Show all

கணியக்கலை தொடர்கட்டுரை: 1.நியுமாராலஜி என்கிற எண்ணியலின் தமிழ் மூலம் கணியக் கலை ஆகும்.

அன்பின் இனிய தமிழ் உறவுகளே! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் அவர்களை அனைவரும் அறிவோம். பக்குடுக்கை நன்கணியன் என்றும் இன்னொருவர் இருந்திருக்கிறார். அவரை தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்கள் அறிவார்கள். 

பூங்குன்றனாருக்குக் கணியம் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டிருக்கிறதே? கணியம் என்றால் என்ன? அது ஒரு துறைபடிப்பு அல்லது கலை என்றால் அது நம்முடன் தொடர்ந்து எடுத்து வரப்பட்டிருக்கிறதா என்ற கேள்விகள் எழும். 

திருக்குறள் நமக்குக் கிடைப்பதைப் போல கணியம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மீட்பதற்கு தமிழ் மொழியில் வேறுவேறு வடிவங்களில் தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகால முயற்சியில், கணியத்தை கொஞ்சம் மாறுபட்ட வடிவத்தில் அடிப்படைக்கு பொருந்தும் வகையாக மீட்டெடுத்திருக்கிறேன். இதுவரை யாருக்கும், என்னைக் கணியனாக நிறுத்திக் கொண்டு அலோசனைகளையும், தொடர் ஆலோசனைகளையும் வழங்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதில்லை. மாறாக ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். தற்போது உங்களுக்கும் கற்றுக் கொடுக்க களம் இறங்கியிருக்கிறேன். கணியக்கலை கட்டுரைகள் தொடராக அவ்வப்போது ஆசிரியர் பக்கத்தில் வெளியாகும். விரும்பியோர் கற்றுக் கொள்ளுங்கள். 

1. நியுமாராலஜி என்கிற எண்ணியலின் தமிழ் மூலம் கணியக் கலை ஆகும்.
கணியக்கலை கற்கும் ஆர்வத்தோடு எம்முடன் நீங்கள் இணைந்திருக்கின்றீர்கள். நியுமாராலஜி என்கிற எண்ணியலை நிறைய தமிழர்கள் நடைமுறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணியல் கலையை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்று தேடிப் போகின்றனர். இந்தக் கலையில் நாம் நுழைய முற்பட்ட உடனேயே-

தமிழ்! என்னுடைய முதலாவது உடைமை. என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார். என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள்! அவைகளே எனக்கு அடிப்படை! அவைகளே எனக்கு ஆதாரம்! என்று

தமிழைத் தரணி போற்றச் செய்ய வேண்டிய நாம்- நம்முடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான எண் கண்டு பிடித்து, அந்த எண் நமது பிறந்த (ஆங்கிலத்) தேதிக்குப் பொருந்த வில்லையென்று- 

(தமிழர்களுக்கு தொடர் ஆண்டுக் கணக்கும் உண்டு. தொடர் நாள் கணக்கும் உண்டு. என்று அறியாமல் தமிழர் கால வரலாற்றை தொலைத்து- பிறந்ததிலிருந்து இன்று வரை, நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த, பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில், பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற) 

நமது பெயரைச் சிதைத்து, அல்லது முழுமையாக மாற்றி, உறுதியான முன்னேற்றத்தை அடைய வாய்ப்பிருப்பதாக எப்படி நம்மால் உறுதியாக ஏற்றுக் கொள்ள முடியும்.

தமிழர் இந்த வகை முயற்சியில் பிழை இருக்கிறது என்பதற்காக அவர்தம் முன்னேற்றத்திற்கான முயற்சிக்கே தடை போடுவது தவறுதான். என்ன செய்ய வேண்டும்? அதை விட சிறந்த, செப்பனிடப் பட்ட, தமிழர் எந்த அடிப்படைகளையும் இழக்காத மாற்று வழியைக் காட்ட வேண்டும்!

அதற்கான முயற்சிதாம் இந்தக் “கணியக்கலை அறிவோம்" தொடர். உங்கள் ஆர்வங்களையும் ஐயப்பாடுகளையும் kumarinadanr@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.