வரும் 22-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாஷிங்டன் செல்கிறார். அப்போது, பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அணு ஆயுதங்களை வேகமாக குவித்து வருவது, தீவிரவாத அச்சுறுத்தல்களின் தாயகமாக உருவாகி வருவது உள்ளிட்ட பல காரணங்களால் பாகிஸ்தான் கிட்டத்தட்ட உலகிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக, அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.-வில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் முக்கிய அதிகாரி கெவின் ஹல்பெர்ட் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பிரபல சர்வதேச செய்தி இணையதளமான தி சிப்ஹெர் பிரீப்-ல் இதுகுறித்த செய்தி வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் குறித்து கெவின் ஹல்பெர்ட், அமெரிக்காவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் இந்த உலகிற்கே அச்சுறுத்தலாக பாகிஸ்தான் மாறிவிடும். பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் நாட்டை தவறான பாதையில் கொண்டு செல்கிறது. பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஜிகாதி குழுக்களை பயன்படுத்தி வருவதை நியாயப்படுத்தி வருகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் மக்கள்தொகையில் பெரும்பாலோனோர் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களை தீய சக்திகளாகவே பார்ப்பதில்லை. அல்கொய்தாவுக்கு எதிராக போராடுவதை ஏதோ அமெரிக்காவுடன் சண்டை போடுவதை போல பெரிதுபடுத்தி வருகிறது பாகிஸ்தான். அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை. இதனால், இன்று பாகிஸ்தானிலேயே உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. லஸ்கர்-இ-தய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி, பாகிஸ்தான் தலிபான், ஆப்கன் தலிபான் உள்ளிட்ட பல தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தற்போது ஆட்சியில் உள்ள அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால், பாகிஸ்தானில் அரசின் அதிகாரம் தளர்ந்து, தீவிரவாத அமைப்புகளின் கை ஓங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். கெவின் ஹல்பெர்ட் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.வில் இருந்து கடந்த ஜூன் 2014-ல் ஓய்வு பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.