Show all

பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு.

மலேரியா, யானைக்கால் நோய்களில் இருந்து பாதுகாக்க புது மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2015 மருத்துவ நோபல் பரிசு தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டிய 10 முக்கியத் தகவல்கள்:

அயர்லாந்தை சேர்ந்தவர் வில்லியம் கேம்பெல். ஜப்பானை சேர்ந்தவர் சடோஷி ஓமுரா. சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி யூயூ டு. இவர்கள் 3 பேரும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களுக்கு புது மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

கேம்பெல் மற்றும் ஓமுரா ஆகியோர் உருளை புழுக்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்க புது மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளனர். மலேரியாவில் இருந்து பாதுகாக்கும் புது மருந்தை யூயூ டு கண்டறிந்துள்ளார்.

யானைக்கால் மற்றும் பார்வை குறைபாட்டை தடுக்க கேம்பெல் மற்றும் ஓமுரா ஆகியோர் அவர்மெக்டின் என்ற புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் புதிதாக இந்நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

யூயூ டு என்ற பெண் விஞ்ஞானி அர்டமைசினின் என்ற புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்து மலேரியா காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது.

சீனாவின் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தின் அடிப்படையில் மலேரியாவில் இருந்து பாதுகாக்கும் அர்டமைசினின் என்ற புதிய மருந்தை யூயூ டு கண்டுபிடித்துள்ளார்.

இந்த 2 கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்தை பாதுகாக்கவும், சக்திமிகுந்ததாக இருக்கவும் பெரும்பங்காற்றி வருகின்றன. மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் இந்த மருந்துகள் உதவி வருகின்றன.

டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், இம்மூவருக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்படும்.

கேம்பெல் மற்றும் ஓமுரா ஆகியோர் பரிசு தொகையில் 50 சதவீதத்தை பகிர்ந்து கொள்வார்கள். மீதமுள்ள 50 சதவீத பரிசு தொகை யூயூ டுவுக்கு செல்லும் என்று சுவீடனில் உள்ள நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.