கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பூவனூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்னை, எழும்பூரிலிருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலின் கடைசி 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 நபர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பூவனூரில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் நேரில் ஆய்வு செய்தார். மங்களூர் விரைவு ரயில் விபத்து பற்றி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்கு நடந்து சென்று மிட்டல் நேரில் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்து நடந்து சீர்செய்யப்பட்ட ரயில் பாதை வழியே இரவு 8 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும் என்றார். மேலும், பழுதான தண்டவாளத்தை 500 மீட்டர் தூரத்திற்கு சீரமைக்கும் பணி விரைந்து நடந்து வருவதாகவும், இரவு 8 மணிக்கும் தண்டவாளம் சீர் செய்யப்பட்டுவிடும் என்றும் அதிகாரி மிட்டல் நம்பிக்கை தெரிவித்தார். விபத்து குறித்து கூறுகையில், ரயில் விபத்து நடைபெற்ற பூவனூரில் முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ளதாகவும், விபத்து குறித்து ரயில்வே குழு ஒன்று விரைவில் விசாரணையை நடத்தும் என்று கூறினார். விவரமான விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அந்த குழு அளிக்கும். அதன்பிறகே விபத்து எப்படி நடந்தது என்பது தெரிய வரும் என்று கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.