Show all

இந்திய அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், மிஸ்ரா, ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளார்கள். விஜய், தவான், புஜாரா, கோலி, ரஹானே, சஹா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ரோஹித் சர்மாவுக்கு இந்தப் போட்டியில் இடமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் டி20, ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக பந்துவீசிய ரபாடா சேர்க்கப்பட்டுள்ளார். இது அவருடைய முதல் டெஸ்ட் போட்டி.

தொடக்க வீரர்களாக தவான், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரை பிலாண்டர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் அவுட் ஆனார். ப்போது இந்தியா ரன் கணக்கை தொடங்கவில்லை. அடுத்து புஜாரா களம் இறங்கினார். முரளி விஜய் உடன் சேர்ந்து புஜாரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா எல்கர் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.

அடுத்த வந்த விராட் கோலி ஒரு ரன் எடுத்த நிலையில் ரபாடாவிற்கு முதல் டெஸ்ட் விக்கெட்டை வழங்கினார். பிறகு அடுத்து வந்த ரகானே 15 ரன்னிலும், சகா டக்அவுட்டிலும் வெளியேறினார்கள். மிஸ்ரா 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.  ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விஜய் 75 ரன்கள் எடுத்து ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 4 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டம் இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு வருண்ஆரோன் களம் இறங்கினார். இவரும் தாஹிர் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் இந்தியா 201 ரன்னில் சுருண்டது.

எல்கர் 4 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், பிலாண்டர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 13, ஆம்லா 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.