கூகுள், யூடியூப், யாகூ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய பிரபலங்கள், நிகழ்ச்சிகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி யாகூ நிறுவனம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள், சம்பவங்கள், இணையத்தை கலக்கியவை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றில் முதல் இடத்தை பிடித்த விஷயங்களை வெளியிட்டுள்ளது. இதில் மோடி, அப்துல் கலாம், பீகார் தேர்தல், தோனி போன்ற பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பசுமாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பாக யாகூ வெளியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக விவாதம் ஆரம்பித்தது. பின்னர் நடைபெற்ற தாத்ரி சம்பவம், கலைஞர்கள் விருதுகளை திருப்பி அளித்தது, சகிப்பின்மை தொடர்பான விவாதம் என பசுமாடு இந்த ஆண்டின் ஆதிக்கம் செலுத்திய ஆளுமையாக மாறிவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட அரசியல் தலைவர்களில் மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அதிகமாக தேடப்பட்ட நிகழ்வு என்ற பிரிவில் அப்துல் கலாமின் இறப்பை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோன் முதல் இடத்தை பிடித்துள்ளார். விளையாட்டு துறையில் தோனி முதல் இடத்தில் உள்ளார். அதிகம் தேடப்பட்ட படங்களின் வரிசையில் பாகுபலி முதல் இடத்தை பிடித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.