக்கும்-ஞாயிறுக்கும் சம்பந்தப்பட்ட பருவகாலம் 5119 ஆண்டுகளாகவும் அப்படியே அதே மாதங்களில் நடைபெற்று வந்ததிலிருந்து ஓர் ஆண்டு என்பது 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை கொண்டது என்று தமிழன் 5119 ஆண்டுகளுக்கு முன்னமேயே கணித்தபடி

சரி

சரி

என்று இயற்கை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!

ஆனால் உலகினரோ ஒரு ஆண்டுக்கான கால அளவை முழுமையாக கணிக்க இயலாமல் 

பருவகாலத்தைப் பொருத்திப் பார்த்து இன்றுவரை மாற்றம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை கீழ்கண்ட ஆங்கில ஆண்டு வரலாற்றை ஒப்பு நோக்கி அறியலாம். 

நடப்பு ஆங்கில ஆண்டு 2019

'ஆங்கில வருடமானது ஐரோப்பாக் கண்டத்தில் ஏசு பிறந்த காலம் முதல் கணிக்கப் பெற்று வருகிறது. இந்த ஆங்கில வருடமானது நமது தமிழ் 3104ஆம் ஆண்டில் வியாழக் கிழமையன்று தொடங்கியது. அதாவது முதல் ஆங்கில ஆண்டின் முதல் தேதியானது வியாழக்கிழமையன்று ஆரம்பமாகியது.

ஆங்கில வருடமானது ஐரோப்பியக் காலண்டர்படி 365நாள் என்று ஆதியில் கணிக்கப்பெற்று வந்தது. பின்பு வந்தவர்கள் இதில் ஒரு தினத்தில் சொற்ப பாகம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து சில திருத்தங்கள் செய்தனர். 

இந்த திருத்தத்தின் படி 400வருடத்திற்கு ஒருமுறை 3நாட்களும் சில நாழிகையும் அதிகப் பட்டு வந்தது. கிபி 1582இல் இந்த 3 நாள் மீதத்தின் வித்தியாசத்தைச் சரி படுத்த எண்ணி லீப் வருடகணித முறையைக் கொண்டு வந்தனர்.

கிபி1600,1700,1800ஆகிய ஆண்டுகளின் கடைசி வருடத்தை சாதாரண வருடமாகக் கணக்கிட்டு அதில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு29நாட்களாக மாற்றினர் இதனால் 3நாட்கள் வித்தியாசக் கணக்கு சரியாயிற்று. ஆனால் நாழிகைக் கணக்கில் கொஞ்சம் மிச்சமாக வந்தது இந்த மிச்சத்தால் 4000ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் வித்தியாசமாகும் என்று கணக்கிடப்பட்டது. கிபி1582ல் இப்படிச் செய்யப் பட்ட திருத்தத்தால் அதற்கு முன்னர் ஏற்கெனவே குறைந்து இருந்த 10நாட்களை சீர் படுத்துவதற்காக கிபி1582 அக்டோபர்4 ஆம் தேதிக்குப் பதிலாக 15ஆம் தேதியாக வைத்துக் கொள்ளப் பட்டது.

இந்தப் புதிய ஏற்பாட்டை கிபி1752ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது11 நாட்கள் பிந்தியிருந்தது ஆகவே அவர்கள் 1752ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்குப் பதிலாக14 ஆம் தேதி என்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள். அதாவது 11தேதிகளைக் காலண்டரிலிருந்து அதிகமாகக் கிழித்துக் கொண்டார்கள். இதுவே ஆங்கில வருடக் கணக்கு முறையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். கிபி 2092-ஆம் ஆண்டில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.'

இந்தப் பிசுறுகள் எல்லாம் இல்லாமல் 5119 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெளிவாக கணிக்கப் பட்ட நமது தமிழ்ஆண்டு கணக்கு முறையைப் பெருமையோடு பின்பற்றுவோம்!

காலத்தைத் தொலைத்து விட்டோம். தமிழர் அதிகாரம் செல்லுபடியாகிற இடமும் இல்லை. இடமும் காலமும் குறித்த 'இயல்' உலகிற்கே தமிழன் கொடை. அவற்றை மீட்டெடுக்க கடமை தமிழனுக்கு இருக்கிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்தாக வேண்டும்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.