Show all

நானே வாதாடுகிறேன்! நியூசிலாந்து நேரலை துப்பாக்கிச்சூட்டு குற்றவாளியின் அலம்பல்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் இருக்கும் இரண்டு மசூதிகளில், முகநூலில் நேரலைப் பதிவு செய்து கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளி:

தனக்காக வாதாட இருந்த வழக்கறிஞரை நீக்கியுள்ளார். அவர், தானே வழக்கில் வாதாட உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

ப்ரென்டன் டர்ரன்ட் என்கின்ற 28 அகவை ஆஸ்திரேலியர்தான், நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணம் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை ஒரு முறை மட்டுமே அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தப்பட்டுள்ள நிலையில், 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 வெள்ளிக் கிழமையன்று (05.04.2019) மீண்டும் விசாரணைக்கு அணியப்படுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, தன் தரப்பு வாதத்தை டர்ரன்டே எடுத்து வைப்பார் எனப்படுகிறது. 

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு 4 அகவை குழந்தையின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. 

இந்தச் சம்பவம் குறித்து நியூசிலாந்து தலைமை அமைச்சர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், 'இந்த நாள் நியூசிலாந்து வரலாற்றில் மிகவும் மோசமான நாளாகும். இது தீவிரவாதத் தாக்குதல் எனத் தெளிவாக தெரிகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் 3 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதை ஒருங்கிணைந்து எதிர்ப்போம். தீவிரவாதத்துக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நியூசிலாந்து தற்போது உள்ள துப்பாக்கிகளுக்கு உரிமம் கொடுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், டர்ரன்ட் முதன்முதலாக அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்ட போது, அவர் சார்பில் அணியமான வழக்கறிஞர் ரிச்சர்டு பீட்டர்ஸ், 'அவரிடம் நான் பேசியதில் இருந்து ஒரு விசயத்தைத் தெளிவாக சொல்ல முடியும். அவர் மன ரீதியில் தெளிவாகவே யோசிக்கிறார். சில அடிப்படைவாதத்தைத் தவிர அவரிடம் நான் எந்தக் குறையையும் பார்க்கவில்லை. 

தற்போது, அவர் தன்னைத் தானே அறங்கூற்றுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம், தன் மனதில் உள்ள அடிப்படை வாதத்தை முன் வைக்க ஒரு களமாக அதைப் பயன்படுத்திக் கொள்வார் என்று சந்தேகப்படுகிறேன் என்று அச்சம் தெரிவித்தார். 

முன்னதாக டர்ரன்ட், இந்தத் தாக்குதல் குறித்து விட்டுச் சென்ற 74 பக்கம் கொண்ட குறிப்பில், 'ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வரும் மக்கள் தொகையை நான் குறைக்க விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெள்ளை இனத்தவரின் புதிய அடையாளமாக இருக்கிறார்' என்று தெரிவித்திருந்தார். 

ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவில் வெள்ளை ஆஸ்திரேலியன் கொள்கை என்ற ஒரு சட்ட விதி பின்பற்றப் பட்டு வந்தது. அதன்படி ஆஸ்திரேலியாவில் வெள்ளையர் அல்லாதவர்கள், தங்கவோ குடியுரிமை பெறவோ முடியாது. தங்கள் வளமையான நாட்டை வெள்ளையர் அல்லாத கருப்பு நிறத்தவர் குடியேறினால் வளமையைச் சிதைத்து விடுவார்கள் என்ற காரணம் வைக்கப் பட்டிருந்தது. 

புதிய மக்கள் புதிய சிந்தனையின் அடிப்படையில் அதுவெல்லாம் காற்றில் தூசு துப்பு போல பறக்க விடப்பட்டது. 

இந்த புதிய அணுகுமுறைகளால் காலங்காலமாக தங்கள் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சம் பறிபோவதாக கருதியிருக்;கும் ஒரு அணியினர் நாளுக்கு நாளுக்கு வளர்ந்த வண்ணமாய்தாம் இருந்திருக்கின்றனர் என்ற செய்தி இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகுதாம் உலகளாவி தெரிய வந்திருக்கிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உலகின் கடைசி குடியேற்றப் பகுதிகளாகும். அங்கு குடியேறிய வெள்ளையின மக்களுக்கு அது மாபெரும் புதையல் ஆகும். அவர்களுக்கு தங்களை சமத்திற்கு தள்ளிய, தற்போதைய உலகப்பார்வை செரிமானம் செய்து கொள்ள முடியாதிருக்கிறது.

இந்த அணி வளருமா வளராதா என்பதை அங்கு ஆட்சியலிருக்கும் அரசு, அதிகார அமைப்புகளின் சிந்தனைப் போக்கை ஒட்டியே அமையும். 

சிங்களவர்கள் தமிழர்களை கொன்று குவித்தது போல, உடமைகளைப் பறித்தது போல, அங்கு மற்றொரு இனத்திற்கு போரழிவு உருவாக்கவும் படலாம். இழுபறியாக இழுத்தும் கொண்டிருக்கலாம். இப்போதைக்கு புகையத் தொடங்கியிருக்கிறது ; பற்றி எரிவதும் அமைதியாவதும் ஆட்சியாளர்கள் கையில் இருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.