இன்னும் இரண்டு வருடங்களில் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் 80,000 பதவிகள் காலியாகின்றன. அதாவது 80,000 ஊழியர்கள், அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே வங்கிப் பணிகளுக்கு ஆட்கள் பெருமளவில் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகளில் அதிகாரிகள் அளவிலான உயர் பதவிகள் இவை. நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் கிட்டத்தட்ட 78,800 பேர் ஓய்வு பெறுகின்றனராம். இதில் நடப்பு நிதியாண்டில் 39,756 பேர் ஓய்வு பெறுகின்றனர். இவர்களில் அதிகாரிகள்தான் அதிகம். அதாவது 19,065 பேர். மற்ற 14,669 பேர் ஊழியர்கள் ஆவர். இதுதவிர இந்த நிதியாண்டில் 6022 துணை நிலை ஊழியர்களும் ஓய்வு பெறவுள்ளனர். அடுத்த நிதியாண்டில் 39,000 பேர் ஓய்வு பெறுகிறார்கள். இதில் 18,506 பேர் அதிகாரிகள். 14,458 பேர் ஊழியர்கள். இந்தியாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட 22 அரசு வங்கிகள் உள்ளன. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ஐந்து துணை வங்கிகளும் உள்ளன. பெருமளவில் பணியாளர்கள் ஓய்வு பெறுவதால் வேலைக்கு ஆள் எடுக்கும் விதிமுறையில் சில தளர்வுகளுக்கு அரசு திட்டமிட்டு வருகிறதாம். குறிப்பாக நடுத்தர பணி அளவில் இந்த தளர்வு அமல்படுத்தப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கு தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.