Show all

நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி, துணைத்தலைவர்  பதவிக்கு நடிகர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். காலை 9.30 மணியளவில் ஐந்து பேரும் நடிகர் சங்கத்துக்கான தேர்தல் அலுவலகத்துக்கு வந்து மனுத்தாக்கல் செய்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் விஷால் பேசும்போது கூறியதாவது: ‘இது பதவிக்காக நடக்கும் தேர்தல் அல்ல. ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நடைபெறும் தேர்தல். அந்த மாற்றம் வரும் என்று நம்புகிறோம். நடிகர் சங்கக் கட்டடம் சம்பந்தமான ஒரு கேள்வியில் தெடங்கி இன்று மாற்றத்துக்கான தேர்தல் வரை வந்திருக்கிறது. எங்கள் மீது சினிமா நடிகர்கள், நாடக நடிகர்கள் அனைவருமே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.’ என்றார்.

நடிகர் சங்கத்தில் அரசியலைக் கொண்டு வந்து விட்டதாக சரத்குமார் கூறியுள்ளாரே என்று விஷாலிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘ஒரு அரசியல் கட்சி வைத்துக் கொண்டு அவர் இப்படிப் பேசியிருப்பது வேடிக்கையாகவே இருக்கிறது.’ என்றார்.

நீங்கள் அவதூறு பேசுவதாகவும் அதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சரத்குமார் கூறியது பற்றி விஷால் அளித்த பதில்: ‘நான் உண்மையைச் சொல்கிறேன். உண்மையைச் சொன்னால் அது அவதூறு ஆகுமா? அவர் கேள்விக்கு நான் பதிலளித்துள்ளேன். உண்மையைக் கூறியதற்கு வழக்கு போட்டால் அதையும் சந்திப்போம்.’ என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.