Show all

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப முன்னாள் முதல் மந்திரி மதுகோடா மனு.

நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடா டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜிண்டால் குழு நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நவீன் ஜிண்டால், தாசரி நாராயண் ராவ் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கூடுதல் குற்றவாளியாக சேர்க்க வலியுறுத்தி ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பிரதமரும் அப்போதைய நிலக்கரித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரியும் என்றும், அவரைக் கூடுதல் குற்றவாளியாக சேர்ப்பதுடன், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதிகாரிகள் ஆனந்த் ஸ்வரூப், ஜெய்சங்கர் திவாரி ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மன்மோகன்சிங்கை விசாரிக்கக்கோரும் மதுகோடாவின் மனுவிற்கு முன்னாள் நிலக்கரித்துறை மந்திரி தாசரி நாராயணராவ் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுகோடாவின் மனு கடந்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜிண்டால் நிறுவனத்திற்கு சுரங்கம் ஒதுக்கியதில் மன்மோகன் சிங் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், அவருக்கு சம்மன் அனுப்ப முகாந்திரம் இல்லை என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா வாதாடினார்.

இதையடுத்து, மதுகோடாவின் மனு மீதான தீர்ப்பு அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மதுகோடா தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.