ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியை எங்கள் மீது திணிக்கவில்லை.
நாங்கள் விரும்பி எடுத்து இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்
செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில்
20 தனி தொகுதிகள், 5 பொது தொகுதிகள் கேட்பது என்று முயற்சி செய்தோம். ஆனால் எங்களுக்கு
17 தனி தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பொதுத் தொகுதிகள் 8 வழங்கப்பட்டன. அதில் ஒன்றுதான்
ஆர்.கே.நகர். இந்தத் தொகுதியை எங்கள் மீது திணிக்கவில்லை. நாங்கள் விரும்பி
எடுத்து இருக்கிறோம். ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியை தேமுதிக, திமுக தலைவர்
கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியை இந்திய கம்யூனிஸ்டு விரும்பி எடுத்தது. ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு
செய்யவில்லை. அந்த தொகுதியில் எங்களுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இடைத்தேர்தலில்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுமார் 10 ஆயிரம் வாக்குகள் பெற்றன. தேமுதிகவிற்கும் அங்கு
கணிசமான அளவு ஓட்டுக்கள் உள்ளன. முதலமைச்சரை எதிர்த்து நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும்
பின் தங்கிய தொகுதியான ஆர்.கே.நகர் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின்
அடிப்படையிலும் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம். வெற்றி வாய்ப்பு என்பது தனிநபர் செல்வாக்கை மட்டும் அடிப்படையாக
கொண்டிருக்கவில்லை. அந்த தொகுதியின் வளர்ச்சி, மக்களின் மனநிலை ஆகியவற்றை பொறுத்தும்
அமையும். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்பிக்கை
உள்ளது என்று கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.