Show all

அனைவருக்கும், அனைத்து வகையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது! குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1,000

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் வினியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களையே சேரும். சென்னையில் மட்டும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரின் நேரடி கண்காணிப்பில் துறை ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இப்பணிக்கு பொறுப்பாவார்கள். இந்தப் பணியை திங்கட் கிழமை தொடங்கி பொங்கலுக்கு முன் முழுமையாக முடிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு மேலாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் உரிய காலக்கெடுவுக்குள் கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கும் தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் வங்கி மூலம் செலுத்தும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை அன்றாடம் தொகையாகப் பெற்று நியாயவிலைக் கடைகளுக்கு வழங்க வேண்டும். தொகையை முடிந்தவரை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. மிடுக்குஅட்;டை பதிவு செய்த பின் தான் பரிசு தொகுப்பு மற்றும் தொகை ரூ.1,000-த்தை வழங்க வேண்டும். மிடுக்குஅட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டை அல்லது பதிவு செய்யப்பட்ட செல்பேசிக்கு வரும் 'ஒருமுறை கடவுச்சொல்' அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 தொகையை வாங்கும் ஆர்வத்தில் அதிக எண்ணிக்கையில் குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு வருவதை தவிர்க்க ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும், கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் பொங்கல் பரிசை விரைந்து வழங்க ஏதுவாக நியாயவிலைக் கடைகளில் கூடுதல் பணியாளர்களை அமர்த்திட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஏற்பாடு செய்யவேண்டும்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதையும், நெரிசல் ஏற்படும் வகையில் குடும்ப அட்டைதாரர்கள் கடைகளில் கூடவேண்டாம் என்றும், அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்பதையும் உள்ளூர் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் அறிவிப்பு செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாட்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தவறாமல் செயல்பட வேண்டும். மாலை 5.30 மணியளவில் வருகை தந்து வரிசையில் காத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அடையாளச்சீட்டு வழங்கி வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக அட்டவணையை காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, நியாயவிலை கடைகளுக்கு உரிய காவலர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொகை வினியோகம் குறித்த புகார்களைப் பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். புகார்களை நடமாடும் கண்காணிப்பு குழுவிடம் தெரிவித்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 தொகையும் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதையொட்டி வருகிற வெள்ளிக்கிழமையும் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. 

இவ்வாறு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு எப்படி என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சோ.மதுமதி அறிவுரை வழங்கி உள்ளார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.