Show all

எரிந்த வீட்டில் தலைவர்கள் படத்தைக் காப்பாற்றாதது ஏன்? இந்தா பிடி தண்டனை! நடந்தது வடகொரியாவில்

வட கொரியப் பெண்மணி ஒருவர், குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில், எரியும் தன் வீட்டிலிருந்த அந்நாட்டுத் தலைவர்கள் புகைப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனதால், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு, வட கொரியா நாட்டை ஆண்டுவருகிறது. அந்நாட்டின் மறைந்த தலைவர்களான இரண்டாம் கிம் சங், கிம் ஜோங் இல் போன்றவர்களின் புகைப்படத்தைக் குடிமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்பது சட்டம். இதை அவ்வப்போது கண்காணிப்பதற்குக் காவலர்களையும் நியமத்திருந்தார், அதிபர் கிம் ஜாங் உன். 

வட ஹேம்ஹாங் மாகாணத்தில் ஒன்சாங் கவுண்டி எனும் பகுதி சீன எல்லைக்கு அருகில் உள்ளது. கடந்த மாதம் இப்பகுதியில் இரண்டு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அந்நேரம் பார்த்து வீட்டில் யாரும் இல்லை குழந்தைகள் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்துள்ளன. இந்த சேதி அறிந்தவுடன் உடனடியாக வீட்டுக்கு விரைந்த குடும்பத்தினர், குழந்தைகளைக் காப்பாற்றுவதில் கண்ணாய் இருந்து, அனைவரையும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் வீடு எரிந்துவிட்டது.

அதில் ஒரு வீட்டோடு சேர்ந்து, அந்நாட்டுத் தலைவர்கள் புகைப்படங்களும் எரிந்துள்ளன. இந்தப் புகைச்சலை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது அந்நாட்டு அரசு. உடனே புகைப்படத்தை எரியவிட்ட குற்றத்திற்காக அந்த வீட்டுப் பெண்மணியைக் கைதுசெய்துள்ளனர். பின்னர் அவர் மாகாணக் காவல் அமைச்சகத்தில் அணியப்படுத்தப்பட்டு, விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுங்காவல் தண்டனையோடு சிறையில் கடினமான வேலையும் தரப்படும். பிணையில் வெளிவர முடியாதபடி நெடுநாள்கள் சிறையிலேயே இருக்க வேண்டிவரும். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால், தன்னுடைய குழந்தைகளைச் சந்திக்க மருத்துவமனை கூட செல்ல முடியாத நிலையில் உள்ளார் அந்தத் தாயார்.

காயம் ஏற்பட்ட அந்தக் குழந்தைகள் மருத்துவம் பார்க்கக்கூட ஆளில்லாமல் தனியாகத் தவித்து வருகின்றனர். அருகில் வசிப்பவர்கள் உதவி செய்ய முன்வந்தாலும், இதை அரசியல் குற்றமாகக் கருதும் அந்நாட்டு அரசு. 

வடகொரியாவில் இப்படி நடப்பது இது முதல்முறையல்ல, ஓட்டோ வார்ம்பியர் என்ற அமெரிக்க மாணவன், வடகொரியாவில் உள்ள பியாங்காங் மாகாணத்திற்குச் சென்றிருந்தான். அப்போது தவறுதலாக இரண்டாம் கிம் சங் பெயர் அச்சிட்டிருந்த விளம்பரத்தட்டியைத் தள்ளிவிட்டதற்கு 15 ஆண்டுகள் சிறைவாசம் அளிக்கப்பட்டது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஹான் ஹியான் காங் என்ற 14 அகவை சிறுமியின் வீடு வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது அந்த இரு தலைவர்களின் படத்தைக் காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரையே தியாகம் செய்துவிட்டாள் அந்தச் சிறுமி. அதற்குப் பரிசாக அவள் படித்த பள்ளிக்கு அவள் பெயரையே சூட்டி கௌரவப்படுத்தியது அந்நாட்டு அரசு.

புகைப்படங்கள் தொங்கவிடுவது தொடர்பாகவே அங்கு பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பொதுவாக அவற்றை வைக்க வேண்டிய இடம், வைக்கப்பட வேண்டிய உயரம் ஆகியவை கூட அரசின் சட்டத்தில் உள்ளன. ஆம், யாருக்கும் எட்டாத இடமாக இருக்க வேண்டுமாம். அதாவது யாருடைய தலையும் அவர்களின் புகைப்படத்தைத் தாண்டிவிடக் கூடாது. சிறு அளவு தூசி இருந்தாலும், அபராதத்துடன் கூடிய தண்டனை அளிக்கப்படும். 

தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் கைது எல்லாம் பார்க்கிற போது, நாட்டில் இதே நிலை நீடித்தால், இன்னும் பத்தாண்டுகளில் இங்கும் அப்படி ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு படங்கள் மாட்ட வேண்டி நிலை வந்தாலும் வரலாம் என்று, இந்தச் செய்திக்கு கருத்து வெளியிடுகிற சிலர், பதிவிடுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,394.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.