Show all

மீனவர்களையும் படகுகளையும் விடுதலைசெய்ய வேலை நிறுத்தப் போராட்டம்.

இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேரையும், அவர்களது 30 படகுகளையும் விடுதலைசெய்ய வலியுறுத்தி புதுகை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம்  ஆகிய இருமீன்பிடி தளங்களில் இருந்து  சுமார் 550 விசைப்படகுகளில் சுமார் 2500 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  வாரத்தில்  சனி,  திங்கள், புதன் ஆகிய நாட்களில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் கரைக்குத் திரும்புவது வழக்கம். வௌ;ளிக்கிழமை வார விடுமுறை நாளாகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கடல்படையினரால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள  தமிழக மீனவர்கள் 28 பேரையும், அவர்களது 30 படகுகளையும் விடுவிக்க நடுவண், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்படகுகள் மீன்பிடிப்பதை ஒழுங்கு படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி புதுகை மாவட்ட மீனவர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர்சங்கத்தலைவர் குட்டியாண்டி கூறியதாவது:  

தமிழக மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் இலங்கை கடல்படையினர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது தொடர் நிகழ்வாகவே மாறிவிட்டது. இருநாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேசிய பிறகும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கவில்லை. தமிழக மீனவர்களைத்தாக்குவதும், கைது செய்துதுன்புறுத்துவதும் நின்றபாடில்லை. இந்நிலையில், இலங்கைச்சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 28 பேரையும், அவர்களது 30 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடுவண், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.