Show all

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு ஈடுபட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் ஆகியோரை நேற்று தலைமைச் செயலகத்தில், இந்திய செல்லுலார் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொகிந்த்ரோ, பணிக்குழுவின் துணைத் தலைவர் ஜோஷ் பல்கர் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

அதன் பின்னர் பங்கஜ் மொகிந்த்ரோ கூறுகையில், நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது.

இதற்கு தமிழக அரசு எதையெல்லாம் செய்ய முடியும் என்பதையும், அதை ஒரு தொகுப்பாக அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இது குறித்து தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் நோக்கியா நிறுவனத்தை தற்போது கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை.

இதில் மத்திய அரசும் தமிழக அரசும் கூறும் விஷயங்களை முன்வைத்து, அதன் பின்னரே நோக்கியா நிறுவனத்தை பேச்சுக்கு அழைக்க விரும்புகிறோம். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

நோக்கியாவை மீண்டும் செயல்படச் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை தொடக்கியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

செல்போன் மற்றும் அதன் உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அதிவிரைவு பணிக் குழுவை மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைத்துள்ளது.

இந்திய செல்லுலார் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொகிந்த்ரோ இந்த பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நோக்கியா சோனி, மைக்ரோசாப்ட், மைக்ரோமேக்ஸ் உள்பட பல்வேறு செல்போன் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.