Show all

என்ன செய்தார் இந்தத் தமிழர் சண்முகசுப்ரமணியன்! எதற்கு நன்றி தெரிவிக்கிறது நாசா இவருக்கு

தமிழர் சண்முகசுப்ரமணியன் கொடுத்த ஆலோசனையால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர். களமிறங்கிய நிலவை ஆய்வு செய்யும் நாசா குழுவினரால். அதன் பொருட்டே, நாசாவின் நன்றி- தமிழர் சண்முகசுப்ரமணியத்திற்கு.

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்தும் பொருட்டு, இந்தியவிண்வெளி ஆய்வு மையம் சார்பில், விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் கடந்த எண்பத்தைந்து நாட்களுக்கு முன்னம் நிலவில் மென்முறையில் தரைஇறங்கியிருக்க வேண்டும். ஆனால் நிலவை நெருங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விக்ரம் லேண்டரின் நிலை கேள்விக்குறியானது.

இதைத் தொடர்ந்து நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. எனினும் விக்ரம் லேண்டரின் நிலை குறித்து தொடர்ந்து மர்மம் நிலவி வந்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டரை கண்டுபிடுக்கும் முயற்சியில் நாசாவும் சேர்ந்தது. நாசாவின் நிலா மறுமதிப்பீட்டு சுற்றுப்பாதை விண்கலம் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது.

அது மட்டுமன்றி, அந்தப் பகுதியைப் புகைப்படமும் எடுத்தது. ஆனால், அந்தப் பகுதியில் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால், அந்தப் புகைப்படங்களில் விக்ரம் லேண்டரை அடையாளம் காண முடியவில்லை. நாசாவின் விண்கலம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடியாமல் போனதால் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில் நாசா தற்போது விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய புள்ளியும், சிதறிய விண்கலப் பகுதிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பச்சை நிறப் புள்ளிகள் விண்கள குப்பைகளை குறிப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நீலப் பகுதிகள் லேண்டர் மோதியதால் ஏற்பட்ட இடத்தைக் குறிக்கிறது. 

கூடவே, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியன் என்பவருக்கு நாசா நன்றியைத் தெரிவித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். விக்ரம் லேண்டர் மோதுவதுக்கு முன் பின் கிடைத்த புகைப்படங்களை கொண்டு இதைக் கண்டுபிடிக்க உதவியுள்ளார் சுப்ரமணியன். இது தொடர்பாக நாசா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,355.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.