ஜனநாயகத்தில், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதை
அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது; அந்த சுதந்திரம் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க
வேண்டும் என, நடிகர் கமல் ஹாசன் பேசினார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் நடந்த
இந்திய மாநாட்டில், 'கருத்து சுதந்திரம்' என்ற தலைப்பில், நடிகர் கமல் ஹாசன் பேசியதாவது: பேச்சு
சுதந்திரம் தான் ஜனநாயகத்தை காப்பாற்றுகிறது. இந்தப் பேச்சு சுதந்திரத்தை, ஜனநாயகம்
நமக்கு அளிக்கிறது. அதே நேரத்தில், பேச்சு சுதந்திரம் நமக்கு உள்ளது என்று எப்போதும்
அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. அந்த சுதந்திரம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க
வேண்டும். இந்தியாவில், எமர்ஜென்சி மூலம் பேச்சு உரிமைக்கு
தடை விதிக்கப்பட்டது. பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கக் கூடாது. ஜனநாயகம், பேச்சு
சுதந்திரத்தை நமக்கு அளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தை நான் குறை கூறவில்லை. அதே நேரத்தில்,
மற்ற நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியா விளங்க முடியும். உலகம் மாறுதலுக்கு உட்பட்டது. புதிய சவால்களை, புதிய
வாய்ப்புகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் நம் பெருமைகளை மட்டும்
பேசிக் கொண்டிராமல், மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை
என்ற, நம் பெருமையை இழந்து வருகிறோமோ என்ற அச்சம் உள்ளது. இந்தியாவில் மத அரசியல் மிகவும் மோசமான நிலையில்
உள்ளது. இந்த நிலையில், பேச்சு சுதந்திரம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்.
பேச்சு சுதந்திரம் என்பது வேறு, ஆட்சி என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில், நடுவண் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,
காங்கிரஸ் பாராளுமன்றஉறுப்பினர் சசி தரூர், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.