Show all

உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?

உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முதலில் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்ற கேள்விக்கு விடை காண்போம். நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களும் மனிதனில் இடம்பெற்றிருக்கிற விழுக்காட்டு அடிப்படையில் இந்தப் புவியில் ஓரிடத்தில் இடம் பெற்றிருந்த வாய்ப்பும்- அதற்கு முந்தைய மனிதன் ஒத்த உயிரிகளின் தொகுப்பான இறப்பு நிகழ்ந்திருந்த பகுதியில்- முந்தைய உயிரினத்தின் ஐயறிவு பாடும் (அனுபவமும்), அடுத்து நாம் இப்படி என்கிற ஆசைத் தேடலும் விசும்பில் பொருத்தமாக பதிவாகியிருந்த நிலையில், பிறந்ததும் எழுந்து நடக்கிற மற்ற ஐயறிவு உயிரினங்கள் போல, ஆணும் பெண்ணுமாக பல்லாயிரம் மனிதர்கள் தோன்றியிருப்பார்கள். என்பது தமிழ் இயல்கணிப்பு தெரிவிக்கும் மனிதத் தோற்றம் குறித்த செய்தியாகும்.

மனிதன் ஒற்றையாக யாராலும் படைக்கப்படவில்லை, மனிதன் தான் தோன்றியாக உருவானான். மனிதன் முந்தையதின் அறிவில் இருந்து தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று திருவள்ளுவர் சுட்டுவது போல தேடியது பெற்றிருக்கலாம். அனால் முந்தைய உயிரில் இருந்து பரிணாமம் அடைந்ததை இயல்கணிப்பு ஏற்கவில்லை. அறிவின் அடுத்தடுத்த நிலைக்கான தேடலில் கிடைத்த, ஆறறிவு வரைக்கான புலன்கள் என்கிற காரணம் பற்றி இந்த மேம்பாட்டை கிளவியாக்கம் என்று குறிக்கலாம்.

மதம் சார்ந்தவர்கள்- உலகம் படைக்கப் பட்டதாக கூறி வருகின்றார்கள். 

ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்) சார்ந்தவர்கள்- பேரண்டப் பெருவெடி, சிதறிய கோள்கள், விண்மீன்கள், ஞாயிறு, ஞாயிறிலிருந்து பிரிந்த உலகு, ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள், குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றியதாகவும் கூறி வருகின்றார்கள்.

மார்க்சிய வாதிகள்- படைப்பாளி என்பது ஒரு கருத்து என்றும், உலகம் படைக்கப் பட்டதாக கூறுவது கருத்து முதல்வாதம் என்றும், மதங்கள் கூறும் படைப்பாளி இல்லவேயில்லை யென்றும், பொருளே முதல் என்றும் பொருளிலிருந்தே கருத்து என்றும், மனிதனுடைய கையே மனிதனுக்கு கருத்து தோன்றுவதற்கான அடிப்படை யென்றும் கூறி, இயல்அறிவு தெரிவிப்பதை வழிமொழிந்து வருகின்றார்கள்.

ஐந்திரங்களிலேயே (பஞ்சபூதம்) எண்ணம் கருத்து என்பவைகளுக்கான அடிப்படை 'இயக்கமாக’ இருக்கிறது என்பதே தமிழர் கண்டுபிடிப்பு. 

எண்ணம் மனம் கருத்து உயிர் என்பனவெல்லாம் திடிரென்று எங்கிருந்தோ தோன்றி படிரென்று எங்கோ மறைந்து போகும் என்கிற கருதுகோளில் எல்லாம், நம் பழந்தமிழர்க்கு உடன்பாடில்லை. 

ஒன்று என்கிற முதல் எண்ணை- தனிஅன்று, தனியானது அல்ல, ஒன்றியது என்கிற பொருளில் ஒன்று என்றார்கள். அதாவது ஒன்று என்பது ஒன்றிய இரண்டுகள் என்பதாகும். இரண்டு என்பது பிரிந்த இரண்டாகும்.

தமிழர் அடிப்படை இரண்டு என்று பேசுவது ஆகும். உலகினர் அடிப்படை ஒன்றிலிருந்தே எல்லாம் என்பதாகும். 

தமிழர் அடிப்படை இரண்டு என்பதாலேயே அதன் கோட்பாடு இரண்டையும் இயல்பே என்று கொள்கிற வகைபாட்டுக் கோட்பாடு ஆகும். 

உலகினர் அடிப்படை ஒன்று என்பதாலேயே ஒன்றை மட்டுமே உயர்த்திப்பிடிக்கிற பேரினஆதிக்கக் கோட்பாடான பாகுபாட்டியலும், அதன் எதிர் நிலையான முரண்பாட்டுக் கோட்பாடும் ஆக, ஒன்றை மட்டும் தூக்கிப்பிடிக்கிற இரண்டாக அமைந்து, ஒன்றுக்கொன்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. 

தமிழர் அடிப்படை இரண்டு என்பதாலேயே, முதல் எனப்படுவது இடமும் காலமும் என்பதாக இரண்டு என்றார்கள். 

இருவேறு உலகத்தியற்கை என்றார்கள்.  
பொருள், கருத்து இரண்டும் மூலமுதல் என்று நிறுவினர்கள்.
இடம் என்பதும், திரு என்பதும்: பொருள்.
காலம் என்பதும், தௌளியராதல் என்பதும்: கருத்து.
ஆக கருத்தும் பொருளும் சேர்ந்தே இருப்பது என்பதே தமிழர்தம் கருதுகோள்!

நாம் படைக்கப் பட்டதான கருதுகோளில் தமிழர்க்கு உடன்பாடில்லை. நாம் தான்தோன்றியாக தோன்றுவதற்கு நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என ஐந்து ஆற்றல்களை முன்வைத்தார்கள். நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கும் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள். அவை: வடிவம், எல்லை, இயக்கம் உடைய பொருள்கள்.

விசும்பு என்பது: ஒவ்வொரு பொருளின் உள்ளேயும் வெளியேயும், (கடந்தும் உள்ளும்) தான்தோன்றி இயக்கம் இல்லாமல் இருக்கிற வெளி- என்பது விசும்பின் ஒரு நிலை.

அந்த வெளியைத் தளமாகக் கொண்டு- நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கும் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள் (கோள்களாகவும், கோள்களில் உள்ள மரம், மட்டை, உயிரினங்கள், நீங்கள் நானுமாக) இயங்குவதால், விண்வெளியாக, விசும்பில் ஒரு எதிர் இயக்கம் தோன்றுவது விசும்பின் அடுத்த ஒரு நிலை.

தான்தோன்றி இயக்கமுடைய பொருள்களின் (நிலம், நீர், தீ, காற்று) இயக்கத்தால்: வெளி- இயக்கம்பெற்ற விண்வெளியாகி, இயக்கம் தந்த பொருளை இயக்க அணியமான விசும்பு என்பது இறுதி நிலை.

ஆக விசும்பு என்பது: தான்தோன்றி இயக்கம் இல்லாத, எல்லை இல்லாத, பரந்து விரிந்த வெளியாக இருந்து- பொருள்களின் இயக்கத்தால் இயக்கம் பெற்று விண்(இறுக்கநிலை)வெளியாகி- இயக்கம் தந்த பொருளால் இயக்கம் பெற்று, இயக்கம் தந்த ஒவ்வொரு பொருளுக்கும் அந்தப் பொருளால் பெற்ற இயக்கத்தால் அந்தந்தப் பொருளை இயக்க அணியமாகி- பொருள்களை முயக்கும் பேராற்றலே விசும்பு ஆகும்.

அடக்க முடியாமல் அழும் குழந்தையின் அழுகையை விசும்பி விசும்பி அழுகிறது என்று சொல்லுவோம். விசும்புதல் என்பது அழுகை அல்ல. அடக்கமுடியாத வெளிப்பாடுதாம் விசும்புதல். விசும்பு என்பது அடக்கமுடியாத அடங்கிப் போகாத பேராற்றல். 

விசும்பு என்பதை வெறுமனே ஆகாயம் என்ற வடமொழி பெயர்ப்பைச் சுமந்து கொண்டு, தமிழர்- தங்களுடைய ஒட்டுமொத்த உலகத் தோற்றக் கோட்பாட்டையே கிடப்பில் போட்டு விட்டோம்.

தமிழர்கள்- இந்த ஐந்து ஆற்றல்களை ஐந்திரங்கள் என்றார்கள். திறன் என்றால் ஆற்றல் (திற-வெளியேறு). திரம் (திரள்) என்றால் குவிக்கப் பட்ட ஆற்றல். நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும் ஐந்திர (குவிக்கப் பட்ட) ஆற்றல்கள் வெளிப்பட அணியமாக உள்ளவைகள்.

தமிழர் முதல் எனத் தெரிவிக்கிற இடம் மற்றும் காலத்தில், இடம் என்பது வெளி. 


காலம் என்பது தான்தோன்றி இயக்கமுள்ள, ஐந்திர ஆற்றல்களுக்கு அடிப்படையான- எல்லை இல்லாத வெளியில்,  குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி இயக்கம் உடைய ஒன்றுகள்.

தான்தோன்றி இயக்கம் உடைய ஓன்றுகள், தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் இயக்கத்தால், ஒன்று. இரண்டு, மூன்று, நான்கு, என எண்ணிக்கை மாற்றத்தில் நிலம், நீர், தீ, காற்று என நால்வகை ஆற்றல்கள் உருவாகின்றன. அவைகளை இயக்க, அவைகள் தந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற, விசும்பு ஐந்தாவது ஆற்றல்.

நால்வகை ஆற்றல்கள் கூட குறைய இணைந்து கோள்கள், கோள்களில் மண் மரம் மட்டை உலோகம் நீங்கள் நான் என தான்தோன்றியாக உருவாகியிருக்கிறோம். சிறியதிலிருந்து பெரியது, இல்லாததிலிருந்து இருப்பது, குரங்கிலிருந்து மனிதன் என்பதெல்லாம் தமிழர்க்கு உடன்பாடானதன்று. 
(!) மனிதன் யாராலும் படைக்கப்பட்டவன் அல்லன்.
(!) மனிதன் தான்தோன்றியாகத் தோன்றியவன். 
(!) மனிதன்   குரங்கிலிருந்து தோன்றியவன் அல்லன். 
எந்த உயிர்களும், எந்த உயிரிலிருந்தும் பரிணாம வளர்ச்சி பெற வேண்டியக் கட்டாயம் எதுவும் இல்லை. எல்லாம் தான்தோன்றியாகத் தோன்றியவைகளே. எல்லாவற்றுக்கும் மூலம் தனிஒன்றுகளே. ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டிருப்பது தனிஒன்றுகளின் எண்ணிக்கை மாற்றமே.

(!) நாம் தனி ஒன்று என்கிறோம். ஐரோப்பிய இயல்அறிவு அணு என்கிறது. அணுவில் ஒரு நேரும் (எலக்ட்ரான்) ஒரு நிரையும் (புரட்டான்) இருந்தால் அது நீர்வளி (ஹைட்ரஜன்). 
அணுவில் இரண்டு நேரும் (எலக்ட்ரான்) இரண்டு நிரையும் (புரட்டான்) இருந்தால் அது ஹிலியம் காற்று. 
அணுவில் 29 நேரும் (எலக்ட்ரான்) 29 நிரையும் (புரட்டான்) இருந்தால் அது செப்பு (காப்பர்). 
அணுவில் 79 நேரும் (எலக்ட்ரான்) 79 நிரையும் (புரட்டான்) இருந்தால் அது தங்கம் (கோல்டு).
அணுவில் 82 நேரும் (எலக்ட்ரான்) 82 நிரையும் (புரட்டான்) இருந்தால் அது ஈயம் (லெட்). இப்படி 103க்கு மேற்பட்ட தனிமங்களைப் பட்டியல் இட்டு வருகிறது ஐரோப்பிய இயல்அறிவு. ஈயத்திலிருந்து மூன்று நேர் நிரைகளை அகற்றி, எண்ணிக்கை மாற்றத்தால் தங்கமாக மாற்ற முடியும் என்பது இயல்அறிவால் சாத்தியமே.
 
ஐரோப்பிய இயல்அறிவு சார்ந்தவர்கள்: பேரண்டப் பெருவெடி, சிதறிய கோள்கள், விண்மீன்கள், ஞாயிறு, ஞாயிறிலிருந்து பிரிந்த உலகு, ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள் குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றியதாகவும் கூறி வருகின்றார்கள். 

அங்கே முதலாவதாகச் சுட்டப்பட்டப் பேரண்டப் பெருவெடியை தமிழர்கள் இறுதி நிலையாகக் கொள்கின்றனர். பேரண்ட பெருவெடியிலிருந்து சிதறிய கோள்கள் தொடர்ந்து மழை குளிர்வு போன்றதெல்லாம் தமிழர் அடிப்படைகளுக்குப் பொருந்தாது.

பேரண்ட பெருவெடிச் சிதறலில்: எல்லை இல்லாத வெளியில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி  இயக்கம் உடைய அடிப்படையான ஒன்றுகளே சாத்தியம். பேரண்ட பெருவெடி தமிழர் அடிப்படையில் இறுதியாக முடியுமே அன்றி தொடக்கமாக முடியாது.

தமிழர் உலகத் தோற்றம் (தொடக்கம்) என்பது: எல்லை இல்லாத வெளி  குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி இயக்கம் உடைய ஒன்றுகளே.

நம்மையும் தாங்கிக் கொண்டு வெளியில் உலா வந்து கொண்டிருக்கிற கோள்கள் அனைத்தும், ஒரு மையத்தை நோக்கி பலகோடி ஆண்டுகளாக நெருங்கிக் கொண்டிருக்கின்றன. விண்வெளியில் இருக்கிற அனைத்துக் கோள்களும் நெருங்கி ஒரே உருண்டையாக சுழன்று, இறுகி, உருண்டைக்கு உள்ளாக அமைந்த விசும்பிற்கு அளவிடமுடியாத இயக்கத்தைக் கொடுக்கும் போது, அளவிற்கு அதிகமான இயக்கம் பெற்ற விசும்பு, அந்தப் பேரண்டப் பெரு உருண்டையை வெடித்துச் சிதற வைக்கிறது.

மீண்டும் தொடங்குகிறது முதலெனப்படுகிற இடமும் காலமும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.