Show all

ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை! விடுதலைப் புலிகள் ஆயிராவது முறையாக வெள்ளறிக்கை

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியை தாங்கள் கொல்ல வில்லை என்று கடந்த 27 ஆண்டுகளாக  புலிகள் தரப்பிலிருந்து பல ஆயிரம் முறை அளிக்கப் பட்ட விளக்கங்கள் காதில் வாங்கிக் கொள்ளப் படவேயில்லை.

ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்ற விடுதலைப் புலிகள் அறிக்கையை முதல்முறையாக பரபரப்பாக்கியிருக்கின்றன உலகளாவிய ஊடகங்கள். 

இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்தும் பரபரப்பு விவாதம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மர்மமாக முடிக்கப் பட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கை துருவ நல்லதொரு வாய்ப்பு கிடைத்த நிலையில், ராஜிவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று விடுதலை புலிகள் மீண்டுமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து விடுதலை புலிகள் அமைப்பின் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை அளித்துள்ளனர்.

அவர்களின் அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். நாங்கள் போராட்ட குழுவோ, ஆயுதக் குழுவோ, வன்முறை குழுவோ கிடையாது. மாறாக, தமிழீழத்தில் நடந்த அரசு வன்முறைகளையும், அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களின் வன்முறையையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம்.

புலிகள் இல்லையென்றால் இவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்று அறிவுரை கூறியவர்கள் எல்லாம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். எங்களின் ஆயுத மௌனிப்பிற்கு பிறகும், இதுவரை எங்கள் கட்டுப்பாடுகளைக் காத்துள்ளோம். எனினும், எங்கள் மக்களுக்கு இதுவரை எந்த வீடிவோ, தீர்வோ கிடைக்கவில்லை, இன்றவளவும் மெக்காலே இனவழிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

நாங்கள் பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பியும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்துத் தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது. தொடர்கின்ற இது போன்ற தவறான கருத்துப் பரப்புதலால் எம்மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள். 

சிலர், ஒருபடி மேலே சென்று முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் திரு. ராஜீவ் காந்தியின் உயிருக்கு முன்னால், முள்ளிவாய்க்காய்காலில் கொல்லப்பட்ட ஒன்றைரை லட்சம் தமிழீழ மக்களின் உயிர் ஈடாகாது என்றுரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவைத் தாக்கும் திட்டமோ ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை. குறிப்பாக எந்தவொரு இந்தியத் தேசியத் தலைவருக்கும் எதிராகச் செயற்பட நாங்கள் எப்பொழுதும் எண்ணியதும் இல்லை.

தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி இருக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து சில நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளராக இருந்த கிட்டு 'இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை' என அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வறிக்கை அப்போது சில இந்திய நாளேடுகளில் வெளியானது. பிரபாகரன் அவர்களை நேர்காணல் கண்டபோது, 'ராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறினார் பிரபாகரன். அதோடு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பு ஒன்றில் 'ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு 'அது ஒரு கொடுமை' (It was a tragedy') என்று பிரபாகரன் பதிலளித்தார்.

தமிழீழ மக்களின் விடுதலைப் போரை உன்னிப்பாகக் கவனித்துவந்த இந்திய அரசு, 38 ஆண்டுகளுக்கு முன்னம்  எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து சிங்கள இனவாதச் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான போரில் எமக்குப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியது. அப்போது இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார், 'இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையே' என இந்திய அரசின் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

அதேபோல் இந்தியத் இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் மறைவிற்குப் பின்பும், அவரது புதல்வரான இந்திய முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இரகசிய உறவைப் பேணி வந்துள்ளார். இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தகர்த்தெறியும் உள்நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள் இந்தியப் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம்

குறிப்பாக விடுதலைப்புலிகள் மீதான களங்கம் நீங்கினால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும், மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் காலம் வரும், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகள், ராஜிவ் காந்தியை தாங்கள் கொல்ல வில்லை என்று விளக்கம் அளிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் முடக்கப் பட்ட நிலையில், அவர்கள் சிரமம் ஒட்டு மொத்த தமிழீழ மக்களின் வாழ்வாதாரம் என்று மதிப்பளித்து, மதுரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் போல, ஆம்; இது ஆயிராவது அறிக்கை என்று கணக்கை தொடங்கி தீர்வுக்கு வழியேற்படுத்துவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.