Show all

“ வாணளவு நீண்ட தமிழனின் வாழ்வியல் பாதை ” ஒரு கண்ணோட்டம் (1931-2015)

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84. விஞ்ஞான சிகரம் கலாம் கடந்து வந்த வாழ்வியல் பாதை..,

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தார் அப்துல் கலாம்.

இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய அவர், ஏழ்மை காரணமாக, இளம்வயதிலே நாளிதழ் போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த அப்துல் கலாம், திருச்சியில் உள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பின்னர் 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியியல் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் படித்த அவர், அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஒ.,வில் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தது, அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு, இவருக்கு 1981ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் இரண்டு அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர் என பன்முகத் தன்மை கொண்டவராக கலாம் விளங்கினார்.

கடந்த 2002ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார்.

மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட 14 விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

விஞ்ஞானம், கல்வி மட்டும் எழுத்துலகிலும் அவர் சாதனை படைத்துள்ளார். அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை என்னும் நூல்களையும் அவர் எழுதியுள்ளார். இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர், “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.