Show all

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு நடுவண் அரசு உதவியது என்ன! பதிலளிக்க உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமநாதபுரத்தைச் சேர்ந்த திரு முருகன் உயர் அறங்கூற்றுமன்றக் கிளையில் பதிகை செய்த மனு: புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசியப் பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும், புயலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.25 லட் சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக கடலோர மாவட்டங்களில் நடுவண் அரசின் தேசிய புயல் பாதிப்புக் குறைப்புத் திட்டத்தின் கீழ் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மின் இணைப்பைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முப்படையினர், துணை ராணுவப் படை வீரர்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு அறங்கூற்றுவர்கள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஜா புயல் சேதம் பாதித்த பகுதி களைப் புனரமைக்க மாநில அரசு என்னென்ன உதவிகள் கோரியுள்ளது? அந்த கோரிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நடுவண் அரசு அறிக்கை பதிகை செய்ய வேண்டும் என அறங்கூற்றுவர்கள் உத்தர விட்டனர்.

மேலும் தஞ்சை, நாகை, புதுக் கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உணவு, குடிநீர், உடை, தங்குமிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைச் செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக 4 மாவட்ட ஆட்சியர்கள் நாளை மனு பதிகை செய்ய வேண்டும் என அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,978.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.