Show all

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு! தொடரை ரத்து செய்தது வங்கதேச அணி; கறுப்பு நாள்: நியூசி. தலைமைஅமைச்சர்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் இன்று நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் அறுவருக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டின்  கிரிக்கெட் பயணத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து  வங்கதேச கிரிக்கெட் அணி தப்பி ஓடி இயற்கை கொடையாக உயிர் தப்பியதையடுத்து, வீரர்களின் பாதுகாப்பு கருதி, நியூசிலாந்து தொடரை ரத்து செய்வதாக வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் தொழுகையில் இருந்த சிலர் கொல்லப்பட்டனர். அப்போது தொழுகைக்கு அங்கு சென்றிருந்த வங்கதேச வீரர்களும் அங்கிருந்து தப்பி ஓடி இயற்கைகொடையாக உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாளை கிறிஸ்ட் சர்ச் நகரில் நடக்க இருந்த 3-வது சோதனைப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்து தொடரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளதாக கிரிக்இன்போ தளம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக நியூசிலாந்து தலைமைஅமைச்சர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில், நியூசிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூசிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்.

மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்தச் செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூசிலாந்து சமூகத்தில் இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.