Show all

சீமான் பேரழைப்பு! தை 5,6 மற்றும் தைப்பூச நாளான தை7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து 'வேல்' நிறுவி முருகனை வழிபடுவோம்

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தை 5,6 மற்றும் தைப்பூச நாளான தை7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து 'வேல்' நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரழைப்பு விடுத்துள்ளார்.

எங்களுடைய இறையோனின் தேடல்: நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது. அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல், மொழி, அதன்வழி வந்த இலக்கியம் என எல்லாம் பெற்று இந்த புவி மாந்தரில் கோலோச்சிய இனம் இந்தத் தமிழ் இனம். அந்த இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அந்த இறையோனே தமிழர் இறை முருகன் ஆவார். தமிழர் இறை முருகன் தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டற கலந்ததற்கான சான்று. அப்படிப்பட்ட தமிழர் இறை முருகனை எதிர்வரும் தை மாதம் 7 ஆம் நாள் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள், தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் தமிழர் இறை முருகனை வணங்கி, முருகனின் பெரும்புகழைப் போற்றி கொண்டாட இருக்கிறோம், 

அந்தப் பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான 'வேல்' ஐ நிறுவி வழிபட இருக்கிறோம், வேல் என்னும் சொல் 'வெல்' என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள். எனவே வேல் என்றால் வெற்றி. அந்த வேல் எடுத்து வரலாற்று தொன்மை மிக்க தமிழ் தேசிய இனத்தின் பண்பாடு மற்றும் வழிபாட்டு விழுமியங்களை மீட்டெடுப்போம். தைப்பூச வழிபாடு ஆகையால் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5, 6 மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து 'வேல்' நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்தி சிற்றுண்டி உணவுகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்து பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். வேல்வழிபாட்டிற்கு என்று வீரத்தமிழர் முன்னணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, தங்களின் ஊர்களில் முருகன் குடில் அமைத்து அதில் வேலினை வழிபட வேண்டுகிறேன். தமிழரின் விடுதலை, தமிழர் பண்பாட்டு விடுதலையில் இருக்கிறது. தமிழர் பண்பாட்டின் விடுதலை என்பது கலப்படமற்ற தமிழர் வழிபாட்டில் இருக்கிறது. அவற்றை வேல்வழிபாட்டின் மூலம் மீட்டெடுப்போம். என்று தெரிவித்துள்ளார்.

கடவுள், இறை, தெய்வம் மூன்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் குறித்து நம் பழந்தமிழர்கள் சிந்தித்து தொகுத்த பொருள் பொதிந்த மூன்று தலைப்புகள். 

இறை என்பது நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும்  ஐந்திர ஆற்றல்களை மட்டுமே குறிக்கும். 

கடவுள் என்பது விசும்பு ஆற்றலை மட்டுமே குறிக்கும். விசும்பு என்பது நமக்கு உள்ளும், நம்மைப் போன்ற அனைத்து பொருட்களுக்குள்ளும், அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும். 

அதே போல நமக்கு வெளியிலும், நம்மைப் போன்ற அனைத்து பொருட்களுக்குவெளியிலும், அனைத்து உயிர்களுக்குவெளியிலும் இருக்கும் அற்றல் என்பது வெளிப்படையாக எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் அல்லவா! அந்த விசும்பு ஆற்றலை மட்டுந்தாம் தமிழர் கடவுள் என்றனர்.

தெய்வம் என்பது: இந்த இறை, மற்றும் கடவுள் ஆற்றல் மற்றவற்றுள் மாற்று அடையாளப் படுத்தி வாழிபாடு செய்வதற்கும், வணங்குவதற்கும், போற்றிக் கொள்வதற்குமான அடையாளங்கள்.

கடவுளுக்கான தெய்வ அடையாளம் சேயோன். நம்முடைய சேயோன் என்கிற குழந்தைதானே நமக்கு உள்ளிருந்தது ; நமக்கு வெளியிலும் இருப்பது. நமது கடவுள் நமது குழந்தைதாம். இதுதாம் நம் பழந்தமிழர் கண்டுபிடிப்பு. இதைத்தாம் திருவள்ளுவர்:

தக்கார் தகவிலார் என்பது அவரவர் 

எச்சத்தாற் காணப் படும். என்கிறார்.

அந்த விசும்பு ஆற்றலுக்கான தெய்வத்தை தமிழர் பொது வெளியில் சேயோன் வழிபாடாக காலம் காலமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையாக தமிழியலை முன்னிறுத்தி அரசியலை வென்றெடுக்க முயலும் சீமான் சேயோன் என்கிற முருகன் வழிபாட்டை தூக்கிப் பிடிக்கிறார். பாராட்டுவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.